Friends Tamil Chat

வியாழன், 27 பிப்ரவரி, 2014

27th Feb 2014 - மகா ஞானமுள்ள சிலந்தி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 27-ம் தேதி - வியாழக் கிழமை
மகா ஞானமுள்ள சிலந்தி
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு... தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.- (நீதிமொழிகள் 30:24,28).

.
எட்டுக்கால் பூச்சி என்று அழைக்கும் சிலந்தியை நாமெல்லாரும் பார்த்திருக்கின்றோம். இது தனக்கென்று ஒரு வலையைப் பின்னும். இந்த வலையைக் கட்ட தேவையான நூலிழைகளை உண்டுபண்ணும் சுரப்பிகள் அதன் அடி வயிற்றில் இருக்கின்றன. மேலும் தன் வலையில் சிக்கிய பூச்சிகளையே உணவாக உண்ணுகின்றது. ஆனால் ஒரு அதிசயம் பாருங்கள், சிலந்தி தன்னுடைய வலையில் ஒருபோதும் சிக்கி கொள்வதில்லை.
.
இந்த சிறிய எட்டுக்கால் பூச்சிக்குள் இவ்வளவு விஷயமா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் நேர்த்தியாய் பொறுமையாய் பின்னும் இந்த அழகிய வலையை பின்னி, அவைகள் யாரும் செல்ல முடியாத இராஜ அரண்மனைகளிலும் போய் குடியிருக்கும்.
.
ஒரு பெரிய அரண்மனை இப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு சிலந்தி அந்த பெரிய அரண்மனையின் முன் நின்று, 'நான் இதற்குள் எப்படி செல்ல முடியும்' என்று நினைத்துக் கொண்டு அங்கேயே நிற்பதில்லை, அல்லது தன்னை ஒரு வில்லாக நினைத்து, அந்த அரண்மனைக்குள் பாய்ந்து செல்வதுமில்லை.
.
மாறாக, தன் கைகளினால், வலையை பின்னி, மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது. ஒரு வேளை அது நினைத்திருந்தால், இத்தனை பெரிய அரண்மனைக்குள் நான் எப்படி போவது என்று நினைத்திருந்தால் அது அப்படியே இருக்க வேண்டியதுதான். ஆனால் அது நம்பிக்கையை இழக்காமல், மெதுவாக தன் வலையை கொஞ்ச கொஞ்சமாக கட்டி, மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கிறது. முடிவில் அது அரண்மனையின் உள்ளே சென்று, தன் வீட்டை கட்டி குடியிருக்க ஆரம்பிக்கிறது.
.
பிரியமானவர்களே, ஒரு வேளை தேவன் நமக்கு ஒரு தரிசனத்தை கொடுத்திருக்கலாம், அல்லது, நம் மேல் வைக்கப்பட்டிருக்கிற பொறுப்பு மிகப்பெரியதாக இருக்கலாம், நாம் 'ஐயோ இதை நான் எப்படி செய்து முடிப்பேன்' என்று நினைத்து அப்படியே உட்கார்ந்திருந்தால், ஒன்றுமே செய்து முடிக்க முடியாமல் போய் விடும். ஆனால் கர்த்தர் மேல் நம்பிக்கையோடு, தேவன் எனக்கு உதவி செய்வார் என்று விசுவாசத்தோடு மெதுவாக நம் செயல்பட ஆரம்பிக்கும்போது, நிச்சயமாகவே அதை செய்து முடிக்க முடியும். 'நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது' என்று வேத வசனம் கூறுகிறதல்லவா?
.
இந்த சிலந்திப்பூச்சி, ஐயோ மனிதர்கள் தங்கள் கால்களால் என்னை மிதித்துப் போடுவார்களே என்று பயப்படுவதில்லை. எத்தனை பெரிய மனிதர்கள் வந்தாலும், பயமே இல்லாமல், தன் கூட்டை கலைத்து விடுவார்கள் என்ற பயமும் இல்லாமல், அது தன் காரியத்தில் கண்ணாக இருந்து வலையை கட்டி முடிக்கிறது.
.
நம்மிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பில் சிறிய காரியத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் கர்த்தர் நம்மை அநேகத்தின் பேரில் அதிகாரியாக வைப்பது நிச்சயம்! 'ஐயோ மற்றவர்கள் என்ன சொல்வார்கள், ஒருவேளை என் தரிசனத்தில் குறுக்கே வந்த நிறுத்தி விடுவார்களோ' என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கர்த்தர் உங்களுக்கு அந்த தரிசனத்தை கொடுத்திருப்பாரென்றால், நீங்கள் அதை செய்து முடிக்க கவனமாக இருந்தால், அந்த தரிசனம் நிறைவேறி முடியும் வரை அவர் உங்களுடனே கூட இருப்பார். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை தட்டிக் கழிக்காமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படாமல், கர்த்தருடைய உதவியுடன் உங்கள் மேல் வைக்கப்பட்டுள்ள பொறுப்பை கவனமாய் செய்து முடியுங்கள்.
.
எப்படியாவது வேலை முடிய வேண்டும் என்று அவசரப்பட்டு, குறுக்கு வழிகளில் செல்லாமல், உலக காரியங்களின் மேலும், உலக மக்களின் மேலும் நம் நம்பிக்கையை வைக்காமல், கர்த்தர் மேல் மாத்திரம் நம்பிக்கை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக,மெதுவாக முன்னேறினாலும், கர்த்தர் அதை வாய்க்க செய்வார். சிலந்தியைப் போல இராஜ அரண்மனைகளில் குடியிருக்க செய்வார்.
.
மகா ஞானமுள்ளவைகளில் ஒன்றாகிய சிலந்தியிடமிருந்து இந்த படிப்பை நாம் கற்றுக் கொண்டு, கர்த்தர் நம்மை நம்பி கொடுத்த பொறுப்பை மகா ஞானமாய், சரியாக செய்து முடிப்போமா? கணக்கு கேட்கும் கர்த்தர் சீக்கிரம் வரப்போகிறார். ஆயத்தமாவோமா? ஆமென் அல்லேலூயா!

.


எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று

என்னைப் பிரிக்காது காத்துக் கொண்டார்

என்னை நம்பி அவர் தந்தப் பொறுப்பதனை

அவர் வரும் வரை காத்துக்கொள்வேன்

.
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்

இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்

இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்

எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மகா ஞானமுள்ளது என்று நாங்கள் துரும்பாக நினைக்கிற சிலந்திப்பூச்சியைக் குறித்து வேதத்தில் எழுதப்பட்டிருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். அதனிடத்திலிருந்து நாங்கள் கற்றுக் கொண்டு, நீர் கொடுத்த தரிசனத்தை எந்த பயமுமில்லாமல், செய்து முடிக்க தேவன் கிருபை செய்யப்போவதற்காக உமக்கு நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளிலும் நாங்கள் பொறுமையாக செய்து முடிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி உமது சித்தத்தின்படி உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் ஐயா. தயவாய் செவி சாய்த்து விண்ணப்பங்களை கேட்பீராக. பதிலை தருவீராக.

.
சகோதரி சித்ரா தேவிக்காக உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, தன்னுடைய குடும்பத்தில் தான் மாத்திரமே புறமதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டிருப்பதால், முழுக்குடும்பமும் இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம். அவர்களுக்கு ஒரு இரட்சிக்கப்பட்ட மகனை துணைவராக கிடைக்க ஜெபிக்கிறோம். அதற்காக கிருபைகளை நீரே சகோதரிக்கு கொடுப்பீராக. அவர்களுடைய இருதய வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் யோகநாதன் மகள் கேசியாகவிற்காக காலேஜில் ரேகிங் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் ஜெபித்த ஜெபத்தைக் கேட்டு, காலேஜில் ரேகிங் நிறுத்தப்படும் என்ற அறிவிற்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய சகோதரியின் மகளுடைய இரத்தத்தில் குறைவு காணப்படுகிறபடியால், தேவன் தாமே தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரி மோனிக்கா புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள், காலேஜில் படிக்கும்போது ஞானஸ்நானமும் பெற்று கர்த்தருக்குள் வளர்ந்து வருகிற இந்த சகோதரியின் பெற்றோர் இன்னும் இரட்சிக்கப்படாததால், அவர்கள் சகோதரிக்கு புறமதத்திலிருந்து மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து விட்டபடியால், என்ன செய்வது என்று தவிக்கிற சகோதரிக்கு ஆறுதலை தாரும். ஊம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே. அந்த சகோதரனையும் இரட்சிப்பீராக. ஜூன் மாதம் நடக்க இருக்கிற திருமணத்திற்குள்ளாக அந்த மகனும் இரட்சிக்கப்படவும், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை கட்டப்படவும் தேவன் கிருபை செய்வீராக.
.
சகோதரி திவ்யா பாலா அவர்கள் புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டவர்கள், அவர்களின் தோழி சங்கீதாவிற்கு 31 வயதாகியும் இன்னும் திருமணம் அமையாததால், தேவன் தாமே இரங்கி ஏற்றத்துணையை அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். மனம் நொந்து காணப்படுகிற அவர்களுக்கு தேவன் தாமே ஒரு நல்ல இரட்சிக்கப்பட்ட மகனை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய நண்பர் சசிகுமார் அவர்களுக்கு ஒன்றறை வருடங்களாக எந்த சரியான வேலையும் இல்லாமல் இருக்கிறபடியால்,தேவன் தாமே அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலையைக் கொடுத்து ஆசீர்வதிக்கவும், அவருடைய ஆத்தும இரட்சிப்பிற்காகவும், கர்;த்தரே தேவன் என்பதை அவர் அறிந்துக் கொள்ளவும் ஜெபிக்கிறோம்.
.

சகோதரி பால்இரத்தினம் அவர்களின் தாயார் வயிற்றில் வீக்கம் கண்டு, உதிரப் போக்கும் அதிகமாக இருப்பதால், தேவன் தாமே அவர்களை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். நல்ல சுகத்தை கட்டளையிடுவீராக. உதிரப் போக்கு நிற்கவும், வயிற்று வீக்கம் குறையவும் ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.