Friends Tamil Chat

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

25th Feb 2014 - இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 1

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி – செவ்வாய்க்கிழமை
இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 1
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-42).

.
இயேசுகிறிஸ்து செய்த அதிசயமான அற்புதங்களில் குஷ்டரோகியை சொஸ்தமாக்கியது ஒன்றாகும். நாம் சொல்லும்போது இயேசுகிறிஸ்து குஷ்டரோகியை சுத்தமாக்கினார் என்று வெகு எளிதாக சொல்லி விடுகிறோம், பாடி விடுகிறோம். ஆனால் குஷ்டரோகம் என்ற வியாதியை குறித்து நம்மில் அநேகர் அதிகமாக அறிந்ததில்லை. என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் நாங்கள் மாத்திரமே கிறிஸ்தவர்கள். எங்கள் வீட்டுக்கு குஷ்டரோகம் பிடித்து, சுகமான ஒரு சகோதரன் வருவார். அவருடைய வீட்டிலேயே அவரை உள்ளே சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கள் தெருவில் ஒருவரும் அவரை வீட்டிற்கு அழைக்க மாட்டார்கள், சேர்த்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் குடிக்கும் டம்ளரிலே காப்பி குடிப்பார். நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று அவர் கூறுவார். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவராக அவர் வாழ்ந்தார். இந்நாட்களிலும் அந்த நோய் அத்தனை பயங்கரமானது, வேதனைக்குரியது.

.

வேதத்தில் நாம் இரண்டு இடங்களில் குஷ்டரோகிகள் சுகமானதை குறித்து வாசிக்கிறோம். முதலாவது மாற்கு 1:40-45 வரை காணப்படுகிற குஷ்டரோகியும், பின்னர் லூக்கா 17:12-19 வரையுள்ள வசனங்களில் பத்து குஷ்டரோகிகள் சுகமானதை குறித்தும் வாசிக்கிறோம். இந்த குஷ்டரோகி சுகமானதை குறித்து வாசிக்கும்போது, கிறிஸ்துவின் அன்பும், அவருடைய மனதுருக்கமும், அவருடைய தொடுதலினால் உண்டாகும் மாற்றத்தையும் காண்கிறோம்.

.

குஷ்டரோகம் என்பது வேதாகம காலங்களில் சுகமாக்க முடியாத ஒரு வியாதியாகும். அதுவும் மறற்வர்களை மிகவும் தொற்றி கொள்ளக்கூடிய வியாதியாகும். இந்நாட்களில் அதற்கு மருந்து கண்டுபிடித்ததால் அதை சரிசெய்ய முடியும். வேதாகம காலங்களில் தொழுநோயை போல மோசமான வியாதி வேறு எதுவும் இருந்ததில்லை. அது முழு சரீரத்தையும் ஆட்கொண்டு, மனிதனை செயலிழக்க செய்யும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உண்டானால் பெரிய பெரிய சீழ் நிறைந்த கொப்புளங்கள் உண்டாகி முகம் விகாரமாக மாறி, ஒரு சிங்கத்தை போல தோற்றமளிக்கும். இந்த வியாதி ஒன்பது வருடங்கள் ஒரு மனிதனை சீரழித்து கடைசியில் அவன் உயிரையே குடித்து விடும். அவனது புண்ணிலிருந்து வரும் சீழ் கட்டப்படாமல், அது சரியாக பராமரிக்கப்படாததால், அதனுள் கிருமிகள் ஏற்பட்டு, அதனால், அவன் உயிரே எடுத்து விடும்.

.

வேதாகம காலங்களில் ஒரு முறை ஒரு மனிதனுக்கு தொழு நோய் இருக்கிறதென்று கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த கிராமத்திலிருந்தே அப்படிப்பட்டவர்களுக்கென்று குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்று விட வேண்டும். தன்னுடைய உறவினர், மனைவி, பிள்ளைகள் யாரையும் அவன் தொட முடியாது. வெகு தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும். ஒரு சுத்தமான மனிதனுக்கும் அவனுக்கும் இடையில் குறைந்தது 50 அடியாவது தூரம் இருக்க வேண்டும். அவன் பேசும்போது ஒரு துணியை அவன் வாயில் வைத்தவனாக பேச வேண்டும். யாராவது அருகில் வரும்போது தீட்டு, தீட்டு என்று சத்தமிட வேண்டும். அவனது துணியை கிழித்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்றவர்கள் அவன் தொழு நோயாளி என்று அறிந்து கொள்வார்கள். இந்த நோய் அவனது நரம்பு மண்டலத்தை தொடுவதால், அவனுக்கு எந்த உணர்ச்சியும் தெரியாது. சூடாக தொட்டாலோ, நெருப்பை தொட்டாலோ அவனுக்கு உணர்ச்சி இல்லாததால் அவனுக்கு காயம் உண்டான பின்னாலேதான் அவனுக்கு தெரியும் நெருப்பை தொட்டிருக்கிறோம் என்று.

.

இப்படிப்பட்ட தொழுநோய் பிடித்த மனிதன் இயேசுவை நோக்கி வருகிறான். இயேசுவை சுற்றி எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருந்தாலும், அவன் தைரியமாக கர்த்தரை நோக்கி முன்னேறுகிறான். தான் சுத்தமாக வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. கர்த்தரால் மாத்திரமே சுத்தமாக்க முடியும் என்ற அசைக்க முடியாத விசுவாசமும் அவனுக்கு இருந்தது. நினைத்து பாருங்கள், அப்படிப்பட்ட வியாதியுடைய ஒருவன் கூட்டத்தில் நுழைந்து தீட்டு தீட்டு என்று கத்தி கொண்டு வரும்போது, அச்சத்தில் மக்கள் அலறி அடித்து விலகியிருப்பார்கள். எங்களுக்கு அந்த நோய் வந்து விட போகிறது என்று பயந்து ஓடியிருப்பார்கள். அந்த தொழுநோயாளி நினைத்திருப்பான், எனக்கு ஒன்று சுகம் வேண்டும், அல்லது இந்த மக்களே என்னை கல் எறிந்து கொன்று போடட்டும் என்று!

.

ஆகவே அதை குறித்தெல்லாம் கவலைப்படாமல், அந்த மனிதன் கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். பாருங்கள், அவனுக்கு தெரியும் கர்த்தரால் அவனை சுத்தமாக்க முடியும் என்று, ஆனால் அவருக்கு சித்தமுண்டா என்பதே அவனுடைய கேள்வியாயிருந்தது. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். குஷ்டரோகியை தொடுவது சட்டப்படி தவறு என்றாலும், இயேசு அவனை தொட்டார். அந்த கூட்டம் எல்லாம் பயந்து அவன் நம்மை தொட்டு விடப்போகிறான் என்று ஓடும்போது, மேசியாவாகிய இயேசு அவனை தொட்டார். அவரை எந்த நோயும் தொட முடியாது, அவருக்குள்ளிருந்த பரிசுத்தம், சுத்தம் அவனது நோயை குணமாக்கியது. அல்லேலூயா! (இந்த கட்டுரை நாளையும் தொடரும்)

.

செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது

பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது

அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது

அவர் தொட குஷ்டரோகி சொஸ்தமாயினான்

..

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

என் உள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்

துன்பத்தில் என்தன் துணை அவரே

என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீரே எங்கள் யெகோவா ராப்பாவாக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். அந்த நாளில் இயேசுகிறிஸ்து தம்மண்டை வந்த குஷ்டரோகியை முகம் சுளிக்காமல், மனதுருக்கத்தோடு தொட்டு சுகப்படுத்திய அற்புதத்தை நினைத்து உம்மை துதிக்கிறோம் தகப்பனே. உம்மண்டை வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர், பாவ தொழுநோயால் வாடும் ஒவ்வொருவரையும் கூட தொட்டு சுகப்படுத்துவீராக. பாவ நோயிலிருந்து விடுதலை தருவீராக. மனிதனால் சுகப்படுத்த முடியாத எந்த வியாதியை சுகமாக்க வல்லவராகிய நீர் இந்த வேளையில் வியாதியினால் பாடுகள் பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு உம்மண்டை வரும்போது அவர்களை தொட்டு குணமாக்கும்படி ஜெபிக்கிறோம். சுகத்தை தருவீராக. உமக்கு சாட்சியாக மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பு நேச தகப்பனே, இந்த உலகத்தில் அநேகர் பாடுகளின் வழியாக கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் தகப்பனே, உலகத்தில் உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்ற இயேசுகிறிஸ்து எங்களோடு இருப்பதால், எந்த பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் அதை திடமனதோடு தாங்கி, எங்கள் அப்பாவின் பாதத்தில் வைத்து, ஜெபத்திற்கு பதிலை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும்.

.

சகோதரன் மார்க் ஜெபக்குமார் அவர்கள் புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டு, அளவற்ற வாஞ்சையோடு நேசிப்பதால், தேவன் தாமே அந்த சகோதரனை ஆசீர்வதிப்பீராக. அவருடைய மனைவி எந்த சபைக்கும் செல்லாமல், கடவுளைப்பற்றிய எண்ணமே இல்லாமல் இருப்பதால், அந்த சகோதரி இரட்சிக்கப்பட கிருபை செய்யும். இரண்டரை மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த சகோதரியை இரட்சித்து, வயிற்றில் வளருகிற கருவையும் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரன் மாற்றலாய் வந்திருக்கிற ஒஸ்மனாபாதில் எந்த சபையும் இல்லாதபடியால், தேவன் தாமே அவருக்கு ஒரு நல்ல சபையை காட்டிக் கொடுக்கும்படி ஜெபிக்கிறோம்.
.
சகோதரி பிரபா சுமதி அவர்கள் எழுதியிருக்கி டிஎன்பிஎஸ்ஸி பரிட்சையில் நல்ல முடிவு வந்து, சகோதரிக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும். சகோதரியின் வீட்டில் இருக்கிற எல்லா பிரச்சனைகளும் மாறி, கர்த்தருடைய ஆசீர்வாதம் வீட்டில் தங்கியிருக்கும்படி கிருபை செய்யும். அவர்களுடைய தோழியின் தங்கைக்கு ஆயத்தம் செய்கிற திருமண காரியத்தில் தேவ சித்தம் நிறைவேற ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் கெர்சோன் பொன்சிங் அவர்களின் மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருப்பதாலும், டாக்டர்கள் குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியில்லை என்று சொல்லியிருப்பதாலும், உம்மையே நோக்கி பார்க்கிறோம் தகப்பனே, கருவில் இருக்கும்போதே உம்முடைய கண்கள் எங்களை கண்டது என்று வேதத்தில் வாசிக்கிறோமே, இந்த கருவையும் உம்முடைய கண்கள் கண்டு, இருக்கிற எல்லா பிரச்சனைகளையும் மாற்றும்படியாக ஜெபிக்கிறோம். குழந்தைக்கு சரியானபடி மூளை வளர்ச்சி அடையும்படி கிருபை செய்தருளும். உமக்கு சாட்சியாக விளங்கும்படி தேவன் பெரிய காரியத்தை இந்த குடும்பத்தில் செய்தருளும்.
.
பெயர் சொல்ல விரும்பாத சகோதரி, தன் கணவருக்கு செமன் டெஸ்ட் செய்து, நெகடிவ் ஆக ரிசல்ட் வந்திருப்பதால், மிகவும் சோர்ந்து போயிருக்கிற அவர்களுக்கு தேவன் தாமே ஒரு அதிசயத்தை செய்வீராக. அவர்கள் சில நாட்களுக்குள் செய்ய இருக்கிற டெஸ்ட்டில் எல்லாம் நார்மலாக மாற கிருபை செய்யும். குழந்தை பாக்கியத்தை கொடுத்து ஆசீர்வதித்தருளும்.
.
சகோதரி செல்வநாயகி அவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகி, அவர்களுக்கு பத்து மாதத்தில் ஒரு குழந்தை இருந்தாலும், கணவன் தன் அம்மாவின் பேச்சைக் கேட்டு, சகோதரியை துன்பப்படுத்துவதால், தேவன் தாமே அவரோடு இடைபடும்படி ஜெபிக்கிறோம். சகோதரியை நேசிக்கவும், சமாதானமாய் குடும்பத்தை நடத்தவும் தேவன் கிருபை செய்வீராக.
.

சகோதரி கமலா சார்லஸ் அவர்களின் மகள் சார்லட் அமிர்தா அவர்கள் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியை ஆக வேண்டும் என்று விரும்பி, அதற்காக அதிக படிப்பையும் படித்திருப்பதால், வரும் மார்ச் மாதம் 14ம் தேதி நடக்க இருக்கும் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்று அங்கு வேலையில் சேர தேவன் தாமே வழிகளை திறந்து கொடுக்கும்படி ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.