Friends Tamil Chat

வெள்ளி, 8 மே, 2015

08 மே 2015 - விசுவாச வார்த்தை - பாகம் இரண்டு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மே மாதம் 08-ம் தேதி - வெள்ளிக்கிழமை
விசுவாச வார்த்தை - பாகம் இரண்டு
**************

அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான். - (எண்ணாகமம் 13:30).

.

நேற்றைய தினத்தில் கானான் தேசத்தை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் பத்து பேர் அவிசுவாச வார்த்தைகளை பேசினதினால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த நாளில் காண்போம்.

.

ஆனால் அந்த தேசத்தை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் இரண்டு பேர் மாத்திரம் கர்த்தர் சொன்ன வாக்குதத்தத்தை மறவாமல், அவர் நிச்சயமாக அவர்களை கானான் தேசத்தில் கொண்டு போய் சேர்ப்பார் என்று விசுவாசித்தவர்களாக, அவருடைய வாக்குதத்தத்தை உறுதியாக பற்றி கொண்டார்கள். 'தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்' - (எண்ணாகமம் 14:6-9).

.

இந்த இரண்டு பேரும் அதே மோசேயின் கீழ் எகிப்து தேசத்திலிருந்து கர்த்தர் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டவர்கள். கர்த்தர் அவர்களை கானான் தேசத்திற்கு கொண்டு செல்வார் என்ற விசுவாசத்தோடு அந்த தேசத்தை சுற்றி பார்க்க சென்றவர்கள். அவர்களின் விசுவாசம் அற்புதமாய் இருந்தது. அவர்கள் மற்ற பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகளை கேட்டபோது, பதறி போய், நீங்கள் ஏன் இப்படி சொல்லி மற்றவர்களை அதைரியப்படுத்துகிறீர்கள்? அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை, நாம் அந்த தேசத்தில் காலடி வைத்த உடனே அவர்களை காத்த நிழல் அவர்களை விட்டு விலகி போயிற்று, நாம் பயப்பட வேண்டியதே இல்லை என்று அவர்கள் இஸ்ரவேல் மக்களை திடப்படுத்தி, உற்சாகப்படுத்தினாலும், அநேகராகிய பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகளே மக்களின் இருதயத்தில் கிரியை செய்தது. அவர்கள் யோசுவா, காலேபின் வார்த்தைகளை நம்பவில்லை.

.

நாம் பேசுகிற வார்த்தைகள் அவிசுவாச வார்த்தைகளாய் இருந்தால், அவை நமக்கு மட்டுமல்ல, நம்மோடு இருப்பவர்களின் விசுவாசத்தையும் கெடுக்கிறதாக இருக்கிறது. அநேகரை நாம் வழிவிலக செய்கிறவர்களாக காணப்படுவோம். 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்' (மாற்கு 9:42) என்று இயேசு கிறிஸ்து கடினமான வார்த்தைகளை மற்றவர்களை விசுவாசத்திலிருந்து விலக செய்யப்பண்ணுகிறவர்களை குறித்து எச்சரித்தார். பாருங்கள் ஒரு தலைமுறை ஜனத்தையே அந்த பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகள் வாக்குதத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்குள் செல்ல விடாமல் பண்ணிற்று!

.

பெற்றோரின் அவிசுவாசத்தால் கர்த்தரின் வாக்குதத்தத்தை விசுவாசியாத அவர்களின் பிள்ளைகள் நாற்பது நாள் கானான் தேசத்தை ஒற்றர்கள் சுற்றி வந்த நாட்களுக்கு ஒப்பாய் நாற்பது வருடங்கள் அந்த வனாந்தரத்தில் சுற்றி திரிந்து, அவிசுவாசிகளாய் இருந்த பெற்றோர் மரித்தப்பின் பிள்ளைகள் கானானுக்குள் பிரவேசித்தார்கள். அவிசுவாசத்தின் பலன் எத்தனை கொடியது பாருங்கள்! மட்டுமல்ல, 'அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்'. ஆம் அந்த பத்து பேரையும் கர்த்தர் வாதைகளினால் மரிக்க செய்தார்.

.

தேவன் தம் ஜனத்திற்கு அவர்கள் சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்பதற்காக அநேக அருமையான வாக்குதத்தங்களை கொடுத்து, நாம் அதை விசுவாசித்து பெற்று கொள்ள வேண்டும் என்று கொடுத்திருக்க, நாம் அதை விசுவாசியாதபோது, தேவனிடத்திலிருந்து கோபத்தை கொண்டு வருகிறதாயிருக்கிறது. விசுவாசமாய் பேசின யோசுவா, காலேப் மாத்திரம் அந்த தலைமுறையினரில் கானானுக்குள் பிரவேசித்தார்கள்.

.

விசுவாசித்த காலேபை குறித்து, 'என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்' என்று தேவன் ஆசீர்வதித்தார். இந்த காலேப் இஸ்ரவேல் கோத்திரத்தை சேர்ந்தவரல்ல, அவர் கேனாசியர்களில் ஒருவர். ஆனால் அவர் கர்த்தர் பேரில் வைத்திருந்த விசுவாசத்தால், அவர் யூதா கோத்திரத்தில் கானானை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் ஒருவரானார். அவருடைய விசுவாசமும் அவர் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றி வந்தபடியினாலும், (யோசுவா 14:14) அவர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டார். யோசுவாவையோ அவர்களை நடத்தி செல்லும் தலைவனாக ஏற்படுத்தி, அவரே அந்த தேசத்திற்குள் அவர்களை நடத்தி சென்றார். அல்லேலூயா!

.

இவை எல்லாம் மோசேயின் மூலமாய் கேட்டபோது, இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள். ஐயோ அநியாயமாய் அந்த பத்துபேர் சொன்ன வார்த்தைகளை நம்பி மோசம் போனோமே, என்று புலம்பினார்கள். ஆனால் அதினால் என்ன பயன்? அவர்கள் வாக்குதத்தம் செய்த கானானுக்குள் நுழைய முடியாமற்போனது போனதே!

.

ஒருவேளை அநேகர் சேர்ந்து முடியாது என்று சொல்லும்போது நம்முடைய இருதயம் அதை நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உதாரணத்திற்கு அநேகர் இந்த வியாதி உன்னை விட்டு நீங்கவே முடியாது என்று கூறலாம், அல்லது இந்த வேலை உனக்கு கிடைக்க வழியே இல்லை என்று கூறலாம், அல்லது இப்பேற்பட்ட பாவியான உன்னை கர்த்தர் ஏற்று கொள்ளவே முடியாது என்ற கூறலாம், அல்லது உன்னால் இந்த காரியத்தை செய்யவே முடியாது என்று கூறலாம். ஆனால் உங்களை அழைத்த தேவன் மேல் நீங்கள் மாறாத விசுவாசம் வைத்திருப்பீர்களானால், யார் வந்து என்ன கூற்றை கூறினாலும், அதை உங்கள் மனம் ஏற்காது. ஏற்க விடக்கூடாது. அவிசுவாச வார்த்தைகளை நம்பாதிருங்கள். அதற்கு செவி கொடுத்து, தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்காதிருங்கள். அப்படி செய்யும் பட்சத்தில் தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கிற நன்மையான காரியங்களை நாம் பெற்று கொள்ள முடியாமற் போக நேரிடலாம். பின்னர் துக்கப்பட்டு பிரயோஜனம் ஒன்றுமிருக்காது!

.

கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் (சங்கீதம் 125:1) என்ற வசனத்தின்படி அவர்களின் இருதயம் கர்த்தரையே நம்பி இருப்பதால் என்ன அவிசுவாச வார்த்தைகளை கேட்க நேர்ந்தாலும் அசையாமல், என்றென்றும் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தை போல உறுதியாக கர்த்தர் மேல் தங்கள் விசுவாசத்தை வைத்தவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அசைக்க முடியாத விசுவாசத்தை நாம் தேவன் பேரில் வைக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவரின் விசுவாசத்தையும் வர்த்திக்க செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

உமக்கு பிரியமானதை பேச

எனக்கு கற்று தாரும் தெய்வமே

நீரே என் தேவன்

உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்

செவ்வையான வழியிலே நடத்த வேண்டுமே

மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே

தேற்றும் தெய்வமே துணையாளரே

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, விசுவாச வார்த்தைகளை பேசின யோசுவாவும் காலேபும் கானானுக்குள் பிரவேசித்தது போல நாங்களும் எந்த நாளும் விசுவாச வார்த்தைகளையே பேச எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறபடியால் நல்ல வார்த்தைகளையே பேசி நன்மையானவைகளை சுதந்தரிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
***********

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 7 மே, 2015

07 மே 2015 - விசுவாச வார்த்தை - பாகம் ஒன்று

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மே மாதம் 07-ம் தேதி - வியாழக்கிழமை
விசுவாச வார்த்தை - பாகம் ஒன்று
...............

அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான். - (எண்ணாகமம் 13:30).

.

மோசே இஸ்ரவேல் ஜனங்கள் கானானை சுதந்தரிப்பதற்கு முன், 'தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள்' என்று சொல்லி, கோத்திரத்திற்கு ஒருவராக 12 பேரை கானான் தேசத்தை பார்த்து வரும்படி அனுப்புகிறார்.

.

அந்த பன்னிரண்டு பேரும் நாற்பது நாட்கள் அந்த தேசத்தை சுற்றி பார்த்து விட்டு, ஒரே குலையுள்ள திராட்ச கொடியை அறுத்து, அதை ஒரு தடியிலே கட்டி, மோசேயிடம் வந்து தங்கள் அறிக்கையை சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லா ஜனத்திற்கும் முன்பாக பத்து பேர் தங்கள் அறிக்கையை இவ்விதமாய் சொன்னார்கள், 'மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்'. அவர்கள் அந்த தேசத்தை பாலும் தேனும் ஓடுகிற நாடாக கண்டார்கள். தேவன் அவர்களுக்கு அந்த அருமையான தேசத்தை கொடுப்பேன் என்று வாக்குதத்தம் செய்தபடியே அந்த தேசம் மிகவும் அருமையாக இருப்பதை கண்டார்கள். அதினால் தான் அதன் ஒரு குலையுள்ள திராட்ச கொடியை அவர்கள் கைகளினால் தூக்கி வர முடியவில்லை. அதை ஒரு தடியில் கட்டி இரண்டு பேராக தூக்கி கொண்டு வந்தார்கள்.

.

ஆனால் அந்த பத்து பேருக்கும் தேவன் செய்த மற்ற அற்புதங்களும், தங்களை எவ்விதமாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட பண்ணினார் என்பதும் சீக்கிரம் மறந்து போய் விட்டது. அவர்களுடைய கண்களுக்கு முன் அந்த தேசத்தில் வாழும் மக்கள், அங்குள்ள பெரிய பெரிய கனிகளை சாப்பிட்டு, ராட்சதர்களை போலவே மாறிவிட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். ஆகவே தான், 'ஆனாலும், அந்த தேசத்தில் வாழுகிற ஜனங்கள் பலவான்கள், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்' என்று அவிசுவாச வார்த்தைகளை எல்லா ஜனத்திற்கு முன்பும் சொல்ல ஆரம்பித்தார்கள். இவர்களுடைய பார்வைக்குத்தான் இவர்கள் வெட்டுக்கிளிகளை போல இருந்தார்கள், அந்த ஜனத்தின் பார்வைக்கும் அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள் என்று இவர்களுக்கு எப்படி தெரியும்? கதைகளை கட்டி, ஜனத்தின் மனதை துவள செய்தார்கள்.

.

அத்தனை காலம், நாம் அந்த தேசத்தை போய் சுதந்தரித்து, இந்த வனாந்திர வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்கலாம் என்று நினைத்திருந்த மக்கள், இந்த பத்து பேரின் அறிக்கையை கேட்டு, இரவு முழுவதும் அழுதார்கள். கர்த்தர் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் மறந்து, தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்து, நாங்கள் எகிப்திலேயே செத்து போயிருந்தால் நலமாயிருக்குமே என்று தங்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்தி கொண்டு, எகிப்துக்கு திரும்பி போவோம் என்று கூறி கொண்டார்கள். பிரச்சனைகளை பார்த்து, இத்தனை நாள் அதிசயமாய் நடத்தி வந்த கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்ததால் என்ன நடந்தது தெரியுமா? கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த வாக்குதத்தங்களை மறந்து, அல்லது அதை பெரியதாக நினைக்காமல், ஏதோ பத்து பேர் சொன்ன அறிக்கையை நம்பி, கர்த்தருக்கு விரோதமாக வார்த்தைகளை பேசி, நாங்கள் எகிப்திலேயே செத்தால் நலமாயிருக்கும் என்று சொல்லி தேவனை கோபப்படுத்தின அவர்களுக்கு விரோதமாக தேவ கோபம் எழும்பியது. 'கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்' அந்த இடத்தில் மோசே தேவனிடம், அவரையும், தேவனையும் குறை சொல்லிய மக்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறார். ஒரு வேளை நாமாயிருந்தால், ஆம் ஆண்டவரே, இந்த ஜனம் எப்போதும் முறுமுறுக்கிற ஜனம், அழித்து போட்டு விடும், என்று அவரிடம் கூறியிருப்போம். ஆனால் மோசே அந்த இடத்தில் ஒரு அருமையான ஜெபத்தை, ஜனம் அழியாதபடிக்கு திறப்பில் நின்று, தன்னை குறைகூறின ஜனத்திற்காக, தேவனுடைய வழிநடத்துதலை மறந்த ஜனத்திற்காக தேவனிடம் மன்றாடினார். அந்த அழகான ஜெபத்தை எண்ணாகமம் 14: 13-19 வரை உள்ள வசனத்தில் காணலாம்.

.

ஆம், நமக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிற தகப்பனை போன்ற போதகர்கள் இருப்பதால்தான் நாம் குறைகளை சொல்லி, ஆலயத்தையும், போதகர்களையும், ஏன் சில சமயம் நம்மை இரட்சித்து, நம்மை அருமையாய் வழிநடத்தி வரும் கர்த்தரையும் குறை சொன்னாலும், தேவன் கிருபையாய் நம்மை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தகப்பனை போன்ற தேவ மனிதர்களை நமக்கு போதகர்களாக கிடைக்கப்பெற்ற நாம் எத்தனை பாக்கியவான்கள்! அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.

.

கர்த்தர் மோசேயின் ஜெபத்தினால், 'உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்' என்று கூறி முறுமுறுத்த ஜனத்திற்கு தண்டனை கொடுத்து, ஆனால் அந்த ஜனத்தை அழிக்காமல் விட்டு விடுகிறார். அதன்படியே தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்த அவர்கள் ஒருவரும் கானான் தேசத்தை சுதந்தரிக்கவில்லை! எத்தனை பரிதாபம்! பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை குறித்து கேள்விப்பட்டார்களே ஒழிய, அவர்கள் அதில் கால் எடுத்து வைக்கவில்லை. அந்த தேசத்தின் கனியை புசிக்கவில்லை, அந்த தேசத்தின் நன்மையை அனுபவிக்கவில்லை. வனாந்திரத்திலேயே மரித்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

.

ஒருவேளை நாமும் கூட தேவன் நமக்கு கொடுத்த வாக்குதத்தங்களை மறந்தவர்களாக, நமக்கு ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படும்போது, அவர் மேல் நாம் நம்பிக்கை வைக்காமல், அவருக்கு விரோமாக முறுமுறுக்கும்போது, தேவன் நமக்கு செய்ய இருந்த, வாக்குதத்தம் செய்த காரியங்களை நாம் அனுபவிக்காமல் போய் விட நேரிடும். நாம் முறுமுறுக்கிறவை எத்தனை முறை என்று கூட தேவன் எண்ணுகிறவராயிருக்கிறார். பாருங்கள் இஸ்ரவேலர் என்னை பத்துமுறை பரிட்சை பார்த்தார்கள் என்று தேவன் கூறுவதை! தேவன் நம்மேல் கோபம் கொண்டு விடாதபடி, நம் வார்த்தைகள் இருக்கட்டும்! நாம் சொல்லும் வார்த்தைகளின்படியே நமக்கு தேவன் செய்யக்கூடும். ஆகவே நாம் கோபத்திலும், விரக்தியிலும், மனம் வெறுத்து பேசும் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையுள்ளவைகளாக இருக்க வேண்டும். தேவன் நமக்கு பாராட்டுகிற கிருபைகளை நாம் நினைத்தவர்களாக, இதுவரை நடத்தினவர் இன்னும் நடத்த வல்லவர் என்று அவர் மேல் நம் பாரத்தை வைத்து, எந்த காரியத்திலும் முறுமுறுக்காமல், அவரை கோபமூட்டும் வார்த்தைகளை பேசாமல், நம்மை காத்து கொள்வோம். கர்த்தர் நம்முடைய வார்த்தைகளை கொண்டே நம்மை நியாயம் தீர்த்துவிடாதபடி, ஜாக்கிரதையாக பேசுவோம். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்' (நீதிமொழிகள் 18:21) என்ற வார்த்தையின்படி, நாம் மரணத்தை தெரிந்து கொள்ளாதபடி ஜீவனை தெரிந்து கொள்ளத்தக்கதாக நம் வார்த்தைகள் இருக்கட்டும். ஆமென் அல்லேலூயா!

.

முறுமுறுக்காமல், வாதாடாமல்

அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

.
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வாயின் வார்த்தைகளை குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க எங்களுக்கு உணர்த்தியருளும். எதை குறித்தும் முறுமுறுக்காதபடி, தேவன் எங்களுக்கு செய்த நன்மைகளை நினைத்து, உம்மையே சார்ந்து ஜீவிக்க கிருபை செய்யும். இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குதத்தம் செய்யப்பட்ட கானானுக்குள் செல்ல கூடாதபடி அவர்களின் வார்த்தைகள் தடை செய்தது போல நாங்கள் பரம கானான் செல்லக்கூடாதபடி எங்கள் வார்த்தைகள் தடை செய்யாதபடிக்கு எங்கள் வார்த்தைகளை காத்து கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
***********

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.