Friends Tamil Chat

திங்கள், 30 செப்டம்பர், 2013

30th Sept 2013 - விசுவாச தொடுதல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 செப்டம்பர் மாதம் 30-ம் தேதி - திங்கட்கிழமை
விசுவாச தொடுதல்
....

உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். - (மாற்கு 5:30).

.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது, இஸ்ரவேலில் உள்ள கலிலேயாவை சுற்றி அவர் செய்த அற்புதங்கள் அநேகம். மற்ற இடங்களை பார்க்கிலும் அவர் கலிலேயாவில்தான் அநேக அற்புதங்களை செய்தார். அவர் முதன்முதலாக செய்த அற்புதம் கலிலேயாவில் உள்ள கானா ஊரிலேதான். அவருடைய சீஷர்களாகிய பேதுரு அந்திரேயாவின் சொந்த ஊரும் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம். கப்பர்நகூம் இயேசுவின் நகரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கலிலேயாவில் உள்ள கடலில் தான் அவர் நடந்து வந்து அற்புதம் செய்தார். காற்றையும் கடலையும் அடக்கினது இந்த கலிலேயா கடலில்தான். அப்படி விசேஷித்த ஊராகிய கலிலேயாவிற்கு செல்லும்போது நம் உள்ளமெல்லாம் பரவசமாவது இயற்கையே!

.

கலிலேயாவின் தூசி படிந்த தெருக்களில் இயேசுகிறிஸ்து நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஜெப ஆலயத்தலைவன் ஒருவன் அவரிடம் வந்து, தன் மகளுக்காக வந்து ஜெபிக்க கேட்டு கொண்டான். அதன்படி அவர் நடந்து அவனுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த காரியம் நடந்தது.

.

அந்த நாட்களில் பெண்களை ஒரு பொருட்டாக எண்ணாத உலகம். இந்த நாட்களிலும் மத்திய கிழக்கு பகுதிகளில் பெண்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. அவர்களுக்கு தலையிலிருந்து கால் வரை கறுப்பு அங்கி தரித்து, அவர்கள் முகம் வெளியே தெரியாதவாறு அவர்கள் மூடப்பட்டு தான் வெளிஉலகத்தை காண வேண்டும். இந்த நாட்களிலேயே அப்படி என்றால் அந்த நாட்களில் இன்னும் அதிகமாக பெண்களை புறக்கணித்த நாட்கள். அதில் ஒரு பெண் பன்னிரண்டு வருடமாக அதிகமான உதிர போக்கினால் பாடுபட்டு வந்தாள். பயங்கர வேதனையும், தொடர்ந்து உதிரம் போய் கொண்டிருந்தபடியால், வெளிறிப்போய், இரத்த சோகை இருந்திருக்கலாம். அவள் தன் சொத்து பணம் எல்லாவற்றையும் வைத்தியர்களுக்கு செலவழித்தும் கொஞ்சமும் சுகமாகாத நிலைமை! 'ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக' - (லேவியராகமம் 15:25-27). இந்த வசனத்தின்படி ஒரு பெண் உதிரம் ஊறிக்கொண்டிருந்தாள் அவள் தீட்டுப்பட்டவள். அவள் யாரையும் தொடக்கூடாது. அவளை தொட்ட யாரும் தீட்டுப்பட்டவர்களே!

.

இந்த பெண் இயேசுகிறிஸ்துவின் சுகமாக்கும் வல்லமையை குறித்தும் அவர் அவள் இருந்த ஊரின் பக்கமாக வருகிறார் என்றும் கேள்விப்பட்டாள். அவளுக்கு அவரை எப்படியாவது தொட வேண்டும், தொட்டால் நான் சுகமாவேன் என்கிற எண்ணம் உள்ளத்தில் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆனால் மனதிற்குள்ளே அவர் என்னை தொட்டால், அவர் தீட்டுப்பட்டுவிடுவாரே என்ற அச்சம் இருந்தது. இந்த யூத மக்கள் என்னுடைய நிலையை அறிந்தால் என்னை கல்லெறிந்து கொன்று போடுவார்களே என்று நினைத்திருந்தாள். ஆனாலும் என்ன ஆனாலும் சரி, நான் அவரை போய் தொடுவேன். நான் அவரை தொட்டால்தானே தீட்டு, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை மட்டும் தொட்டாலே போதும் நான் சுகமாவேன் என்று விசுவாசத்தோடு, அவர் இருந்த கூட்டத்திற்குள் செல்ல ஆரம்பித்தாள். ஒரே கூட்டம்! ஒருவரும் வழிவிடுவதாக இல்லை. ஆனால் இவளோ, மற்றவர்களை முட்டி தள்ளி கொண்டு, இயேசுவை நோக்கி செல்ல ஆரம்பித்தாள். ஒரு சிலர் அவளை திட்டினார்கள், ஏய் கிழவி, ஏன் என் காலை மிதித்து கொண்டு போகிறாய்? என்று. எதையும் பொருட்படுத்தாதவளாக அவள் இயேசு இருக்கும் இடம் வரை சென்று, கடைசியாய் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டாள். என்ன ஆச்சரியம்! அவள் தொட்ட மாத்திரத்தில் தானே அவள் உதிரம் ஊறுவது நின்றது, ஒரு புதிய பெலத்தை பெற்றவளாக, கண்களில் கண்ணீர் வழிய இயேசுவே உமக்கு நன்றி என்று மனதளவில் சொல்லி கொண்டிருக்கும்போதுதானே, 'உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்'. - (மாற்கு 5:31-34)

.

அவரை தொட்டபடியும் அவரை நெருக்கியபடி சென்றவர்களும் அநேகர். ஆனால் அவர்களுடைய யாருடைய தொடுதலும் இயேசுவுக்குள் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. ஆனால் விசுவாசத்தோடு அந்த பெண் அவரை தொட்டதை, அதுவும் அவருடைய வஸ்திர ஓரத்தை தொட்டதை அவர் அறிந்தவராயிருந்தார்.

.

இந்த நாளிலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிந்தவர்கள் ஆயிரமாயிரமானவர்கள். அவரோடு நான் மிகவும் நெருக்கமாயிருக்கிறேன் என்று சொல்பவர்களும் அநேகர். ஒரு ஊழியக்காரர் சொன்னார், இயேசுகிறிஸ்து அவருடைய தோள்களின் மேல் கைளைபோட்டு, பரலோகத்தில் தோட்டத்தில் உலாவினார் என்று. இப்படி அநேகர் சொன்னாலும், அவருடைய உள்ளத்தை தொடுபவர்கள் வெகு சிலரே! இவரிடம் நான் சென்றால் இவர் என்னை சுகமாக்குவார் என்கிற விசுவாசத்தோடு சென்று அவரை தொடுபவர்களே அவரை தொடுபவர்கள்! சரீரப்பிரகாரமாக ஒருவருடன் பக்கத்தில் இருப்பதற்கும், அவருடைய உள்ளத்தை தொடுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. கிறிஸ்துவை குறித்து அறியாமலேயே, அவரை விசுவாசியாமலே அவருக்கு பக்கத்தில் இருக்கலாம், ஆனால் அவருக்கு தெரியாமல் அவரை தொட முடியாது, அதேப்போல அவரை தொட்டு சுகமடையாமல் இருப்பது என்பதும் இயலாத காரியம்.

.

ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், என்னை விட நன்கு ஜெபம் செய்பவர்கள் அனேகர், எனக்கு ஜெபிக்க கூட தெரியாது. இயேசுகிறிஸ்து என் ஜெபத்தை கேட்பாரா என்று. நம் உள்ளத்திலிருந்து விசுவாசத்தோடு, கண்களில் கண்ணீர் வழிய, அவர் சுகமளிக்கும் தேவன் என்று அறிந்து, அப்பா எனக்கு சுகத்தை தாரும் என்று கேட்கும்போது, அவருடைய செவிகள் அந்த ஜெபத்திற்கு திறந்தவைகளாகவே இருக்கின்றன. பதிலை கொடுப்பதற்கு அவர் வாஞ்சையுள்ளவராகவே இருக்கிறார். அந்த பெண் சுற்று சூழலை பார்க்கவில்லை, கண்டுபிடிக்கப்பட்டால், யூதர்களின் தண்டனை தன்னிடம் நிறைவேறுமே என்று நினைக்கவில்லை, விசுவாசத்தோடு, 'நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்' என்று சொல்லி போய் தொட்டாள். தொட்ட மாத்திரத்தில் சொஸ்தமானாள். இந்த பெண்ணை போல நாமும் அவரை அண்டி கொள்வோமா? அவரால் சுகமாகாத வியாதி ஒன்றும் இல்லையே, அவரால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே, விசுவாசத்தோடு அவரிடம் சென்று அவருடைய இருதயத்தை நம் கண்ணீரின் ஜெபத்தினால் தொட்டு, அவரிடம் மன்றாடுவோம். அவரே நமக்கு சுகத்தை தருவார். ஆமென் அல்லேலூயா!

.

பிறவியிலே முடவர் அன்று

உம் நாமத்தில் நடந்தாரே

பெரும்பாடுள்ள பெண் அன்று

சாட்சி பகர்ந்தாளே

...

சுகம் தரவேண்டும் யெகோவா ரஃப்பா - இன்று

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்

தூய ஆவியின் வல்லமையால்


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தந்தையே, அந்த நாளில் பெரும்பாடுள்ள அந்த பெண் எப்படி விசுவாசத்தோடு, யார் என்ன சொன்னாலும் சரி, நான் போய் இயேசுவின் வஸ்திரத்தில் ஓரத்தை தொட்டால் சுகமாவேன் என்கிற விசுவாசத்தோடு சென்று தொட்டு சுகத்தை பெற்று கொண்டாளோ, அதுப்போல நாங்களும் அதே போன்று விசுவாசத்தோடு, கர்த்தரின் நாமத்தினால், சுகத்தை பெற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் விசுவாசத்தை வர்த்திக்க செய்யும் தகப்பனே. எங்களுக்கு பிரியமானவர்களை, நோயின் அகோர பிடியில் சிக்கி தவிக்கும் ஒவ்வொருவரையும் தொட்டு சுகப்படுத்துவீராக. பெலப்படுத்துவீராக. நோய்களிலிருந்து விடுதலை கட்டளையிடுவீராக. எங்களுக்குள் இருக்கும் எந்த வியாதியும் நீங்கி, மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்கிற வார்த்தைகளினால் எங்களை ஆறுதல் படுத்துவீராக. நீர் கொடுக்கிற சுகத்திற்காக உமக்கு நன்றி. நீர் கொடுக்கிற ஆரோக்கியமான வாழ்விற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

27th Sept 2013 - ஜெயமுள்ள வாழ்க்கை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 செப்டம்பர் மாதம் 27-ம் தேதி - வெள்ளி கிழமை
ஜெயமுள்ள வாழ்க்கை
....

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, வேண்டிக்கொள்ளுகிறேன்.

- (எபேசியர் 3:17-19).

.
ஒரு முறை பிரசங்கியார் D.L.Moody அவர்கள் தன்னுடைய பிரசங்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் காட்டி, அதனில் உள்ள காற்றை எப்படி எடுப்பது என்றுக் கேட்டார். ஓவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறினார்கள். "ஒருவர் சொன்னார், ஒரு குழாயை வைத்து அதை உறிஞ்சி எடுத்துவிடுங்கள் " என்றுக் கூறினார். அப்படி எடுத்தால் அங்கு வெற்றிடம் (Vaccum) உருவாகும். அதினால் கண்ணாடி உடைந்து விடும் என்று மூடி கூறினார். இன்னும் அநேகர் வெவ்வேறு கருத்துக்களைச் சொன்னார்கள். அப்போது அவர் ஒரு பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து அந்த டம்ளரில் நிறைய ஊற்றி, "இப்போது இதில் கொஞ்சம்கூட காற்று இல்லை. தண்ணீரை ஊற்றியவுடன் காற்று எடுக்கப்பட்டு விட்டது" என்றார்.

.

அவர் இந்த சிறிய உதாரணத்தின் மூலம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்றுக் காட்டினார். பாவத்தை அங்கும் இங்கும் உறிஞ்சி எடுப்பதால் அது போய் விடாது என்றும், நாம் பாவமில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயம் நிரப்பப்பட வேண்டும் என்றும் விளக்கினார். பின்னும் அவர், 'நம்முடைய இருதயத்திலிருந்து பெருமையும் சுயநலமும் மற்றும் பாவமான காரியங்களும்; விலகும்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு இருதயத்தையும் நிரப்புவார்', ஆனால் நம் இருதயம் அப்பாவங்களினால் நிறைந்திருந்தால் பரிசுத்த ஆவியானவருக்கு அங்கு இடமில்லை என்றுக் கூறினார். நம்முடைய இருதயம் உலக காரியங்களுக்கு வெறுமையாக்கப்படாலொழிய ஆவியானவர் அதை நிரப்ப முடியாது என்றும் கூறினார்.

.

அதுப் போல நாம் நம்மையே வெறுமையாக்கி ஆவியானவரை நம் இருதயத்திற்குள் அழைப்போம். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். அவர் வந்து நம் இருதயத்திற்குள் வாழும் போது எந்த பாவமும் நம்மை நெருங்காது. கர்த்தர் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார். மட்டுமல்ல சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார்; - யோவான் - 14: 8:13.

.

ஒவ்வொரு நாளும் அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் வாழும்போது அவர் நம்முடைய வாழ்வை பொறுப்பெடுத்துக் கொள்வார்.

.

சிலர் பரிசுத்த ஆவியை அளவில்லாமல் நான் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு பிரசங்கிமாரிடம் போய் நிற்கிறார்கள். நீங்கள் உங்களை எவ்வளவு வெறுமையாக்குகிறீர்களோ அந்த அளவு அவர் உங்களை நிரப்புவார். எந்த பிரசங்கிமாரும் கடவுள் அல்ல உங்களுக்கு பரிசுத்த ஆவியை அதிகமாய் கொடுப்பதற்கும், மற்றவர்களுக்கு குறைவாக கொடுப்பதற்கும்.

.

முதலாவது நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது பரிசுத்த ஆவி அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவர். அவர் திரியேக தெய்வத்தின் ஒரு தன்மையானவர். அவர் பாவிகளான நம்முடைய இருதயத்தில் வாசம் செய்வது அவருடைய சுத்த கிருபையாகும்.

.

நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பது மிகவும் அவசியம். அவர் நமக்குள் இருந்தால் தான் நாம் ஆவியின் கனியை வெளிப்படுத்த முடியும். நாம் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இல்லாவிட்டால், நாம் பாவத்திற்குள் திரும்ப விழ வேண்டிய நிலைமை ஏற்படலாம். "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்று இயேசுகிறிஸ்து கூறினார். அதுவரை கோழையாக இருந்த பேதுரு பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொண்ட பிறகு வல்லமையான பிரசங்கியாக மாறினார். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட அநேகர் கர்த்தருக்கென்று வல்லமையாக உபயோகிக்கப்படுவதை காண்கிறோம். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்வோம். நமது வாழ்க்கை நிச்சயமாகவே மாறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. சாத்தானை எதிர்த்து நிற்க வல்லமை தருவார். அவர் வாழும் ஆலயமாக நம் இருதயம மாறட்டும். அல்லேலூயா!

.

ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெப வீரனே

துதிக்கத் தூண்டும் துணையாளரே

சாத்தானின் சகல தந்திரங்களை

சாகடிக்க வாருமையா

.

ஜெபம்

எங்களை நேசிக்கும் எங்கள் பரம தகப்பனே, பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் வாஞ்சையைத் தாரும் ஐயா. அவரைப் பெற்றுக் கொண்டு, சாத்தானுக்கு எதிர்த்து நிற்கவும், பாவத்திலிருந்து ஜெயமுள்ள வாழ்க்கை வாழவும் எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 26 செப்டம்பர், 2013

26th Sept 2013 - ஆவிக்குரிய மனிதன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 செப்டம்பர் மாதம் 26-ம் தேதி - வியாழக் கிழமை
ஆவிக்குரிய மனிதன்
...

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். - (1கொரிந்தியர்2:15).

.
பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் மூன்று வகையான மக்களைக் குறித்து எழுதுவதை 1கொரிந்தியர் 2:14 லிருந்து 3:3 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்த மூன்று வகை மக்களில் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள் என்று நம்மை நாமே ஆராய்ந்து அறிந்து நம்மை திருத்திக் கொள்ள முற்படுவோம்.
.
1. ஜென்மசுபாவமுள்ள மனிதன்: 'ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்' (1 கொரிந்தியர் 2:14). ஜென்மசுபாவமுள்ள மனிதன் உலகப்பிரகாரமான மனிதன். தேவனை ஆண்டவர் என்றும் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக் கொள்ளாதவன். தேவனைக் குறித்த காரியங்கள் அவனுக்கு பைத்தியமாக தோன்றும். அவைகளை அவனுக்கு சொன்னாலும், கிண்டலும் கேலியும் செய்து, அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டான். அவனே ஜென்மசுபாவமுள்ள மனிதன். இவன் பரலோகத்திற்கு செல்வது என்பது மிகவும் அரிது. 'இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்' (யோவான் 14:6) என்று சொன்னதை அவன் ஏற்றுக் கொள்ளாததால் அவன் பிதாவினிடத்தில் செல்ல முடியாது.
.
2. மாம்சத்துக்குரிய மனிதன்: 'மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று' (1கொரிந்தியர் 3:1). இந்த வகையை சேர்ந்தவர்கள் இரட்சிக்கப்பட்டவர்கள். ஆனால் மாம்சீகத்திற்குரியவர்கள், அல்லது கிறிஸ்துவுக்குள் குழந்தைகள். மறுபடியும் பிறந்தவர்கள், ஆனால் கிறிஸ்துவுக்குள் வளராமல் இன்னும் குழந்தைகளாகவே இருப்பவர்கள். ஒரு குழந்தை பிறந்து 18 வருடம் ஆகியும் குழந்தைத்தனமாகவே இருந்தால், அல்லது ஒரு வயது குழந்தைப் போலவே நடந்துக் கொண்டால் அதை பெற்ற பெற்றோருக்கு எத்தனை வேதனை? அப்படித்தான் நான் மறுபடியும் பிறந்தேன் என்று சொல்லியும், இன்னும் கிறிஸ்துவுக்குள் குழந்தையாகவே இருந்தால் நம் தேவனும் வேதனைப்படுவார்.
.
அவர்களுடைய குணாதிசயங்கள், 'பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா?' (1 கொரிந்தியர் 3:3). பொறாமையும், வாக்குவாதமும், பேதகங்களும் நம்மிடத்தில் இருந்தால் நாம் இன்னும் மாம்சத்துக்குரியவர்களாகவே இருப்போம். கிறிஸ்தவர்களில் அநேகர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறோம். நம்மிடத்தில் கிறிஸ்துவில் பூரண வளர்ச்சிக் கிடையாது. நம்மோடுக் கூட இருக்கும் சகவிசுவாசிகளோடு, வாக்குவாதங்களையும், பேதகங்களையும் வைத்துக் கொண்டு, ஆலயத்திற்கு வந்து கர்த்தரை தொழுதுக் கொண்டு இருக்கிறோம்;. நம்மைக் கண்டு தேவன் மிகவும் வருத்தப்படுவார். எத்தனை வருடங்களாகியும், இன்னும் வளரவே இல்லையே என்று! நாம் இப்படி இருப்பதால் சக விசுவாசிகளுக்கும் வேதனை, போதகருக்கும் வேதனை! நம் இந்த நிலை மாறவேண்டும். நாம் மாம்சத்திற்குரியவர்களாக இல்லாமல் கர்த்தருக்குள் வளருவோமாக!
.
3. ஆவிக்குரிய மனிதன்: 'ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்' என்று வசனத்தில் பார்க்கிறோம். ஆம், ஆவிக்குரியவனுக்கு கள்ள போதகங்களைக் குறித்து தெரியும், அவற்றை கேட்டு விலகுவான். தேவனுக்கேற்ற வழிகளில் நடப்பான். கர்த்தருக்கு எதுப் பிரியம் என்று அறிந்து அதன்படி தன் வழிகளை சீர்ப்படுத்துவான். 'மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்,..' (எபேசியர் 4:11) என்ற வசனத்தின்படி, நாம் பூரணபுருஷர்களாக விளங்க வேண்டும் என்பதே தேவனுக்கு நம்மைக் குறித்த சித்தமாயிருக்கிறது. விசுவாசத்திலும், அறிவிலும், ஒருமனமாக சகவிசுவாசிகளோடு நாம் வளர்ந்து பூரண புருஷர்களாக நாம் கனிக் கொடுக்க வேண்டும். தேவனுடைய சாயலை ஒவ்வொரு நாளும் நாம் அணிந்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆவிக்குரிய மனிதனே இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் அவரோடுக்கூட எடுத்துக் கொள்ளப்படுவான்.
.
பிரியமானவர்களே, நாம் இதில் எந்த வகையில் இருக்கிறோம்? ஜென்மசுபாவமுள்ளவர்களாயிருந்தால் நாம் பரலோகம் செல்ல முடியாது. மாம்சத்துக்குரியவர்களாக இருந்தால், கிறிஸ்துவின் வருகையில் நாம் கைவிடப்படலாம், ஆனால் ஆவிக்குரியவர்களாக இருந்தால், தேவனால் பிறந்தவன் பாவஞ்செய்யான் என்ற வசனத்தின்படி நம்மை பரிசுத்தமாய்க் காத்துக் கொண்டு, அவருடைய வருகைக்கு நாம் ஆயத்தமாக முடியும். நம்மை நாமே ஆராய்ந்து, விட வேண்டியதை விட்டு, ஆவிக்குரியவர்களாக கர்த்தரோடு என்றென்றும் வாழ்கிறவர்களாக தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

.


தேவ சாயல் ஆக மாறி

தேவனோடிருப்பேன் - நானும்

.
அந்த நாளும் நெருங்கிடுதே

அதிவிரைவாய் நிறைவேறுதே

மண்ணின் சாயலை நான் களைந்தே தம்

விண்ணவர் சாயல் அடைவேன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மூன்று வகையான மனிதர்களைக் குறித்து பார்த்தோம் ஐயா. முதல் இரண்டு வகையான மனிதர்களைப் போல அல்லாமல், மூன்றாவது வகையான ஆவிக்குரியவர்களாக நாங்கள் மாற எங்களுக்கு உதவி செய்யும். கிறிஸ்துவுக்குள் விசுவாசத்திலும், அன்பிலும் பூரண புருஷர்களாக நாங்கள் வளர்ந்து கிறிஸ்துவின் வருகையில் காணப்பட எங்களுக்கு கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 25 செப்டம்பர், 2013

25th Sept 2013 - பிள்ளைகளை கர்த்தருக்காய் வளர்த்தல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 செப்டம்பர் மாதம் 25-ம் தேதி - புதன் கிழமை
பிள்ளைகளை கர்த்தருக்காய் வளர்த்தல்
....

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். - (நீதிமொழிகள் 22:6).

.
இந்நாட்களில் அநேக குடும்பங்களில் நாம் காணும் பிரச்சனை, பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியாமற் போவதாகும். அவர்கள் இஷ்டத்திற்கு விடப்பட்டவர்களாக, கர்த்தருக்கு பயப்படும் பயமின்றி, பாவத்திலே வாழ்ந்து, தங்களை கெடுத்து கொண்டிருக்கும் வாலிப பிள்ளைகள் இந்த நாட்களில் அநேகர் உண்டு. வாலிப வயதிற்கு வந்த பின் அவர்களை மாற்றுவது என்று முடியாத காரியமாகும். சிறுவயதிலேயே அவர்களுக்கு கர்த்தருடைய பயத்தை போதித்து வளர்க்கும்போது, பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்ற வசனத்தின்படி அவர்கள் தங்களை காத்து கொள்வார்கள்.

.

நம்முடைய பிள்ளைகள் கர்த்தருக்குள் இருக்க வேண்டும், கர்த்தருக்கு பிரியமானவர்களாக, சமுதாயத்திற்கு பிரயோஜனமாயிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தகப்பனும், தாயும் ஆசிப்பதுண்டு. அதில் தாய்மாருக்கான கீழ்க்கண்ட ஆலோசனைகளை 19 பிள்ளைகளுக்கு தாயாராயிருந்த சூசன்னாள் அவர்கள், ஜான் வெஸ்லியின் ஜெபிக்கும் தாயார் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை தன் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவனுடைய வார்த்தையை போதிப்பதற்கு ஒரு மணி நேரம் செலவழிப்பார்கள். இங்கிலாந்து தேசத்தில் பெரும் எழுப்புதல் ஏற்படுவதற்கு காரணமாயிருந்த ஜான் வெஸ்லிக்கும், கீர்த்தனை எழுத்தாளரான சார்லஸ் வெஸ்லிக்கும் உத்தம் தாயாக விளங்கினவர்கள். அவர்கள் ஆலோசனையை பற்றி தியானிப்பது ஏற்றதாக இருக்கும்.

.

'ஆண்டவருக்கென்று உங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறீர்களா? அதற்கு பிரதானமான முதல் நிபந்தனை அவ்வித பாரம் கொண்ட ஓர் தாய் தன் ஜீவியத்தில் உலக சுகபோகத்தை முற்றிலும் உதறினவளாயிருக்க வேண்டும். இரண்டாவதாக அவள் தன் முழு வாழ்வையும் தன் பிள்ளைகளின் ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கென்றே அர்பணித்திருக்க வேண்டும். 'ஒரு தாய்க்கு அதைவிட மேலான வாழ்க்கை வேறில்லை' என்பதை ஆழமாய் அறிந்தவளாய் இருக்க வேண்டும்.

.

நம் பிள்ளைகள் ஒரு வயதாயிருக்கும்போதே பிரம்பிற்கு பயப்படவும், மெதுவாக அழவும் கற்று தர வேண்டும். இவ்வாறு செய்வதற்கு நீங்கள் ஜாக்கிரதை கொண்டு விட்டால் பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு நேர வேண்டிய திரளான தண்டiயிலிருந்து அவர்களை நீங்கள் காப்பாற்றி விடலாம். கோழை மனம் கொண்ட பிள்ளைகள் தண்டனைக்கு பயந்து போய் பொய் சொல்லும்படி தூண்டப்படுவது சாத்தியமே. இந்நிலையில் 'யாரெல்லாம் தாங்கள் செய்த தவறை அறிக்கை செய்து அதற்காக மனம் வருந்துகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்' என்று நாம் தெளிவுபட பிள்ளைகளுக்கு அறிவித்து விட்டால் பொய் சொல்வதிலிருந்து பிள்ளைகளை நாம் காத்து கொள்ள முடியும்.

.

தேவனிடம் பயபக்தியாய் இருக்கும்படி பிள்ளைகளுக்கு கற்றுதர வேண்டும். குறிப்பாக ஜெபவேளைகளில் அமைதியாய் இருக்கும்படியாகவும், ஒவ்வொரு நாளும் அவர்களாகவே ஜெபிப்பதற்கும் கற்றுத்தர வேண்டும். பெற்றோரிடத்தில் மாத்திரமல்ல, வேலையாட்களிடத்திலும் மரியாதையோடு பேச கற்று தர வேண்டும்.

.

பிள்ளைகளிடம் காணப்படும் சில குழந்தைத்தனமான மதியீனங்களை நாம் பொருட்படுத்த கூடாது. இருப்பினும் இவைகளில் சில கண்டிக்கப்பட வேண்டியதாயிருக்கும். இது போன்ற காரியங்களை மிருதுவாகவே கண்டிக்க வேண்டும். ஆனால் பகிங்கரமான கீழ்ப்படியாமை கண்டிக்காமல் இருக்க கூடாது.

.

பிள்ளைகளுக்கு தரும் வாக்குறுதிகளை பெற்றோர்களாகிய நாம் நிறைவேற்றுவுது மிகமிக முக்கியமானதாகும். ஏதாவது ஒன்றை வாங்கி தருவேன் என்று பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால் அவைகளை கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும். அவர்கள் நமக்கு கீழ்ப்படியும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக அவர்களை பாராட்ட வேண்டும். பிள்ளைகள் சரியான காரியங்களை செய்யும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் தண்டிக்க கூடாது.

.

நம் பிள்ளைகளை அன்போடு கூட கண்டிப்பிலும் வளர்த்தால் அவர்களின் ஆத்துமாவை நித்திய அழிவிலிருந்து காக்கும் தாய்மார்களாக விளங்குவீர்கள்'. கர்த்தர் தாமே இந்த ஆலோசனைகளின்படி நம் பிள்ளைகளை வளர்க்க ஒவ்வொரு பெற்றோருக்கும், விசேஷமாக ஒவ்வொரு தாய்க்கும் உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த கொடிய நாட்களில் வாலிபர்கள் அநேகர் தங்களை கெட்ட வழிகளிலும், கொடிய பழக்கவழக்கங்களிலும் ஈடுபடுத்தி கொண்டு, நரகத்திற்கு நேராக சென்று கொண்டிருக்கிறார்களே, எங்கள் பிள்ளைகள் யாரும் அந்த மாதிரி சென்று விடாதபடி எங்கள் பிள்ளைகளுக்கு உம்மை குறித்த பயத்தை தாரும் தகப்பனே. உம்மை நேசிக்கும் இருதயத்தை தருவீராக. உமக்கு பயந்து பாவத்திற்கு விலகி ஓட கிருபை செய்யும். அவர்களுக்காக ஜெபிக்கும் தாயாராக ஒவ்வொரு தாயையும் மாற்றுவீராக. இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம் என்று சொல்லதக்கதாக எங்கள் பிள்ளைகளும் நாங்களும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டுமே, அதற்கான கிருபைகளை தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

24th Sept 2013 - குருடாயிருக்கும் மனக்கண்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 செப்டம்பர் மாதம் 24-ம் தேதி - செவ்வாய் கிழமை
குருடாயிருக்கும் மனக்கண்கள்
...

மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். - (யோவான் 16:2-3).

.
கென்யாவில் உள்ள நெய்ரோபியில் ஷாப்பிங் மாலில் அங்கு இருந்த சாதாரண மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, 68 பேருக்கும் மேலாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். அநேகர் காயம் அடைந்திருக்கிறார்கள்.
.
ஈராக்கில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள். சிரியாவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள். ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.
.
ஞாயிற்றுக் கிழமை ஆலயத்திற்கு சென்று, ஆராதனை முடிந்து வெளியே வந்து நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது தற்கொலைப்படையை சேர்ந்த இருவர் தாக்கியதில் பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் 70பேருக்கும் மேலாக கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். 130 பேருக்கு மேலாக காயம் அடைந்திருக்கிறார்கள். ஆலயத்தின் முன்புறம் ஏராளமாய் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது.
.
தீவிரவாத சக்திகளுக்கு, மனித உயிரின் அருமையை அறியாதபடி அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறபடியால், அருமையான உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. 2000 வருடங்களுக்கு முன்பே இயேசுகிறிஸ்து இவர்களைப் பற்றி 'மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள்' என்று சொல்லி விட்டார். கொலை செய்கிறவர்கள் கிறிஸ்துவையும், பிதாவையும் அறியாபடியினால் இப்படி செய்வார்கள் என்று காரணத்தையும் அவரே சொல்லி விட்டார்.
.
காலாகாலமாய் நாம் இதுப் போன்ற தீயசக்திகள் சாதாரண மக்களை கொல்வதுப் போன்ற செய்திகளைக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தற்போது இதுப் போன்ற செய்திகள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கின்றன. இயேசுக்கிறிஸ்து கடைசிக் கால நிகழ்ச்சிகளைக் குறித்து தீர்க்கதரிசனமாக கூறும்போது, 'ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; .. உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்' (மத்தேயு 24:7,9) என்றுக் கூறினார். அதன்படி இந்த நாட்களில் நடந்து வருகிறது.
.
இதற்கு விசுவாசிகளாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவது நாம் ஜெபிக்க வேண்டும். தீவிரவாதிகளின், மதவாதிகளின் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். 'தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்' (2கொரிந்தியர் 4:4). இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் குருடாக்கியருக்கிற இவர்களின் மனக்கண்களை கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசிக்கும்படியாக இவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஒரு பார்வையற்ற மனிதனால் இயற்கை காட்சிகளையோ, நிறங்களையோ, அழகையோ இரசிக்க முடியாது. எல்லாமே இருளாகத்தான் இருக்கும். அப்படித்தான் மனம் குருடாகியிருக்கிற இந்த மனிதர்களுக்கு மனிதனின் ஆத்துமாவின் அருமையோ, உயிரின் விலையே தெரியாது. ஆனால் அவர்களின் மனக் கண்கள் திறக்கப்படும்போது, அவர்கள் அதன் அருமையை அறிந்துக் கொள்வார்கள். ஆகவே அவர்களின் மனக்கண்கள் கிறிஸ்துவின் சுவிசேஷ ஒளியைக் காண வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
.
இரண்டாவது, சுவிசேஷம் அவர்களை சென்றடையும்படியாக வாசல்கள் திறக்கப்படும்படியாகவும், அவர்களை நற்செய்தி சென்றடையும்படியாகவும் ஜெபிக்க வேண்டும். 'அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக்கேள்விப்படுவார்கள்?' (ரோமர் 10:14). ஆகவே அவர்கள் சுவிசேஷத்தை கேள்விப்படும்படியாக வாசல்கள் திறக்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் சத்தியத்தை கேள்விப்பட்டு, அவரை விசுவாசிக்கத்தக்கதாக ஜெபிக்க வேண்டும்.
.
மூன்றாவதாக, நாம் நம் சாட்சியைக் காத்துக் கொள்ள வேண்டும். நாம் பாவத்தின் மேல் பாவம் செய்துக் கொண்டு, கிறிஸ்துவை பிரசங்கித்தால் மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? நாம் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துக் கொண்டோ, மற்றவர்கள் கேட்கும் சாதாரண உதவிக்கூட செய்யாமல், கிறிஸ்துவின் அன்பைக் குறித்து சொன்னால் அவர்கள் விசுவாசிப்பார்களா? நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மாதிரியாக வாழ்ந்தால் நம்மைக் காண்பவர்கள் நம்மில் வாழும் கிறிஸ்துவைக் காண்பார்களல்லவா? இருளில் வாழும் அவர்களுக்கு வெளிச்சமாக நம் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். 'இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16).
.
பிரியமானவர்களே, இவற்றை நாம் உண்மையாக செய்வோமானால் தீவிரவாத சக்திகள் செயலற்றுப் போகும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி செய்பவர்களாக நம்மை மாற்றுவோம். கர்த்தர் மற்றவற்றை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!

.


கோலியாத்தை முறியடிப்போம்

இயேசுவின் நாமத்தினால்

விசுவாச கேடகத்தால் நாம்

பிசாசை வென்றிடுவோம்

.
வெற்றிக் கொடி பிடித்திடுவோம்

வீரநடை நடந்திடுவோம்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பாகிஸ்தானில் எங்கள் சகோதர சகோதரிகள் அநியாயமாய் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு கலங்கி இருக்கிற எங்களையும், தங்கள் உயிருக்குயிரானவர்களை இழக்க கொடுத்த ஒவ்வொருவரையும் ஆறுதல்படுத்துவீராக. இந்த துர்ச்செயலை செய்கிற ஒவ்வொரு தீவிரவாதியையும் சந்திப்பீராக. குருடாயிருக்கிற அவர்களின் மனக்கண்களை திறப்பீராக. அவர்கள் சுவிசேஷத்தை கேட்கும்படியாக திறந்த வாசலை அவர்களுக்கு முன் வைப்பீராக. அவர்கள் கேட்டு, மனம் திரும்பும்படியாக ஆவியானவர்தாமே கிரியை செய்வாராக. நாங்கள் எங்கள் சாட்சிகளை காத்துக் கொண்டு அவர்களுக்கு முன்பாக உம் அன்பை வெளிப்படுத்தும்படியாக எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 23 செப்டம்பர், 2013

23rd Sept 2013 - கர்த்தரின் சிட்சை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 செப்டம்பர் மாதம் 23-ம் தேதி – திங்கட்கிழமை
கர்த்தரின் சிட்சை
.

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். - (எபிரேயர் 12:6).

.
ஒரு பெரிய கட்டிடத்தை கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. கட்டிட மேஸ்திரி ஒருவர் நான்காவது மாடியிலிருந்து சித்தாளை கூப்பிட நினைத்து சத்தமாக கத்தினார். சித்தாளின் காதுகளில சத்தம் விழவில்லை. மறுபடியும் கூப்பிட்டார். பலனில்லை. போதாத குறைக்கு இயந்திரங்களின் சத்தங்கள் அவரின் காதை அடைத்தது. மேஸ்திரி வேறு வழியின்றி ஒரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் போட்டார். திடுக்கிட்டு, திரும்பி பார்த்த சித்தாள், 'என்ன வேண்டும் ஐயா?' என்று கேட்டான். மேஸ்திரி, 'மேலிருந்து பெரிய கிரானைட் கல்லை இறக்குகிறோம். அதனால் உன்னை கொஞ்சம் விலகி நிற்க சொன்னேன்' என்றார்.

.

இதேப்போலத்தான் ஆண்டவர் நம்மிடம் பேசும்போதெல்லாம் நம்முடைய பாவம் என்னும் தூரம் அந்த உறவை தடுக்கிறது. அதோடு கூட இவ்வுலகத்தின் ஆசைகள், துர்க்குணங்கள், அவர் அழைக்கும் குரலை கேட்கக்கூடாதபடிக்கு நம் காதுகளை அடைத்து விடுகின்றன. ஆகவே தேவனும் வேறு வழியின்றி கற்கள் போன்ற சில சிட்சைகளை அனுப்புகிறார். இந்த சிட்சையின் நிமித்தமாகவாவது என் மகன், மகள் என்னை நோக்கி பாக்கமாட்டானா? என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார். தேவனின் நோக்கம் என்ன? இந்த சிறு கல்லை போட்டால் என் பிள்ளையை பெரிய கல்லாகிற பாதாளத்திற்கு விலக்கி தப்புவித்து விடலாம் என்பதே.

.

பிரியமானவர்களே, தேவனுடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிருங்கள், அவரால் கடிந்து கொள்ளப்படும்போது சோர்ந்து போகாதீர்கள். தகப்பன் சிட்சியாத பிள்ளை உண்டோ? நாம் அவரது பிள்ளைகள் என்றால் நிச்சயமாக நாம வழிதப்பி நடக்கும்போது, அவர் நம்மை சிட்சிப்பார். அந்த சிட்சையில நாம செய்ய வேண்டியது என்ன? தேவனை நோக்கி பார்க்க வேண்டும். 'நான் சரி செய்ய வேண்டிய காரியம் என்ன? மாற்றி கொள்ள வேண்டிய குணநலன் என்ன?' என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேதத்தை வாசிக்கும்போதும் தேவனுடைய வார்த்தையை கேட்கும்போதும்,அவர் சுட்டிக்காட்டுகிற உணர்த்துகிற காரியங்களை விட்டுவிட வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

.

மருத்துவ உலகம் என்ன சொல்லுகிறது? 'எந்த ஒரு பெரிய வியாதியும் முன் அறிகுறிகளின்றி திடீரென்னு வருவதில்லை. சிறுசிறு கோளாறுகள் தெரியம்போதே உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் பெரிய ஆபத்திற்கு தப்பிக்கலாம்' என்பதே. ஆம், இது நம் ஆவிக்குரிய வாழ்விலும் உ;ணமை. சிறிய சிட்சையில் நம்மை திருத்தி கொண்டால், வரப்போகும் பேராபத்திற்கு தப்பித்து கொள்ளலாம். ஒரு நாள் வரப்போகிறது. அந்நாளில் நாம் செய்யும சகல காரியமும் நியாயத்தில் கொண்டு வரப்படும். அப்போது நாம் செய்யும் அநியாயமான, துர்க்காரியங்களுக்கு நித்திய நரகம் என்னும் பேராபத்து உண்டு. அதற்கு தப்புவிக்கவே இந்த சிட்சை கர்த்தர் அனுமதிக்கிறார். ஆகவே அவரது குரலுக்கு செவிசாய்த்து அவரது பாதையில் நடப்போம், நித்திய ஜீவனை சுதந்தரித்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்

இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்

சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே

பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்கவல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசிக்கும் நல்ல தகப்பனே, நீர் எங்களை அதிகமாய் நேசிக்கிறபடியால் சிறு சிறு சிட்சைகளை அனுமதிக்கிறீரே உமக்கு நன்றி. அந்த சிட்சைகளில் நாங்கள் சோர்ந்து போய் விடாதபடி, எங்களுக்கு பெலனை கட்டளையிடும். சோதனை வேளையில், எங்களிடத்தில் காணப்படும் தவறுகளையும், தேவன் உணர்த்துகிற காரியங்களையும் நாங்கள் ஆராய்ந்து அவைகளை விட்டுவிட கிருபை பாராட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

சனி, 21 செப்டம்பர், 2013

இந்த வார வாக்குத்தத்தம் -22nd Sept 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

...
 
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.