Friends Tamil Chat

வியாழன், 20 பிப்ரவரி, 2014

20th Feb 2014 - தேவன் நம் பட்சத்தில்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 20-ம் தேதி – வியாழக்கிழமை
தேவன் நம் பட்சத்தில்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். - யாக்கோபு 4:7.

.

ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒருவர் நின்று அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிங்கம் இருந்த கூண்டுக்குள் அங்கு வேலை செய்கிற ஒரு மனிதன் தன் கையில் ஒரு துடைப்பத்துடன் (Broom) உள்ளே நுழைந்ததைப் பார்த்தார். அந்த மனிதன் அங்கு சுத்தம் பண்ண ஆரம்பித்தான். சிங்கம் இருந்த இடத்திற்கு வந்தவுடன் தன் கையில் உள்ள துடைப்பத்தால், அந்த சிங்கத்தை உசிப்பி விட்டவுடன், அந்த சிங்கம் அவனைப் பார்த்து ஒரு புர்ர்ர் என்று உறுமிவிட்டு, எழுந்து வேறிடத்தில் போய் படுத்துக் கொண்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர், ஓ, இந்த மனிதன் மிகவும் தைரியம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், என்று எண்ணி, அந்த மனிதனிடம் போய், 'நீர் மிகவும் தைரியமாக இருக்கிறீர், தைரியமாக உள்ளே நுழைந்து அந்த சிங்கத்தை உசிப்பி விட்டீரே, அந்த சிங்கம் உம்மேல் பாய்ந்து கடிக்கும் என்று பயமில்லையா?' என்றுக் கேட்டார். அதற்கு அந்த மனிதன் 'இல்லை, நான் தைரியமானவன் இல்லை' என்றுக் கூறினான். அப்போது அந்த மனிதர், ' அப்படியானால் அந்த சிங்கம் நன்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றுக் கூறினார். அப்போது அந்த மனிதன், 'நான் தைரியவானும் இல்லை, இந்த சிங்கம் பயிற்சி பெற்றதும் இல்லை, ஆனால் இந்த சிங்கம் வயதானது, அதற்கு பல்லும் இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியாது' என்றுக் கூறி சிரித்தான்.

.

அப்படித்தான் நம் வாழ்விலும் பிசாசு வந்து சிலவேளைகளில் பயமுறுத்திப் பார்க்கிறான். ஆனால் அவன் தலையை கிறிஸ்து இயேசு சிலுவையில் நசுக்கி விட்டார். அவன் தோற்றுப் போனவன். 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' யாக்கோபு. 5:8 என்றுப் பார்க்கிறோம். எந்த சிங்கமாவது விழுங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? சிங்கம் என்றால் கடித்துச் சாப்பிடுமே ஒழிய விழுங்காது. பிசாசானவன் விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான் ஏனென்றால்; அவன் பல் பிடுங்கப்பட்ட சிங்கம். அவன் தலையை நம் இயேசுகிறிஸ்து சிலுவையிலே நசுக்கிவிட்டார். அவன் கெர்ச்சித்து பயமுறுத்துவானே ஒழிய அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

.

அவன் உங்கள் வாழ்க்கையில் கெர்சிக்கிற சிங்கத்தைப் போல பயமுறுத்தலாம், ஆனால் அதைக் கண்டு பயந்து விடாதீர்கள். உங்கள் வேலை இடத்தில், உங்கள் அனுதின வாழ்க்கையில், அவன் பல தந்திர வேலைகளைச் செய்யலாம். ஆனால் பயப்படாதிருங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். நீங்கள் கர்த்தரை சார்ந்து ஜீவிப்பீர்களானால், உங்களுக்கு எதிராக கூட்டங் கூடினவர்கள் உங்கள் பட்சத்தில் வருவார்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?

.

உங்கள் வேலையிடங்களில், உண்மையாய் வேலை செய்யுங்கள், கடினமாய் உழையுங்கள். உங்கள் அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்று வேலை செய்யாமல் கர்த்தர் பார்க்கிறார் என்று வேலை செய்யுங்கள். கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருப்பதைக் காண்பீர்கள். என்னுடைய வேலையிடத்திலும், என் அதிகாரி காரணமில்லாமல் எனக்கு விரோதமாக இருந்தார்கள். ஆனால் விடாமல் அவர்களுக்காக அவர்கள் பெயரைச் சொல்லி ஜெபித்தேன். கர்த்தர் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப்போட்டார். கர்ததர் என் வேலையிடத்தில் விசேஷித்த ஞானத்தைக் கொடுத்து என்னை உயர்த்துவதை என்னால் நன்கு உணர முடிந்தது. கர்த்தர் நம்மோடு பயங்கர பராக்கிரமசாலியாய், ஞானம் நிறைந்தவராய், எல்லாவற்றிலும் நம்மை வழிநடத்துகிறவராய் இருக்கும்போது நாம் எந்த மோசமான அதிகாரிக்கும் கலங்க தேவையில்லை. நமக்கு விரோதமாய் எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். ஆமென் அல்லேலூயா! கர்த்தர் நமக்கு வெற்றியைத் தருவார். அவரை மாத்திரம் விடாமல் பற்றிக் கொள்ளுங்கள்.

.

உனக்கெதிராய் எழும்பும் ஆயதம்

வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்

நீர் அறியா யாதும் நேரிடா

என் தலை முடியும் எண்ணினீரே

ஜெபம்
எங்களை நேசிக்கும் நல்ல தகப்பனே, சத்துரு எங்களை விழுங்க வகைத்தேடும்போது எங்களை உம்முடைய மறைவிடத்தில் வைத்து காப்பவரே உம்மை துதிக்கிறோம். நீர் எங்கள் பட்சத்தில் இருக்கும்போது எங்களுக்கு விரோதமாய் இருப்பவன் யார் ஆண்டவரே! உங்களை தொடுபவன் என் கண் மணியைத் தொடுகிறான் என்றுச் சொல்லி எங்களை உம்முடைய கண்ணின் மணிப்போல காப்பவரே உம்மைத் துதிக்கிறோம். எங்கள் துதிகளை உம்முடைய நாமத்திற்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதைத்தருவேன் என்று சொன்னவரே, உம்முடைய பரிசுத்த; குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் விண்ணப்பங்களை உமது சமுகத்தில் ஏறெடுக்கிறோம் தகப்பனே, தயவாய் செவி சாய்ப்பீராக.

.

இலங்கையில் இருக்கும் சகோதரன் வரத சீலன் அவர்களின் சகோதரியின் மகன் 28 வயதாகியும் பொருத்தமான தொழில் கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதால், தொடர்ந்து தினமும் விசுவாசத்தோடு ஜெபித்து வரும் அவருக்குப் பொருத்தமான தொழில் ஒன்றை தேவன் தாமே கட்டளையிட்டுத்தர வேண்டுமாறு ஜெபிக்கிறோம். மிகவும் அப்பாவித்தனமான அவர் எவராலும் ஏமாற்றப்பட்டு விடாமல் கர்த்தர் காத்தருள வேண்டுமெனவும் ஜெபிக்கிறோம். அவருடைய மன வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் வினோத் அவர்கள் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பாவ செயல்களில் ஈடுபட்டு, இப்போது கர்த்தரை ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டதற்காக உமக்கு ஸ்தோத்திரம். இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்று வசனம் கூறுகிறதே, ஆனால் இவர் தன்னுடைய பாவங்களினால் தீங்கும், பொல்லாப்பும் தன்னை தொடருவதாக எழுதியிருக்கிறாரே, எல்லா தீங்கையும், பொல்லாப்பையும் கொண்டு வருகிற அசுத்த ஆவிகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கட்டி அப்புறப்படுத்துகிறோம். அவர் இன்னும் அதிகமாக கர்த்தரை பற்றிக் கொண்டு, வேதத்தை வாசித்து, ஆவிக்குரிய வாழ்வில் பெலப்பட உம்மிடம் ஜெபிக்கிறோம்.

.

சகோதரி ரோசலின் அவர்களின் ஸிஸ்டர் இன் லா ரோஸி அவர்களுக்கு ஒன்பது மாதத்திற்கான சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை என்று எழுதியிருக்கிறார்களே, அவர்களுக்கு அவர்கள் உழைத்த மாதங்களின் சம்பளம் உடனே கிடைக்க தேவன் கிருபை செய்வீராக. யார் யார் கண்களில் தயவு கிடைக்க வேண்டுமோ, அவர்களின் கண்களில் தயவு கிடைத்து, அவர்களின் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் யோகநாதன் அவர்களின் மகள் கேசியா காலேஜில் சீனியர்களினால் ரேகிங் செய்யப்படுவதாக எழுதியிருப்பதால், அந்த மாதிரியான செய்கைகள் எல்லா காலேஜ்களிலும் நிறுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் இப்படியான காரியங்கள் நடைபெறுவதை தேவன் தாமே நிறுத்தும்படியாக ஜெபிக்கிறோம். உமது மகள் இதனால் எந்த பாதிப்பிற்குள்ளாகாதபடி தேவன் காத்துக் கொள்ளும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரி எஸ்தர் அவருடைய கணவர் மோசஸ் அவர்கள் இற்ற மதத்திலிருந்து கர்த்ரை ஏற்றுக் கொண்டபடியால், அவர்களுடைய குடும்பத்தினர் அவர்களை எப்படியாவது திரும்ப தங்களுடைய மதத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று மந்திரங்களை செய்கிறதாக சகோதரி எழுதியிருக்கிறபடியால், இஸ்ரவேலுக்கு விரோதமான மந்திரமும் இல்லை, யாக்கோபுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை என்கிற வாக்கியம் இவர்களின் வாழ்வில் நிறைவேறும்படி ஜெபிக்கிறோம். எந்த மந்திரவாதமும் இவர்களை தொடாதபடி காத்துக் கொள்ளும். இவர்களுடைய மகள் முன்பு நன்கு படிப்பவள், இப்பொழுது படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று சொல்வதால், இரண்டு பிள்ளைகளையும் நீர் பொறுப்பெடுத்துக் கொள்ளும்படி ஜெபிக்கிறோம். அவர்களுடைய உறவினர்கள் யாவரும், நீரே தேவன் என்பதை அறிந்துக் கொள்ள அவர்களின் கண்களை திறந்தருளும். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.