Friends Tamil Chat

வியாழன், 28 நவம்பர், 2013

29th Nov 2013 - தசமபாகம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 29-ம் தேதி - வெள்ளிக்கிழமை
தசமபாகம்
....

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (மல்கியா 3:10).


ஒரு முறை ஒரு வாலிபன் தன் போதகரிடம் தேவன் தனக்கு ஒரு வேலை தந்தால் தனக்கு வரும் சம்பாத்தியத்தில் எல்லாம் தசமபாகம் தருவதாக பொருத்தனை பண்ணிக் கொண்டான். அதன்படி அவனுக்கு வேலை கிடைத்து முதல் வாரம் பத்து ரூபாய் சம்பளத்தின்படி 1 ரூபாய் தசமபாகம் தந்தான். அடுத்த வாரம் 7 ரூபாய் கொடுத்தான். ஒரு மாதத்தில் 10 ரூபாய் கொடுத்தான் அடுத்த மாதம் அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்து, 100 ரூபாய் கொடுத்தான் இப்படி படிப்படியாக முன்னேறி 500 ரூபாய்கள் கொடுக்க வேண்டி வந்தது. அப்போது தனது போதகருக்கு போன் பண்ணி, 'வாருங்கள் நான் உங்களிடம் பேச வேண்டும்' என்று அழைத்தான். அவர் வந்தபோது, 'நான் உங்களோடு ஜெபித்த போது; தசமபாகம்கொடுப்பதாக பொருத்தனை பண்ணினேன்'. அதிலிருந்து எப்படி மீள்வது? என்றுக் கேட்டான். அதற்கு போதகர் 'எதற்கு மீள வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'நான் முதலில் 1 ருபாய் கொடுத்தேன். பின் 10 ரூபாய் கொடுத்தேன் அது சரி, இப்போதோ 500 ரூபாய்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எனக்கு இப்படிக் கொடுத்து கட்டுப்படியாகாது' என்று கூறினான்.

.

அதற்கு போதகர், 'ஒரு முறை பொருத்தனை பண்ணினால் அதை விடுவது ஆபத்தானது. வேண்டுமென்றால் நாம் ஒன்று செய்யலாம், கர்த்தரை மீண்டும் உன்னை பழைய நிலைக்கே கொண்டுபோய் விடச் சொல்லலாம்' என்றார். அந்த வாலிபன் வாயடைத்து நின்றான்.

.

தசமபாகம் கொடுப்பதில் நாம் எப்படி இருக்கிறோம்? கர்த்தருக்கு உண்மையாக இருக்கிறோமா? சிலருக்கு வெளிநாடுகளில் சம்பாதித்து அப்படியே கை நிறைய பணம் போகிறதே என்கிற கவலை. இத்தனைக்கும் அவர்கள் கொடுப்பது பத்தில் ஒரு பங்குதான். என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். கடனே வாங்காமல் எல்லா ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க தேவன் கிருபை செய்திருக்கிறார். பண விஷயத்தில் மாத்திரம் அல்ல, உடல் சுகம் மற்றும் எல்லா வித்திலும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைக் காண முடிகிறது. தசமபாகம் கொடுப்பதின் மூலம் கிடைக்கும் ஏழு மடங்கு ஆசீர்வாதத்தைக் குறித்து கீழ்க்கண்டவாறு காணலாம்:

.

1. நமது இருதயத்தை கர்த்தருடைய சித்தத்தை செய்யும்படி ஆசீர்வதிக்கிறது.

.

2. நமது வாழ்க்கையை தேவகிருபையினால் நாம் எண்ண முடியாத உயரத்திற்கு கொண்டு வருகிறது.

.

3. நமது கைகளை கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு தயாராக்குகிறது.

.

4. நமது சிந்தனையில் கர்த்தருக்கென்று சரியான காரியத்தைச் செய்தோம் என்கிற திருப்தியை தருகிறது.

.

5. கர்த்தரை கனப்படுத்தியதால் மீதமிருக்கிற ஒன்பது பகுதிகளும் நமக்கு ஆசீர்வாதமாக்கப்படுகிறது.

.

6. தனிப்பட்ட ஊழியருக்கு தங்களுடைய ஊழியத்தை தடையின்று நடத்தப்பட ஆசீர்வாதமாகிறது.

.

7. சபையானது இன்னும் அதிக அளவில் கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்ற உதவுகிறது.

.

இப்படி ஆசீர்வாதங்களைப் பெற காரணமாயிருக்கிற தசமபாகத்தை கர்த்தருக்கு தொடர்ந்து செலுத்துவோம். கர்த்தர் இதன் மூலம் கனப்படுகிறார். நம்மை ஆசீர்வதிப்பார்.

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்களுடைய தசமபாகத்தை உமக்கு தடையின்றி கொடுக்க எங்கள் இருதயங்களை ஏவியருளும். அவற்றை உமது நாம் மகிமைக்காக பயன்படுத்தும். இதன்மூலம் நீர் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும் எங்களை ஆசீவதிப்பதற்காக நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 27 நவம்பர், 2013

28th Nov 2013 - தேடி வந்த தெய்வம் இயேசு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 28-ம் தேதி - வியாழக்கிழமை
தேடி வந்த தெய்வம் இயேசு
....

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். - (வெளிப்படுத்தின விசேஷம் 3:20).

.
கர்னல் இங்கர்சால் ஒரு பெரிய நாத்திகவாதி. கடவுளே இல்லை என்று சொல்லி அநேக புத்தக்களை எழுதினார். மாத்திரமல்ல, அநேக கிறிஸ்தவ ஊழியர்களை தர்க்கத்திற்கு அழைப்பது அவருடைய வழக்கமாயிருந்தது.

.

ஒருமுறை அந்த நாத்திகவாதி நடத்திய புத்திசாலிகளின் பாசறைக்கு தேவ ஊழியரான ஹென்றிவார்டு சென்றிருந்தார். தன்னுடைய நாத்திகவாத கூட்டத்திற்கு அந்த போதகர் வந்திருப்பதை பார்த்ததும் கர்னலுக்கு இன்னும் உற்சாகம் வந்து விட்டது. கடவுள் இல்லை என்பதற்கு தன்னுடைய வாதத்தை அடுக்கடுக்காக அடுக்கி திறம்பட பேசினார். கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியாது. கடவுள் என்பதே ஒரு பெரிய தத்துவம் என்று பல உதாரணங்கள், கதைகள் மூலமாக விளக்கி சொல்லி கொண்டே இருந்தார்.

.

ஆனால் போதகரோ ஒன்றும் பேசாமல் அமைதியாய் உட்கார்ந்திருந்தார். கூட்டத்திலுள்ளவர்கள் எல்லாரும் போதகர் தன்னுடைய கருத்தை தெரிவிக்கும்படி கேட்டார்கள். அதற்கு அந்த முதிய போதகர் எழுந்து, 'நான் இந்த கூட்டத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது, ஒரு சம்பவம் நடந்தது. நான் ஒரு முக்கியமான ரோடு வழியாக வந்து கொண்டிருந்தேன். அங்கே இரண்டு கால்களும் ஊனமான ஒரு மனுஷன் தன் கையின் இடுக்கிலே இரண்டு ஊன்று கோல்களை வைத்து கஷ்டப்பட்டு அநத ரோடடை கடக்க முயற்சித்தான். அந்த ரோடு பள்ளமாக, சேறும் சகதியுமாக இருந்தது. அப்போது எங்கிருந்தோ ஒரு முரடன் ஓடி வந்தான். 'உனக்கு ஏன் இந்த ஊன்றுகோல்?' என்று சொல்லி, அந்த முடவனுடைய இரண்டு கோல்களையும் பிடுங்கி கொண்டு ஓட ஆரம்பித்தான். பாவம் அந்த முடவன், அழுக்குதண்ணீரில் விழுந்து பரிதாபமாய் கதறினான். அந்த கூககுரல் இன்னும் என் காதில் கேட்டு கொண்டிருக்கிறது' என்று கூறினார்.

.

உடனே அந்த நாத்திகவாதி கோபத்துடன், 'அந்த முரடன் சுத்த அயோக்கிய பயலாக இருக்க வேண்டும், ஈவு இரக்கமில்லாத அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்' என்று கூறினார். ஜனங்களும் யார் அவன்? என்று கேட்டனர் போதகர் உணர்ச்சி வசத்துடன், அங்கிருந்த மக்களை பார்த்து ' நான் உண்மையை சொல்லுகிறேன். மனிதனுடைய ஆத்துமாக ஊனமடைந்திருக்கிறது. அவன் எப்படியாவது கடவுள் பக்தி என்ற ஊன்று கோலை ஊன்றி எழும்ப முயற்சிக்கிறான். ஆனால் எனதருமை நாத்திகவாதிகளான கர்னல் போன்றவர்களோ, தேவ பக்தி என்ற ஊன்று கோல்களை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள். இதனால் மனித ஆத்துமா நம்பிக்கையில்லாமல் தவிக்கிறது. மனித ஆத்துமாவுக்குள்ளே இருக்கும் கிறிஸ்தவத்தை பிடுங்குவதுதான் உங்கள் தொழிலானால் அதை மனம் நிறைந்த அளவுக்கு செய்யுங்கள். மரத்தை வளர்ப்பது கடினம், நீங்களோ அதை வெட்டி வீழ்த்துகிறீர்கள்' என்றார். அவர் பேசி முடித்தவுடன் பெரும் அமைதி நிலவியது.

.

இந்த நாட்களில் தேவையற்ற புத்தகங்களை படித்து, தேவன் இல்லை என்கிற எண்ணம் வாலிபர் பலருக்கு உருவாகி இருக்கிறது. அவர்கள் தேவையுள்ள புத்தகமாகிய வேதத்தை விட்டுவிட்டு, தேவையற்ற, குப்பையும், ஒன்றுக்கும் உதவாததுமாகிய தத்துவங்களை ஏற்று கொண்டு, தங்களுக்கே கேடு விளைவித்து கொண்டிருக்கிறார்கள்.

.

மனிதன் படைக்கப்படும்போதே அவனுடைய இருதயத்தில் தேவனை தேடும்படியான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவன் தேவன் இல்லை என்று சொல்லும்போது, அந்த இடம் வெற்றிடமாக மாறி விடுகிறது. வெற்றிடமாக உள்ள அந்த இடத்தில் வேறு எதை வைத்தாலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது.

.

மற்றும், உண்மையான தேவனை அவன் கண்டுபிடிக்கும் வரை அவனது இருதயத்தில் வெற்றிடமே காணப்படுகிறது. அதை அவன் நிரப்புவதற்காக எங்கெங்கோ தேவனை தேடி அலைகிறான். 'இருக்கின்ற இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞான தங்கமே' என்று பண்டைய புலவன் பாடி வைத்து போனான். ஆம், அவர் இருக்கும் இடம் நம் இருதயமே. அதில் அவரை அழையாதபடி, இல்லாத இடங்களை நோக்கி, எங்கெங்கோ சென்று, தவமிருந்து அந்த தெய்வத்தை, தன்னுடைய வெற்றிடமாகிய இருதயத்தில் வைக்கும்படி தேடி கொண்டிருக்கிறான். உண்மையான தெய்வம், அவர்கள் தேடி செல்லும் இடங்களில் அல்ல என்ற உண்மையை அந்த மனிதன் அறிந்து கொள்வது மிகவும் கடினமானதொன்றாகும்.

.

மனிதனை தேடி வந்த தெய்வம் ஒருவர் உண்டு என்பதை அவன் அறிந்தானானால் எத்தனை நலமாயிருக்கும்! மற்ற தெய்வங்களை தேடி அவன் ஒவ்வொரு இடமாக செல்கிறான். ஆனால், நம்மை தேடி வந்த தெய்வம் ஒருவர் உண்டு. அவர் தான் இயேசுகிறிஸ்து. 'நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்' - (யோவான் 15:16) என்று சொன்ன ஒரே தேவன் இயேசுகிறிஸ்து மட்டும்தான். நாம் இருக்கிற இடத்தை தேடி வந்து, தம்மை வெளிப்படுத்த சித்தம் கொண்டு, இப்போது நீங்கள் படிக்கும் இந்த வார்த்தைகள் மூலம் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறாரே, நீங்கள் அவரை தேடி போகவில்லை, அவர் உங்களை தேடி வந்திருக்கிறார். நீங்கள் அவரை ஏற்று கொள்ளும்போது, அவர் உங்களுக்குள்ளே வந்து உங்கள் வாழ்க்கையை மாற்றி, வெறுமையாயிருக்கிற காலியிடத்தை நிரப்பி, உங்களை அற்புதமாக நடத்துவார். 'இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்' - (வெளிப்படுத்தின விசேஷம் 3:20) என்று நம் இருதய கதவை தட்டி கொண்டிருக்கும் தேவனுக்கு நம் இருதய கதவுகளை திறப்போமா? நாம் திறக்கும்பட்சத்தில் அவர் உள்ளே பிரவேசித்து, நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

வாசலண்டை நின்று ஆசையாய் தட்டும்

நேசர் இயேசுவுக்குன் உள்ளம் திறவாயோ

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்

வாவென்று உன்னை அழைக்கிறாரே

...

வழியும் சத்தியமும் ஜீவனும் இயேசு

வாசலும் மீட்பரும் தேவனும் இயேசு

இயேசுவல்லால் வேறு இரட்சிப்பு இல்லையே

இரட்சண்ய நாள் இன்றே வந்திடாயோ

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும், தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லி கொண்டு, அவன் தன்னையே ஏமாற்றி கொண்டாலும், இருதயத்தில் வாசம் செய்கிற தேவன் ஒருவர் உண்டு என்பதையும், அவரே இருதயத்தின் வெற்றிடத்தை நிரப்ப வல்லவர் என்பதையும் அறிந்து கொள்ள கிருபை தாரும். எங்களை தேடி வந்த தெய்வமும், நாங்கள் அவரை அறியாத போது, அவர் எங்களை தேடி வந்து, எங்களை தெரிந்து கொண்டு எங்களுக்குள்ளே வாசம் செய்கிற தயவிற்காக உமக்கு நன்றி. இந்த நாளில் யாராவது இன்னும் உம்மை ஏற்று கொள்ளாமலிருந்தால், வாசலண்டை நின்று தட்டும் உம்முடைய சத்தத்தை கேட்டு, தங்கள் இருதய கதவுகளை திறந்து, உம்மை அழைக்கவும், நீர் அங்கு தங்கியிருந்து, அவர்களுக்கு அற்புதங்களை செய்யவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

27th Nov 2013 - மசாடா - Masada

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 27-ம் தேதி - புதன் கிழமை
மசாடா - Masada
....

தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான். - (2 சாமுவேல் 23:14).

.
இஸ்ரவேல் தேசத்தில் மசாடா என்னும் இடம் சவக்கடலுக்கும் எங்கேதி என்னும் இடத்திற்கும் சமீபமாயும் தனியாகவும் அமைந்துள்ள ஒரு பெரிய அகன்ற பாறையின் மேல் உள்ள இடமே மசாடாவாகும். இந்த மசாடாவிற்கு செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அங்கு செல்வதற்கு சரியான பாதைகள் இல்லை. நாங்கள் இஸ்ரவேலுக்கு சென்றிருந்தபோது, இந்த மசாடாவிற்கு அழைத்து சென்றிருந்தார்கள். நாங்கள் கேபிள் காரில் தான் அங்கு செல்ல முடிந்தது. கீழிருந்து மேலே செல்வதற்கு பாம்பின் பாதை என்று சொல்லப்படும் வழி மாத்திரமே நடந்து செல்வதற்கு உள்ளது.

.

இந்த மசாடா 190 அடி கடல் மட்டத்திலிருந்து உயரமானதாகவும், சவக்கடலில் இருந்து 1900 அடி உயரமானதாகவும் அமைந்துள்ளது. மேலே 23 ஏக்கர் பரப்பளவு உள்ளதாக அகலமானதாக உள்ளது. தாவீது சவுல் ராஜா தன்னை துரத்தி வந்த போது இந்த இடங்களில் தங்கியிருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மசாடாவை பற்றி வேதத்தில் கூறப்படாவிட்டாலும், தாவீது தங்கியிருந்த அரணான இடம் இதுவாயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

.

இந்த மசாடாவில் ஏரோது ராஜா அந்த நாட்களில் ஒரு அரண்மனையை தனக்கென்று கட்டி, 15 தளவாடங்களை வைக்கும் சேமிப்பு அறைகளையும், அந்த காலத்திலேயே ஸ்பா என்று சொல்லப்படும் நீராவி குளியல் போன்றவற்றை தனக்கென்று ஆயத்தப்படுத்தி, அந்த இடத்திலே சகல வசதிகளோடும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

.

கி.பி. 70ல் தீத்து ராயன் எருசலேமை நெருப்பினால் கொளுத்தி, ரோமர்கள் எருசலேமை கைப்பற்றியபோது, எலியேசர் பென் யார் என்னும் ரபியின் தலைமையில் ஒரு கூட்ட மக்கள் ரோமர்களுக்கு விரோதமாக கலகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் எருசலேமில் இருந்தால், ரோமர்கள் அவர்களை கைது செய்து கொன்று போடுவார்கள் என்று நினைத்து, இந்த கூட்டத்தினர் மசாடாவில் தங்கி, அங்கிருந்து போர் திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர். மூன்று வருடங்கள் அங்கேயே இருந்து, அவர்கள் ரோமர்களுக்கு எதிராக கலகம் செய்து கொண்டிருந்தனர். இதை அறிந்த ரோம அரசு அவர்களை பிடித்து வரும்படியாக தன் படையை அனுப்பியது. மிகவும் உயரமாக இருந்த மசாடாவில் தங்கியிருந்த இந்த யூதர்களை பிடிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக ரோமர்களுக்கு இருந்தது.

.

பெரிய பெரிய கல் எறியும் எந்திரங்களை சிரமத்தோடு கொண்டு வந்து மசாடாவின் சுவர்களை உடைக்க ஆரம்பித்தார்கள். மசாடாவை சுற்றி வளைத்து யாரும் வெளியே செல்ல முடியாதபடி வீரர்களை காவல் வைத்தனர். உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை. யூதர்கள் தாங்கள் எப்படியும் ரோமர்கள் கையில் விழுந்து விடுவோம் என நினைத்து, இனி என்ன செய்வது என்று திகைத்தபடி இருந்த நிலையில், யூத ரபி எலியேசர் எழுந்து பேச ஆரம்பித்தார். அவருடைய அந்த பேச்சு, சரித்திர புகழ் வாய்ந்தது.

.

'நாம் யாருக்கும் அடிமைப்பட போவதில்லை. தேவன் ஒருவருக்கே நாம் யாவரும் அடிமைகள். நம் மனைவிகளும் பிள்ளைகளும் யாருக்கும் பணிந்து போக வேண்டியது இல்லை. இப்போதும் நாம் தான் ரோமர்களுக்கு விரோதமாக போராட்டத்தை துவங்கினோம், நாமே அதை முடிப்போம்' என்று சொல்லி, அங்கு இருந்த ஒவ்வொரு யூதனும், தன் மனைவியையும், பிள்ளைகளையும் கொல்ல வேண்டும் என்றும், பின் ஒருவரையொருவர் குத்தி கொல்லப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி, நாம் ஒருக்காலும் புறஜாதியாரின் கரங்களில் மரிக்க வேண்டாம் என்று சொல்லி தன் பேச்சை முடித்தார். அவர் 'நாம் உணவில்லாமல் மரித்தோம் என்று யாரும் சொல்லாதபடி, நம்முடைய உணவு பொருட்களை அழிக்க வேண்டாம். மற்றவர்களுக்கு தெரியட்டும், இங்கு நமக்கு உணவிற்கு பஞ்சமில்லை என்று, மற்ற எல்லாவற்றையும் முதலில் அழித்து விடுங்கள்' என்று சொன்னார். அதன்படி அவர்கள் எல்லா பொருட்களையும் தீ வைத்து கொளுத்தி விட்டு, பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் மனைவியையும், பிள்ளைகளையும் கொன்று விட்டு, பின் ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டனர். அந்த நாளில் அங்கு மரித்தவர்கள் 960 பேர் என்று கூறப்படுகிறது.

.

ரோம வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு, சுவரை உடைத்து உள்ளே நுழைந்த போது, யாவரும் அங்கு மரித்திருக்க கண்டனர். அங்கு ஒளிந்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து சிறு பிள்ளைகள் மாத்திரம் நடந்ததை அறிவிப்பதற்காக விடப்பட்டிருந்தனர். பியேவியஸ் ஜோசபஸ் என்னும் சரித்திர ஆசிரியர், தான் கேள்விப்பட்டதை எழுதியிருக்கிறார்.

.

யூதர்கள் தாங்கள் ரோமர்களின் கைகளில் சிக்கிவிடாதபடி தைரியமாக இந்த செயலை செய்து தங்கள் முடிவை தெரிந்து கொண்டார்கள் என்று அவர்கள் நினைத்தாலும், அவர்கள் செய்த காரியம் மிகவும் தவறானதே! அவர்களை எப்படியும் கைப்பற்றி விடலாம் என்று மிகவும் பிரயத்தனம் செய்து, அந்த பெரிய மலையின்மேல் எந்திரங்களை பாடுபட்டு கொண்டு வந்து, கடைசியில் ரோமர்கள் யூதர்களை பிடித்து விட்மோம் என்று வெற்றி களிப்பில் இருந்த நேரத்தில், அவர்களுக்கு கிடைத்தது மிகப்பெரிய தோல்வியே!

.

இந்த சம்பவம் நடந்து 2000 வருடங்கள் ஆகியும், இந்த நாட்களில் யூத வீரர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த இடத்தில் வந்து, தங்கள் மூதாதையர் செய்த காரியத்தை வருத்தத்தோடு நினைவு கூர்ந்து, 'திரும்பவும் இந்த மசாடா விழப்போவதில்லை' என்று உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள்.

.

இந்த யூதர்கள் தங்கள் மூதாதையரான சவுல் செய்த காரியத்தையே செய்திருக்கிறார்கள். எப்படியெனில், 'சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்' (1 சாமுவேல் 31:3-5) என்று வசனத்தில் பார்க்கிறோம். தாங்கள் ஒருக்காலும் விருத்தசேதனமில்லாதவர்கள் கையில் விழக்கூடாது என்று சவுல் ராஜா பட்டயத்தால் தன்னை குத்தி மரித்ததை போல இவர்களும் செய்தார்கள் என்றாலும், தேவன் அந்த காரியத்தை ஒருபோதும் அனுமதிப்பதில்லை, அது அவர் பார்வைக்கு தவறானதொன்றாகும்.

.

இந்த மசாடாவிற்கு நாங்கள் சென்றிருந்தபோது, ஒரு சிறிய வீடியோ திரைப்படத்தை எங்களுக்கு போட்டு காண்பித்து, இந்த சம்பவத்தை வெளிப்படுத்தினார்கள். மற்றும் அந்த காலத்திலேயே ஏரோது ராஜா எல்லா வசதிகளோடும் வாழ்ந்திருந்தான் என்பதையும் அந்த இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி மூலமாக தெரிய வந்துள்ளது. தற்போது யாரும் இந்த இடத்தில் வாழ்வதும் இல்லை. இந்த மசாடாவும் யாருடைய கையிலும் விழப்போவதும் இல்லை. அல்லேலூயா!

.

இஸ்ரவேல் என் ஜனமே என்றும்

இடறிட வேண்டாம்

யேகோவா உன் தெய்வமானால்

ஏதும் பயம் வேண்டாம்

...

ஓங்கும் புயமும் பலத்த கரமும்

உன் பக்கமேயுண்டு

தாங்கும் கிருபை தயவு இரக்கம்

தாராளமாயுண்டு

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக என்று சொன்னீரே, நாங்கள் இஸ்ரவேல் தேசத்தை நேசிக்கிறோம் தகப்பனே, அந்த நாளில் மசாடாவில் 960 பேர் விழுந்து போனது போல ஒருக்காலும் அதை போன்ற நிகழ்ச்சி நடைபெறாதவாறு இஸ்ரவேலை காத்தருளும். இஸ்ரவேல் தேசத்தை எதிரிகளின் குறிகளிலிருந்து காத்து கொள்வீராக. அவர்கள் சுகமாய் வாழ கிருபை செய்யும். எருசலேம் சமாதானத்தோடு சுபிட்சமாய் இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 26 நவம்பர், 2013

26th Nov 2013 - திரும்ப வர முடியாது

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 26-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
திரும்ப வர முடியாது
...

'நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?' - மத்தேயு 13:33.

.
எங்களுடைய நகரிலே ஒரு பெரிய பொருட்காட்சி நடந்து கொண்டிருந்தது. எனது நண்பர்களுடன் நானும் அங்கு சென்றிருந்தேன். கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளின் மத்தியில் சிறு சிறு கடைகளும் அனைத்துவிதமான விளையாட்டுகளும், விதவிதமான திண்பண்டங்களும் பார்ப்பவரின் மனதை கொள்ளை கொள்வதாய் அமைந்திருந்தன.

.

இதில் ஒரு பிரமாண்டமான, மிகவும் வித்தியாசமான ராட்டினமொன்று (Giant Wheel) அனைவரது பார்வையையும் தன் வசமாக்கிக் கொண்டிருந்தது. அதன் விசேஷம் என்னவென்றால், ஏறுபவரின் உடம்பு பெல்டினால் இறுக கட்டப்பட்டு ஒரு சிறு அறைக்குள் அமர்ந்து கொண்டவுடன் கதவு மூடப்படுகிறது. பின்பு மேலும் கீழும் சிறிது சிறிதாக ஆட்டி பின் படுவேகமாக அசைக்கப்பட்டு தலைகீழாக ஐந்து நொடிக்கள் நின்று விடுகிறது. இதைக் கண்ட எனது நண்பனுக்கு அதில் ஏறவேண்டுமென்று மிகவும் ஆசை. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் என்று கூறினான். நாங்களும் ஆசையுடனும், பரபரப்புடனும் ஏறி அமர்ந்தோம். ராட்டினம் தன் வேலையை ஆரம்பித்தது. இறுதியில் என் நண்பர் கத்தி கதறி ஆண்டவரே! ஆண்டவரே! என்று கதறி அழுதேவிட்டார். அதிலிருந்து இறங்கிய பின்பும் சிறது நேரத்திற்கு அந்த பயத்திலிருந்து வெளிவர இயலவில்லை.

.

நண்பர்களே! இது ஒரு வேடிக்கையான நிகழ்ச்சிதான். இருப்பினும் ராட்டிணத்திலிருந்து இறங்கிய என் மனத்திற்குள் மனித மூளையினால் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரத்திலே ஒருவித மரண பயம் இருக்குமென்றால் சாத்தானுடைய நரகம் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். அப்பப்பா! எப்பாடு பட்டாவது பரலோகம் சேர்ந்துவிட வேண்டுமென்று என் மனம் வாஞ்சித்தது.

.

அருமையானவர்களே! ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இப்படிப்பட்ட சிறு சிறு பயங்கள் ஏற்படும்போது நாம் தப்பிக்கலாம். ஆனால் ஒருமுறை நரகத்திற்கு சென்றுவிட்டால் திரும்பி வரவே முடியாதல்லவா!

.

நரகம் என்பது உண்மை! பரலோகமென்பது நிச்சயம். நமது உலக வாழ்வின் நடத்தை அதில் ஒன்றை நமக்கு தீர்மானிக்கும். வாலிபனே! உனது பாதை நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்குமென்றால், தயவு செய்து யோசித்து உன் பாதையை மாற்றிக் கொள். பக்தன் பாடுகிறார் :

.

"பாவ மன்னிப்பின் நிச்சயத்தை

பெற்றுக் கொள்ள வேண்டும்

பரலோகத்தில் ஓர் இடம்

நீ பெற வேண்டும்"

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலேகப் பிதாவே, உம்மை வாழ்த்துகிறோம், உமது நாமத்தை மகிமைப் படுத்துகிறோம். எங்களை உம்முடைய பாதபடியில் ஒப்புக்கொடுக்கிறோம். இன்று எங்களுடைய பாவங்களை எல்லாம் மன்னித்து எங்களை பரிசுத்தமாக்கும். பரலேகத்தின் நிச்சயத்தை தாரும். எங்களுடைய ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்கிறதற்காக நன்றி, எல்லா துதி கனம் மகிமை உமக்கே செலுத்துகிறோம், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 21 நவம்பர், 2013

22nd Nov 2013 - கலங்கி தவிக்காதே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 22-ம் தேதி - வெள்ளிக்கிழமை
கலங்கி தவிக்காதே
...

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். - நீதிமொழிகள். 22:19.

.
1858ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 10ம் தேதி, சார்ல்ஸ் பிளான்டின் என்பவர், நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு முனை தொடக்கி, மறுமுனை வரைக்கும், 1100 அடி நீளமுள்ள கயிற்றின் மேல் நடக்கப் போவதாக அறிவித்தார். அதைக் காண இரு கரைகளிலும் கூட்டம் அலை மோதியது. அவர் 38 அடி நீளமும், 40 பவுண்ட் எடையுள்ள கோலை பிடித்துக்கொண்டு சமநிலையாக நடந்து, ஒரு முனையிலிருந்து மறுமுனையை வந்தடைந்தார். அதுவரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் அவர் வந்து சேர்ந்தவுடன் விண்அதிரும் கரகோஷத்தை எழுப்பியது.

.

அவர் தான் மீண்டும் நடக்கப் போவதாகவும், ஆனால் இந்த முறை ஒரு மனிதனை தன்னுடைய முதுகில் ஏற்றிக் கொண்டு நடக்கப் போவதாகவும் அறிவித்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம், நான் என் முதுகில் ஒரு மனிதனை ஏற்றி மறுகரையில் சேர்ப்பேன் என்று நம்புகிறீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு எல்லாரும் ஆம் என்று தலையை ஆட்டினார்கள். அப்படியானால் யாராவது வாருங்கள், நான் போய் சேர்க்கிறேன் என்று அழைத்தார். யாரும் முன்வரவில்லை. ஆகையால் தன் மேனேஜர் ஹென்றியிடம், நீங்கள் நம்புகிறீர்களா? என்றுக் கோட்டார். அதற்கு அவர் 'ஆம் நிச்சயமாக நம்புகிறேன். நானே உங்கள் பின்னால் அமர்ந்து வருகிறேன்' என்று கூறி அவர் மேல் அமர்ந்துக் கொண்டார். அவரை சுமந்தவாறு பிளான்டின் நடக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்தக் கயிறு ஆட ஆரம்பித்தது. உடனே பிளான்டின், ஹென்றியுடம், 'நீர் எதையும் செய்ய வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்தக் கொள்கிறேன்| என்று கூறி எச்சரித்தார். ஹென்றியும், எதுவும் செய்யாமல், பிளான்டினை முற்றிலும் சார்ந்து, இருவரும் பத்திரமாய் மறுகரை வந்து சேர்ந்தனர்.

.

அநேகர் நான் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லியும் தங்களையும் தங்கள் பிரச்சனைகளையும் அவர் மேல் வைக்க விசுவாசிப்பதில்லை.

.

'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது'- (மத்தேயு 11:28-30) என் இயேசு அழைக்கிறார். ஆனால் நம் சுமையை அவர் மேல் வைக்க நாம் அவரை விசுவாசிப்பதில்லை. நாமே சுமந்து துயரப்படுகிறோம். நமது துக்கங்களை துன்பங்களை, வியாதிகளை சுமந்த தேவன் நமக்குண்டு அவர் மேல் வைத்து விட்டால் அவர் நம்மை தாங்கி நடத்துவார்.

.

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு

கலங்கி தவிக்காதே

அவரே உன்னை ஆதரிப்பார்

அதிசயம் செய்வார்

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்கள் பாரங்களை நாங்களே சுமந்து தவித்துப் போனோம் ஐயா. உம் மீது நாங்கள் இப்போதே வைக்கிறோம். திரும்ப நாங்கள் அதை எடுத்து சுமக்காதபடி, எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை துக்கங்களை மாற்றும். அதிசயம் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

21st Nov 2013 - இரட்சிப்பு கர்த்தருடையது

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 21-ம் தேதி - வியாழக்கிழமை
இரட்சிப்பு கர்த்தருடையது
....

நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன். - (கலாத்தியர் 2:2).

.
லண்டன் நகரில் ஒரு நாள் இரவு மோசமான காலநிலை காரணமாக மிஷனெரி சங்கத்தின் ஒரு கூட்டத்தை நடத்துவதா அல்லது விடுவதா என்று இரண்டு பேர் யோசித்து கொண்டிருந்தார்கள். இடி இடித்து, பெருமழை பெய்து கொண்டிருந்தாலும் அங்கு வந்த ஒரே ஒரு நபருக்காக கூட்டத்தை நடத்தினார்க்ள. அங்கு மழைக்கு ஒதுங்கிய இன்னொருவரும் கூட்டத்தில் சேர்ந்து கொண்டார். வட அமெரிக்காவிலுள்ள செவ்விந்தியர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆட்கள் தேவை என்பதை பற்றி வல்லமையாக செய்தி கொடுக்கப்பட்டது. முடிந்ததும், 'இன்றைய நாள் வீணாய் போயிற்று' என்று தலைவர்களில் ஒருவர் சொல்லி கொணடிருந்தார். ஆனால் அந்த நாள் வீணாய் போகவில்லை. மழைக்க ஒதுங்கியவர் கர்த்தருடைய சத்தத்திற்கு செவி சாய்த்து தன்னை ஒப்பு கொடுத்திருந்தார். ஒரே மாதத்திற்குள் அவர் தனது வியாபாரத்தை விட்டு விட்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள செவ்விந்தியர்களுக்கு ஊழியம் செய்ய ஆயத்தமானார். அங்கே 35 ஆண்டுகள் தங்கி, கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றினார். வெறுமனே ஒரே ஒரு நபருக்காக நடத்தப்பட்ட கூட்டம் முடிவில் ஒரு ஊழியரை உருவாக்கி, அவர் மூலம் அநேக ஆத்துமாக்களுக்கு சுவிசேஷம் சென்றடைந்துள்ளது.

.

இதை வாசிக்கின்ற நீங்கள் ஒன்றை உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். திரளான மக்கள் மத்தியில் ஊழியம் செய்தல், பாடுவது, பிரசங்கிப்பது ஆகிய எல்லா விருப்பமும் சரியே. அதே வேளையில் எண்ணிக்கையில் குறைவாய் உள்ள ஒரு சிலரது மத்தியில் தேவன் நம்மை ஊழியம் செய்ய அனுமதிப்பாரென்றால் அதற்கும் நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும். நாம் காண்கிற அல்லது நடத்துகிற கூட்டங்களில் இரட்சிப்பு கர்த்தருடையது என்ற பகுதியை மறந்து போக வேண்டாம். இன்றைய கிறிஸ்தவத்தில் ஒருவருக்கு ஊழியம் செய்யும்படியாக சிறிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றால் அதை ஏற்று கொள்ள முன் வருவதில்லை. சபைகளிலும், ஊழியங்களிலும் பெரிய பொறுப்புகள், பதவிகள், திரளான மக்கள் மத்தியில் பேசுதல் இவைதான் அநேகருடைய வாஞ்சையாக உள்ளது. நமக்கு கொடுத்திருக்கும் கொஞ்சத்தில் உண்மையாயிருக்கவே தேவன் நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.

.

'நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்' என்று அப்போஸ்தலனாகிய பவுல் எண்ணிக்கையில் உள்ள சிலருக்கு மட்டுமே பிரசங்கம் பண்ணியதாக குறிப்பிடுகிறார். நாம் யாரும் பவுலை போன்றதொரு பெரிய பணியை செய்தவர்கள் கிடையாது. மலைபிரசங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் பிரசங்கித்த நம் இரட்சகர் இயேசுகிறிஸ்து, அநேக நாட்களாய் லேகியோன் பிசாசு பிடித்திருந்தவனை விடுவிக்கும் பொருட்டு, அவன் ஒருவனுக்காக கலிலேயாவிலிருந்து கதரேனரின் நாட்டிற்கு சென்று அவனை விடுவித்தாரே! - (லூக்கா 8: 26-37) சிறு எண்ணிக்கையில் உள்ள கூடுகையிலும் பேசுவதற்கு அவர் தயங்கவில்லை. இச்செய்தியின் மூலம் தேவன் கொடுத்துள்ள ஊழியத்தை, அதை வெயிலோ, மழையோ, காற்றோ, பெருந்திரள் கூட்டமோ, சிறு கூட்டமோ உண்மையாய் நிறைவேற்றுவோம். இரட்சிப்பு கர்த்தருடையது என்பதால், அவரே சிறியதாயினும், பெரியதாயினும் அதை பொறுப்பெடுத்து, மக்களை இரட்சிப்பார். ஆமென் அல்லேலூயா!

.

கூட்டம் வேண்டேன், காட்சி வேண்டேன்

கண் எதிர் காணும் உலகம் போதும்

அதால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன்

இதோ எழுந்து முன் நிற்பேன்

...

ஆட்கள் தேவை பரன் பணிக்கு

நாட்கள் இல்லை இனிமேல் அதிகம்

இதைக் காதுள்ளோர் கேட்கட்டும்

கண்ணுள்ளோர் காணட்டும்

சீக்கிரம் அதிசீக்கிரம்


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இரட்சிப்பு கர்த்தருடையது என்பதை நாங்கள் மறந்து போகாதபடி, சிறு கூட்டமோ, பெரிய கூட்டமோ, கர்த்தருடைய ஊழியத்தை உண்மையாய் செய்ய கிருபை தாரும். எங்களுக்கு தரப்படும் சிறு பொறுப்பையும் மனம் உவந்து செய்ய பெலனை தாரும். உமக்காய் உண்மையாய் செய்ய பெலப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 19 நவம்பர், 2013

20th Nov 2013 - தேவையான ஒன்று

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 20-ம் தேதி - புதன் கிழமை
தேவையான ஒன்று
....

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். - (லூக்கா 10:42).

.
வேதத்தில் மார்த்தாளுக்கு மரியாள் என்னும் சகோதரியும், லாசரு என்னும் சகோதரனும் இருந்ததை குறித்து வாசிக்கிறோம். மார்த்தாள் மூத்தவள். அவர்களுக்கு பெத்தானியா என்னுமிடத்தில் வீடு இருந்தது. அந்த பெத்தானியா எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரம் உடையது. அந்த மூவர் இருந்த குடும்பம் இயேசுகிறிஸ்துவை அதிகமாக நேசித்தது. இயேசுகிறிஸ்து அவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம்.

.

'பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்' (லூக்கா 10:38) என்று பார்க்கிறோம். மூத்தவளான மார்த்தாள் இயேசுகிறிஸ்துவை அன்புடன் தன் வீட்டிற்கு வரவேற்கிறாள். அவரும் சீஷர்களும் அவளுடைய வீட்டிற்குள் வருகிறார்கள்.

.

'அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்' மரியாளை குறித்து மூன்று இடத்தில் சுவிசேஷங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த மூன்று முறையும் அவள் இயேசுவின் பாதத்தில் இருப்பதையே வெளிப்படுத்தியுள்ளது. மரியாள் எதை குறித்தும் கவலைப்படாதவளாக, இயேசுகிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்லும் வார்த்தைகளை கவனமாக கேட்டு கொண்டிருந்தாள்.

.

'மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்'. மார்த்தாள் விருந்தாளிகளை வீட்டிற்கு அழைத்ததால், மிகவும் பிஸியாக அவர்களுக்கு விருந்து படைக்கும்படியாக, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார். அவரை முன்னால் அறையில் உட்கார வைத்து விட்டு, வீட்டுக்காரர்கள் உள்ளே வேலையாக இருந்தால், என்ன நினைப்பார் என்றெல்லாம் கவலையில்லாமல், அவள் இயேசு கிறிஸ்துவிடம் வந்து, 'நான் தனியே எல்லா வேலையும் செய்கிறேன், இந்த மரியாள் பாருங்கள். உம் பாதத்தில் உட்கார்ந்து ஒரு வேலையும் செய்யாமல், இருக்கிறாள், உமக்கு அதை குறித்து கவலையில்லையா? போய் உன் அக்காளுக்கு உதவி செய் என்று அவளுக்கு சொல்லுங்கள்' என்று மார்த்தாள் இயேசு கிறிஸ்துவிடம் கூறுகிறாள். அவரையே குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறாள்.

.

மார்த்தாள் நல்ல பெண்மணிதான், ஆனால் எதை அவள் முக்கியப்படுத்த வேண்டும், எதை முதன்மை படுத்த வேண்டும் என்பதை அறியாதிருந்தாள். கர்த்தருக்கு உணவு ஒரு முக்கியமல்ல, அவளும் அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்தால், அவளுக்கும் சேர்த்து நல்ல உணவு கிடைத்திருக்க கூடும். கர்த்தருக்கு அவருடைய வார்த்தையை கேட்பதையும், அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்து அவர் சொல்வதை கேட்பதையும் தான் மற்ற எல்லா காரியங்களை காட்டிலும் அவர் முக்கியப்படுத்துகிறார்.

.

'இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்' ஆம், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவரின் சத்தத்தை கேட்பதே நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்காகும். மரியாள் அதையே தெரிந்து கொண்டாள். அதினால் கர்த்தரிடத்திலிருந்து அருமையான ஒரு பாராட்டை பெற்று கொண்டாள்.

.

நாமும் கூட அநேக முறை நம்முடைய வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்க தவறி விடுகிறோம். காலையில் எழுவதில் இருந்து, இரவு படுக்கும் வரை நான் ரொம்ப பிஸி என்று சொல்லி, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்க மறந்து விடுகிறோம் அல்லது அவ்வளவு பிஸியாகி விடுகிறோம். இந்த நாட்களில் யாரையும் கேளுங்கள், ஓ, நான் ரொம்ப பிஸி என்று தான் சொல்வார்கள். அப்படி பிஸியாக இருப்பவர்கள் எப்படி கர்த்தரின் பாதத்தில் அமைதியாக அமர முடியும்?

.

நாம் அவருடைய பாதத்தில் அமராமல், தொடர்ந்து நம் வேலைகளை செய்வதில் மிகவும் பிஸியாக இருப்போமானால், என்ன நடக்கும்? பிரச்சனைகள் எழும்ப ஆரம்பிக்கும், சாத்தான் நம்மேல் வெற்றி கொள்ள ஆரம்பிப்பான்.

.

'மரியாள் தன் சகோதரன் லாசரு மரித்தபோது, இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்' (யோவான் 11:32) இந்த இடத்திலும் மரியாள் கர்த்தரின் பாதத்தில் விழுகிறதை காண்கிறோம்.

.

'அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது' (யோவான் 12:3). மூன்றாவதாக மரியாள் விலையேறப்பெற்ற தைலத்தை இயேசுகிறிஸ்துவின் பாதத்தில் பூசுகிறாள். மரியாள் மிகவும் அன்பு கூர்ந்ததை தேவன் அறிந்து அதை மற்றவர்களிடம் சொல்லி பாராட்டினார். - (லூக்கா 7:47) .

.

கர்த்தரின் பாதத்தை பற்றி கொண்டவர்களுக்கு மற்றவை எதுவும் பெரியதாக தெரியாது. அவர் பாதமே தஞ்சம் என்று வந்தவர்களுக்கு அவர் கிருபை அளிக்கிறார். அவர் பாதத்தை பற்றி கொண்டவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை. அவரின் பாதத்தை பற்றி கொள்வோம். அவருடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம்.

.

என்னை விட்டு எடுபடாத

நல்ல பங்கு இது எனக்கு

...

பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி

கதறி அழுதிடுவேன் நான்

...

இயேசு பாதம் எனக்கு போதும்

எந்த நாளும் ஆனந்தமே

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உம்முடைய பாதம் ஒன்றே எங்களுக்கு போதும் ஐயா. உம்முடைய பாதத்தில் அமர்ந்து, கர்த்தரின் சொல்லும் வார்த்தைகளை கேட்க எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை தாரும் தகப்பனே. எப்பொழுதும் பிஸி பிஸி என்று நாங்கள் மார்த்தாளை போல கவலைப்பட்டு கொண்டிராமல், மரியாளை போல இந்த அவசர உலகத்திலும் உம்முடைய பாதத்தில் பொறுமையாக அமர்ந்து நீர் சொல்வதை கேட்கும் கிருபைகளை தாரும் தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.