Friends Tamil Chat

புதன், 26 பிப்ரவரி, 2014

26th Feb 2014 - இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 2

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி – புதன் கிழமை
இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 2
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).

.
நேற்றைய தினத்திலே குஷ்டரோகியான ஒருவன்; கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டபோது, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவனை கர்த்தர் தொட்டு சுகப்படுத்தியதை குறித்து பார்த்தோம். தொடர்ந்து இரட்சகர் அவனை தொட்டதால் அவனில் ஏற்பட்ட மாற்றத்தை குறித்து பார்ப்போம்.

.

'இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்'. அல்லேலூயா! நம் தேவனால் சுகமாக்க முடியாத வியாதி ஒன்றுமே இல்லை. அவர் தொடுதல் அத்தனை வல்லமையுள்ளது. இயேசுகிறிஸ்துவிடம் வந்த எவரும் ஒரு போதும் வந்த வண்ணமாகவே திரும்பி செல்ல முடியாது.

.

இயேசுகிறிஸ்து தொட்ட மாத்திரத்தில் அழுகி நாற்றம் எடுத்து கொண்டிருந்த அவனது தோலும் புண்களும் புது மாற்றத்தை பெற ஆரம்பித்தது. அவனது தோல் சிறு பிள்ளையின் தோல் போல ஒரு சேதமும் இல்லாமல் மாசற்றதாக மாறினது.

.

பிரியமானவர்களே, ஒரு வேளை நமக்கு தொழு நோய் இல்லை என்று சொல்லலாம், ஆனால் பாவம் ஒரு தொழுநோயை போல கர்த்தரிடமிருந்து நம்மை பிரித்து, அசுத்தமாக இருப்பதால், நான் கர்த்தரிடம் வருவதற்கு தகுதியில்லாதவன், அல்லது இல்லாதவள் என்று நம்மை நாமே கர்த்தரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? தம்மிடத்தில் வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர் மனதுருக்கம் உள்ளவராய், எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று நம் பாவ நோயை தொட்டு சுகப்படுத்துவார். அவர் தொடும்போது நாற்றம் எடுத்தது போன்ற நமது பாவ வாழ்க்கை புதியதாக மாறிவிடும். 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' - (2கொரிந்தியர் 5:17) என்ற வசனத்தின்படி புது சிருஷ்டியாய் மாறிவிடுவோம். பழைய நாற்றமெடுத்த வாழ்க்கை மாறி, எல்லாமே புதிதாக மாறிவிடும். அல்லேலூயா!

.

கிறிஸ்துவால் மன்னிக்க முடியாத பாவம் எதுவுமே இல்லை. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் வல்லமையுள்ளது. ஆமென். அவர் சுத்தமாக்கியதை யாராலும் அசுத்தம் என்று தள்ளிவிட முடியாது. பாவத்திலிருந்து விடுதலை தரும் ஒரே தெய்வம் இயேசுகிறிஸ்து மாத்திரமே! அவரிடத்தில் விசுவாசத்தோடு வந்து, 'ஐயா என்னை சுத்தப்படுத்தும்' என்று கேட்கும்போது, நிச்சயமாகவே தமது இரத்தத்தால் நம்மை கழுவி, நம்மை சுத்தப்படுத்தி, நித்திய ஜீவனை நமக்கு கொடுத்து, நம்மை பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாக்குவார். ஆமென் அல்லேலூயா!

.

'அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்'. அவர் ஏன் அவனை உடனே அனுப்பிவிட்டார் என்றால், இந்த அற்புதத்தை காணும் மக்கள், அவரை அற்புதம் செய்கிறவராகவே பார்ப்பார்களே ஒழிய இராஜ்யத்தின் சுவிசேஷத்தை கேட்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே. அவர் எங்கு சென்றாலும் அவரை சுகமளிக்கிறவராக காண்பார்களே ஒழிய, அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை உணர மாட்டார்கள். இந்த நாளின் சுவிசேஷகருக்கும் அவருக்கும் தான் எத்தனை வித்தியாசம்! இந்த நாட்களில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து விட்டால்தான் எத்தனை எத்தனை பிரசித்தப்படுத்துதல், விளம்பரங்கள்!! ஒவ்வொரு முறையும் அதை கூட்டத்தில் சொல்லி, தங்களை உயர்த்தி காண்பிக்கும் தன்மைகள்!!

.

அந்த மனிதனிடம் கர்த்தர் வெளியே சொல்ல வேண்டாம் என்றாலும் அவன் கேட்காமல், 'அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்' என்று பார்க்கிறோம். ஆம், கர்த்தர் ஒருவனுடைய வாழ்வை தொடும்போதுதான் அது எத்தனை எத்தனை சந்தோஷத்தை அவன் வாழ்வில் கொண்டு வருகிறது! அவனால் சும்மா இருக்க முடியாது. என் தேவன் எனக்கு செய்த அற்புதத்தை பாருங்கள் என்று அவன் துள்ளி குதித்து, கர்த்தரை பிரசித்தம் செய்கிறவனாக மாறி விடுவான். முதலில் தீட்டு தீட்டு என்று கதறினவன், இப்போது நான் சுத்தமானேன், சுத்தமானேன் என்று சந்தோஷமாய் கூற தொடங்கி விடுவான். அல்லேலூயா!

.

இது போன்ற புதிதாக்கப்பட்ட, நம் வாழ்க்கையை மாற்றிவிடும் கிறிஸ்துவின் மனதுருக்கமான தொடுதலுக்கு நம்மை அர்ப்பணிப்போமா? அந்த குஷ்டரோகி எத்தனை அசுத்தமானவனாக இருந்திருந்தாலும் அவன் வாழ்க்கையில் ஒரு அற்புதமான புது மாற்றம் ஏற்பட்டது போல கர்த்தரிடம் வரும் ஒவ்வொரு பாவியின் வாழ்விலும், அது எப்பேற்பட்ட அசுத்தமாய் இருந்தாலும் கர்த்தர் தமது பரிசுத்த வல்லமையுள்ள இரத்தத்தால் கழுவி நம்மை சுத்திகரித்து, நம்மை புதியவர்களாக மாற்றி விடுகிறார். நம்மை அதற்கு அர்ப்பணிப்போமா? ஆமென் அல்லேலூயா!

.

தொடும் என் கண்களையே

உம்மை நான் காண வேண்டுமே

இயேசுவே உம்மையே நான்

காண வேண்டுமே

..

தொடும் என் ஆண்டவரே

தொடும் என் வாழ்வினையே

இயேசுவே உம்மை போல்

என்னை மாற்றுமே

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும் யார் யார் தங்களை கிறிஸ்து சுத்தமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களது பாவ கறைகளை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பீராக. அந்த குஷ்டரோகியை கண்டு மனதுருகி, எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்று அவனை தொட்டு சுகப்படுத்தின தேவன், இன்றும் மாறாதவராக அவரண்டை வருகிறவர்களை புறம்பே தள்ளாதவராக, ஏற்று கொள்வதற்காக உமக்கு நன்றி. தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பு நேச தகப்பனே, இந்த உலகத்தில் அநேகர் பாடுகளின் வழியாக கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் தகப்பனே, உலகத்தில் உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்ற இயேசுகிறிஸ்து எங்களோடு இருப்பதால், எந்த பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் அதை திடமனதோடு தாங்கி, எங்கள் அப்பாவின் பாதத்தில் வைத்து, ஜெபத்திற்கு பதிலை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும்.

சகோதரன் மார்க் ஜெபக்குமார் அவர்கள் புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டு, அளவற்ற வாஞ்சையோடு நேசிப்பதால், தேவன் தாமே அந்த சகோதரனை ஆசீர்வதிப்பீராக. அவருடைய மனைவி எந்த சபைக்கும் செல்லாமல், கடவுளைப்பற்றிய எண்ணமே இல்லாமல் இருப்பதால், அந்த சகோதரி இரட்சிக்கப்பட கிருபை செய்யும். இரண்டரை மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த சகோதரியை இரட்சித்து, வயிற்றில் வளருகிற கருவையும் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரன் மாற்றலாய் வந்திருக்கிற ஒஸ்மனாபாதில் எந்த சபையும் இல்லாதபடியால், தேவன் தாமே அவருக்கு ஒரு நல்ல சபையை காட்டிக் கொடுக்கும்படி ஜெபிக்கிறோம்.

.

சகோதரி பிரபா சுமதி அவர்கள் எழுதியிருக்கி டிஎன்பிஎஸ்ஸி பரிட்சையில் நல்ல முடிவு வந்து, சகோதரிக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும். சகோதரியின் வீட்டில் இருக்கிற எல்லா பிரச்சனைகளும் மாறி, கர்த்தருடைய ஆசீர்வாதம் வீட்டில் தங்கியிருக்கும்படி கிருபை செய்யும். அவர்களுடைய தோழியின் தங்கைக்கு ஆயத்தம் செய்கிற திருமண காரியத்தில் தேவ சித்தம் நிறைவேற ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் கெர்சோன் பொன்சிங் அவர்களின் மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருப்பதாலும், டாக்டர்கள் குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியில்லை என்று சொல்லியிருப்பதாலும், உம்மையே நோக்கி பார்க்கிறோம் தகப்பனே, கருவில் இருக்கும்போதே உம்முடைய கண்கள் எங்களை கண்டது என்று வேதத்தில் வாசிக்கிறோமே, இந்த கருவையும் உம்முடைய கண்கள் கண்டு, இருக்கிற எல்லா பிரச்சனைகளையும் மாற்றும்படியாக ஜெபிக்கிறோம். குழந்தைக்கு சரியானபடி மூளை வளர்ச்சி அடையும்படி கிருபை செய்தருளும். உமக்கு சாட்சியாக விளங்கும்படி தேவன் பெரிய காரியத்தை இந்த குடும்பத்தில் செய்தருளும்.

.

பெயர் சொல்ல விரும்பாத சகோதரி, தன் கணவருக்கு செமன் டெஸ்ட் செய்து, நெகடிவ் ஆக ரிசல்ட் வந்திருப்பதால், மிகவும் சோர்ந்து போயிருக்கிற அவர்களுக்கு தேவன் தாமே ஒரு அதிசயத்தை செய்வீராக. அவர்கள் சில நாட்களுக்குள் செய்ய இருக்கிற டெஸ்ட்டில் எல்லாம் நார்மலாக மாற கிருபை செய்யும். குழந்தை பாக்கியத்தை கொடுத்து ஆசீர்வதித்தருளும்.

.

சகோதரி செல்வநாயகி அவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகி, அவர்களுக்கு பத்து மாதத்தில் ஒரு குழந்தை இருந்தாலும், கணவன் தன் அம்மாவின் பேச்சைக் கேட்டு, சகோதரியை துன்பப்படுத்துவதால், தேவன் தாமே அவரோடு இடைபடும்படி ஜெபிக்கிறோம். சகோதரியை நேசிக்கவும், சமாதானமாய் குடும்பத்தை நடத்தவும் தேவன் கிருபை செய்வீராக.

.

சகோதரி கமலா சார்லஸ் அவர்களின் மகள் சார்லட் அமிர்தா அவர்கள் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியை ஆக வேண்டும் என்று விரும்பி, அதற்காக அதிக படிப்பையும் படித்திருப்பதால், வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி நடக்க இருக்கும் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்று அங்கு வேலையில் சேர தேவன் தாமே வழிகளை திறந்து கொடுக்கும்படி ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.