புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். - (எபேசியர் 5:25). . கல்யாணம் ஆன புதிதில் கணவன் தன் மனைவியின் மேல் வைக்கும் அன்பு மிகவும் அற்புதமானது. மனைவி தனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்பது போல தங்க தட்டில் ஏந்தி நடப்பது போல மனைவியை தாங்கி நடப்பது வழக்கம். கொஞ்சம் தூரம் நடந்து விட்டால், ஐயோ உனக்கு கால் வலிக்கிறதா? காலை அமுத்திவிடட்டுமா? என்று காலை அமுக்கி விட்டு, என்னனென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விடுவது வழக்கம்! மனைவியின் பெயரை என்னன்ன விதமாக கூற முடியுமோ அந்தபடி யெல்லாம் கூப்பிட்டு அழைப்பது இதற்கு விதிவிலக்கல்லாத கணவன்மார் யாரும் இல்லை என கூறலாம். ஆனால் கால போக்கில் ஒவ்வொரு வருடமும் அந்த அன்பு குறைந்து என்ன நடக்கிறது என்பதை கீழ்கண்டவாறு காணலாம்: . கணவன் மனைவியிடம் முதல் வருடம்: . என் பிரியமே, என் இனிமையே, நான் உன்னை குறித்து மிகவும் கவலைப்படுகிறென். நீ அன்று மழையில் கொஞ்சம் நனைந்தபோதே நான் நினைத்தேன், ஐயோ என் உயிரான உனக்கு ஏதோ ஆகிவிடுமோ என்று, என் அன்பே, இன்று நான் வேலையில் இருந்து வந்தவுடன், ஆஸ்பத்திரிக்கு போவோம், நீ தும்மினால் உன் உடம்புக்கு ஆகாது, காய்ச்சல் வந்தால் உன்னால் தாங்க முடியாது! நீ டாக்டர் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டு நன்கு ஓய்வெடுக்க வேண்டும். சரியா? நீ ஒன்றும் சமைக்க வேண்டாம், நான் கடையில் இருந்து வாங்கி வந்து விடுகிறேன். நீ நன்கு ஓய்வெடு. . இரண்டாம் வருடம்: என் அன்பே, எனக்கு இந்த இருமல் சத்தமெல்லாம் பிடிக்காது, நான் டாக்டரை போகும் வழியில் வர சொல்லியிருக்கிறேன், அவர் வருவார். மாத்திரை சாப்பிட்டு விட்டு ஓய்வெடு. எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது. . மூன்றாம் வருடம்: கொஞ்ச நேரம் நீ படுத்து எழுந்திருந்தால், இந்த சளியெல்லாம் கொஞ்சம் அடங்கும் என்று நான் நினைக்கிறென். நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் ஓய்வெடு. . நான்காம் வருடம்: பார், நீ வீட்டில் எல்லா வேலையும் முடித்த பின்பு கொஞ்சம் ஓய்வெடு, இப்படி இருமி கொண்டு இருக்காதே. . ஐந்தாம் வருடம்: நான் அன்று வாங்கி வந்த இருமல் சிரப்பை கொஞ்சம் குடியேன், எப்பப்பார் இருமிக் கொண்டு இருக்கிறாய். . ஆறாம் வருடம்: உப்பு தண்ணீர் எடுத்து வாயை கொப்பளி, சும்மா கடல் சீல் மாதிரி இருமிக்கொண்டு இருக்காதே. . ஏழாம் வருடம்: வாயில் கையை வைத்து இருமு, எனக்கு இருமலை கொடுத்து விடுவாய் போலிருக்கிறது! . அந்த மனைவிக்கு ஏழு வருடமாய் இருமல் இல்லை. ஓவ்வொரு வருடத்திலும், அவள் ஏதாவது நோய் வந்தால், கணவனின் பதில் இதுவாகாத்தான் இருக்கும். . நான் ஒவ்வொரு கணவனும் இப்படித்தான் என்று கூறவில்லை. ஆனால் நாளாக நாளாக கணவனின் அன்பு குறைய துவங்குகிறது. ஆரம்பத்தில் இருந்த ஈடுபாடு குறைய ஆரம்பிக்கிறது. காலையில் எழுந்தோம், வேலைக்கு சென்றோம், மாலை வீடு திரும்பினோம், சாப்பிட்டோம், படுத்தோம், எழுந்தோம், திரும்ப அதே மாதிரியான அடுத்த நாள் வேலைகள்!! இப்படித்தான் அநேகருடைய வாழ்நாட்கள் போய் கொண்டிருக்கிறது. ஒரு குருவி தன் கூட்டை விட்டு தன் குஞ்சுகளுக்கு இரையை தேடி, கூட்டிற்கு திரும்ப வந்து,காலையில் திரும்ப இரை தேட போவது போல வாழ்க்கையை நாம் அமைத்து கொண்டிருக்கிறோம். . சில கணவன்மாருக்கு 50 வயதானாலும், 60 வயதானாலும், தங்கள் மனைவி இன்னும் மிகவும் இளமையானவள் என்ற எண்ணம் எப்போதும் மனதில் உண்டு, அவர்களுக்கு அந்த வயதிலும் ஆசையும் நேசமும் உண்டு. மனைவியோ அப்படியல்ல, அவளுடைய பிள்ளைகள் பெரியவர்களான பின்பு அவர்களை பற்றிய எண்ணங்களுக்குத்தான் அவள் முதலிடம் கொடுப்பாளே தவிர, மற்ற எண்ணங்களுக்கு அவள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதை அறியாதிருக்கிற கணவன்மார், என் மனைவி என்னுடன் ஒத்துழைப்பதில்லை என்று குறை சொல்வார்கள். அநேக வீடுகளில் பிரச்சனை வருவதற்கு காரணமே அதுதான். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். உண்மையாய் அன்புகூருகிற கணவன் தன் மனைவியை எந்த நிலையிலும் நேசிப்பான். தனக்க தேவையான நேரத்தில் அன்புகூர்ந்து விட்டு, பின் அவளை அடிமையை போல நடத்துகிற எவனும் அவளிடத்தில் உண்மையாய் அன்பு கூருகிறவனல்ல! . 'நான் என் மனைவிக்கு எல்லாம் வாங்கி தருகிறேன். அவளுடைய தேவைகளை எல்லாம் சந்திக்கிறேன் வேறு என்ன அவளுக்கு வேண்டும்' என்று நீங்க்ள கேட்கலாம். நீங்கள் எல்லாம் வாங்கி கொடுத்து, அவளிடம் சற்று அமர்ந்து பேசாவிட்டால், நீங்கள் அவளுக்கு எதை செய்தாலும் பயனில்லை! ஒரு நாள் நீங்கள் கடைக்கு போய் அவளுக்கென்று ஒரு புடவை எடுத்து கொண்டு வந்து, 'பார், உன் கலருக்கு இந்த புடவை எடுப்பாய் இருக்கும்' என்று வாங்கி கொடுத்து பாருங்கள், ஊரில் உள்ள எல்லாருக்கும் அவள் சொல்வாள், 'பாருங்கள், என் கணவர் எனக்கு வாங்கி கொடுத்த புடவை' என்று. . இரண்டு பேரும் வேலைக்கு போகிற தம்பதியர் என்றால், கணவர் மனைவியின் வேலையில் பங்கு கொண்டு செய்வது மிகவும் அவசியம். நான் ஒரு சில வீடுகளில் பார்த்திருக்கிறேன், மனைவி காலையிலிருந்து, மாடு மாதிரி வேலை செய்து, உணவு செய்து, கணவனுக்கு எல்லாம் டேபிளில் வைத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கணவன் காலையில் எழுந்து, பேப்பர் படித்து, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார், மனைவி கிடந்து, அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து, பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தானும் தயாராகி வேலைக்கு ஓட வேண்டும். அந்த மாதிரி கணவன் எப்படிப்படடவன்? மனைவியை அடிமை மாதிரி நடத்தும் காரியங்கள், தேவனுக்கு அருவருப்பானவை! ஏவாளை தேவன் காலின் எலும்பிலிருந்து படைக்கவில்லை, அவளை காலின் கீழ் போட்டு மிதிப்பதற்கு, தலையின் எலும்பிலிருந்து எடுக்கவில்லை, தலையின் மேல் அமர்ந்து அதிகாரம் செய்வதற்கு! அவர் விலா எலும்பிலிருந்து எடுத்தார், இருவரும் சமம் என்பதற்காக, ஆனால் தேவன் கணவரை குடும்பத்தின் தலையாக வைத்திருப்பதை மனைவிகளும் உணர்ந்து, கணவனுக்குரிய மதிப்பை தர வேண்டும். இப்படி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, ஒருவரையொருவர் மதித்து வாழும் குடும்பங்களில் தேவன் வந்து வாசம் பண்ணுகிறார். அதை ஆசீர்வதிக்கிறார். அப்படிப்பட்ட குடும்பங்களாக நம் குடும்பங்கள் திகழ தேவன் தாமே கிருபை செய்வாராக! . இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு அன்பு நிறைந்திடும் இடம் உண்டு இன்பம் உண்டு சமாதானம் உண்டு வெற்றி உண்டு துதிபாடல் உண்டு இராஜாதி இராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார் . |