பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார் - (1 யோவான் 4:7,8). . ஒரு பெண் தன் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது, மூன்று வயதான மனிதர்கள், அங்கு திண்ணையில் அமர்ந்திருப்தை கண்டாள். அவர்கள் யார் என்று அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. அவர்களை நோக்கி, 'நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பார்த்தால் பசியோடிருப்பவர்களை போல தெரிகிறது. உள்ளே வாருங்கள், வந்து ஏதாவது சாப்பிடுங்கள்' என்று கூறினாள். அப்போது அவர்கள், 'இந்த வீட்டின் மனிதர் உள்ளே இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அந்த பெண் இல்லை என்றதும், 'இல்லை, நாங்கள் உள்ளே வரமாட்டோம்' என்றார்கள். சாயங்காலமானபோது, கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பெண், நடந்ததை கூறினாள். அதற்கு அந்த கணவர், 'அவர்களை உள்ளே அழைத்து வா' என்று கூறினார். அந்த பெண் அழைக்க போனபோது, அந்த மனிதர்கள், 'நாங்கள் மூவரும் ஒன்றாக உள்ளே வரமுடியாது' என்றனர். அப்போது அந்த பெண் ஏன் என்று கேட்டதற்கு, 'இவருடைய பெயர் செல்வம், இவர் வெற்றி, என்பெயர் அன்பு. இவர்களில் யார் உள்ளே வர வேண்டும் என்று உன் கணவரிடம் பேசி முடிவெடுத்து விட்டு வா' என்று கூறினர். அந்த பெண் உள்ளே சென்று தன் கணவரிடம் கூறினபோது, அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, 'நாம் செல்வத்தை அழைப்போம். அப்போது நம் வீடு செல்வத்தினால் நிறையும்' என்று கூறினார். அதற்கு மனைவி, 'வெற்றியை அழைத்தால், செல்வம் தன்னால் வந்துசேரும்' என்று கூறினாள். அதை கேட்டு கொண்டிருந்த அவர்களுடைய மகன், 'அப்பா, அம்மா, நாம் அன்பை அழைத்தால், நம் வீடு அன்பால் நிறைந்திருக்குமே' என்று கூறினான். அதற்கு எல்லாரும் உடன்பட்டு, அன்பை உள்ளே அழைப்போம் என்று தீர்மானித்து, அந்த பெண் அந்த வயதானவர்ளிடம் போய், 'ஐயா அன்பு, நீங்கள் உள்ளே வாருங்கள்' என்று கூறினாள். அன்பு உள்ளே செல்ல எழுந்தார், அப்போது வெல்வமும், வெற்றியும் கூட உள்ளே வர ஆரம்பித்தனர். அதை கண்ட அந்த பெண், 'நான் அன்பைத்தானே அழைத்தேன், நீங்களும் வருகிறீர்களே' என்று கேட்டாள். அதற்கு அவர்கள் சொன்னார்கள், 'நீ செல்வத்தை மட்டும் அழைத்திருந்தால், செல்வம் மட்டும் உள்ளே வந்திருப்பார், வெற்றியை அழைத்திருந்தால் அவர் மட்டும் உள்ளே வந்திருப்பார், ஆனால், நீ அன்பை அழைத்ததால், நாங்கள் மூன்று பேரும் உள்ளே வருகிறோம், அன்பு எங்கே உண்டோ அங்கு செல்வமும், வெற்றியும் எப்போதும் உண்டு' என்றனர். . அன்பானவர்களே, நாம் மற்றவர்களிடத்தில் எப்படி அன்புகூருகிறோம்? நம்மிடத்தில் அன்பு என்ற ஆவியின் கனி உண்டா? நம் சொந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்புகூருகிறோமா? நம் பெற்றோரிடத்தில் அன்பு கூருகிறோமா? நம் சக விசுவாசிகளிடத்தில் அன்பு கூருகிறோமா? அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று வசனம் கூறுகிறது. எத்தனை பேர் தங்கள சொந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு கூராமல், உலகத்திலுள்ள மற்றவர்களை நேசிக்கிறவர்களாக இருக்கின்றனர்! சிலர் வருஷகணக்கில் தங்கள் சகோதர சகோதரிகளிடத்தில் பேசாமல் இருக்கின்றனர். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1யோவான் 4:20) என்று வேதம் கேட்கிறது. ஆகவே நாம் நம் சொந்த சகோதரரிடத்திலும் சகோதரிகளிடத்திலும் அன்புகூருவோம். . அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். அன்பு வரும்போது செல்வமும் ஆரோக்கியமும், வெற்றியும் உலக ஆசீர்வாதங்களும் நம்மை வந்து சேரும். முதலாவது தேவனிடத்திலும், பின்பு மற்றவர்களிடத்திலும் அன்புகூர வேண்டும். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார் (மாற்கு 12:29-31) என்று கூறினார். அன்புகூரும் போது, அதில் மற்ற கற்பனைகள் எல்லாம் அடங்கி யிருக்கிறது. அந்த பெரிதான தியாகமான அன்பால் நம் இருதயம் நிறைந்திருப்பதாக! . மனிதர் யாரிடமும் பாசம் சாட்டுவோம் இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம் அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய் இராஜ பாதையை செம்மையாக்குவோம் நம் இயேசுராஜாவே இதோ வேகம் வாராரே அதி வேகமாய் செயல்படுவோம் . |