மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். - (கலாத்தியர் 3:13). . நேற்றைய தினத்தில் சில காரியங்கள் நம் வீட்டிற்கு சாபத்தை கொண்டு வரும் என்று பார்த்தோம். இன்றைய நாளில் நாம் செய்யும் சில காரியங்கள் சாபத்தை கொண்டு வரும் என்று வேத வசனத்தின் அடிப்படையில் காணப்போகிறோம். . 1. கர்த்தராகிய தேவனை விட்டு அந்நிய தெய்வங்களை நாம் பின்பற்றினால் சாபம் வரும் என்று வேதம் கூறுகிறது. "எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்" (உபாகமம் 11,28) . 2. மற்ற தேவர்களின் விக்கிரகங்களை வீட்டிற்கு கொண்டு சென்றால் சாபம் வரும். "அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய்; அது சாபத்திற்குள்ளானது" (உபாகமம் 7:25-26) . 3. தன் தகப்பனுக்கும் தாய்க்கும் உரிய கனத்தை கொடுக்காதவன் சபிக்கப்பட்டவன் என்று வேதம் கூறுகிறது "தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன்" (உபாகமம் 27:16) . 4. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் . 5. குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் . 6. பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன். . 7. யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் . 8. ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் . 9. குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் . 10. தேவனுடைய கற்பனைகளை விட்டு விலகுகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர் (சங்கீதம் 119: 21) . 11. மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5) . 12. கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன் (எரேமியா 48:10) . 13. தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன் (மல்கியா 1:14) கர்த்தருக்கு நம்முடைய சிறந்ததையே கொடுக்க வேண்டும். நமது தாலந்துகளோ, நமது காணிக்கைகளோ எதுவாயினும் சிறந்ததையே அவருக்கு கொடுக்க வேண்டும். . 14. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார் (ஆதியாகமம் 12:3) ஆபிரகாமின் சந்ததியாகிய இஸ்ரவேலரை நாம் சபிக்கக்கூடாது. அவர்களை ஆசீர்வதிக்கவே வேண்டும். அவர்களை ஆசீர்வதிக்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். அவர்களை சபிப்பவர்களை கர்த்தர் சபிக்கிறார். . 15. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் (கலாத்தியர் 1:8) தவறான உபதேசம், கள்ள உபதேசம் அல்லது போதகம் செய்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள். . உபாகமம் 28ஆம் அதிகாரம் முழுவதும் தேவனுடைய வார்த்தைகளுக்கும், கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்தால் என்ன ஆசீர்வாதங்கள் என்றும், கீழ்ப்படியாவிட்டால் என்னென்ன சாபங்கள் என்றும் குறிப்பிப்பட்டுள்ளது. . இவை செய்கிற அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதம் திட்டவட்டமாய் கூறுகிறது. ஆனால் நாம் தவறி இந்த காரியங்களை செய்திருந்தால், அதை தேவனிடம் அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்கும்போது, அவர் மன்னித்து நமக்கு ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார். . நாம் ஐயோ அந்த சாபம் என்னைப் பற்றிக் கொள்ளுமோ, பரம்பரை சாபம் என்னை தொடர்ந்து பிடிக்குமோ என்று பயப்படத் தேவையில்லை. ஏனெனில் மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் என்ற வசனத்தின்படி நாம் அனுபவிக்க வேண்டிய சாபங்களை கிறிஸ்து நமக்காக சாபமாகி, அந்த சாபங்களுக்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார் என்று வேதம் கூறுகிறது. அல்லேலூயா! . பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரையா நிந்தையை நீக்கவே பரலோகம் சேர்க்கவே சிலுவையை சுமந்தாரையா கண்ணீரை துடைத்தாரையா சந்தோஷம் தந்தாரையா எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே |