Friends Tamil Chat

திங்கள், 31 மார்ச், 2014

31st March 2014 - பாடுகளின் மத்தியில் வெற்றி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 31-ம் தேதி - திங்கட் கிழமை
பாடுகளின் மத்தியில் வெற்றி
...

இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. - (லூக்கா 10:19).


ஒருபாடுகளும் பிரச்சனைகளும் வரும்போது நாம் துவண்டு போவது சகஜம். என்ன செய்வது என்று தவிக்கும் நேரத்தில் யாராவது உதவிக்கு வந்தால் நலமாக இருக்குமே என்று நினைக்கவும் தோன்றும்.

.

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்தி வரும்போது, எதிரே சிவந்த சமுத்திரம் முன்பாக இருந்தது. அது ஆழம் மிகுந்தது, அதை கடந்து செல்ல எந்த படகும், கப்பலும் அவர்களுக்கு இல்லை. பின்னாக பார்க்கும்போது, பார்வோனின் சேனை அவர்களை துரத்தி பிடிக்கும்படியாக வந்துக் கொண்டிருந்தது. மோசேக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 'பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்'. ஆம், மோசேயும் கர்த்தரை நோக்கி கூப்பிட்டார், 'அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்' ( யாத்திராகமம் 14: 10,15,16) என்று சொன்னார். மோசே தன் கையில் இருந்த கோலை சமுத்திரத்தின் மேல் நீட்டினபோது, புரண்டு வந்துக் கொண்டிருந்த அந்த சிவந்த சமுத்திரம் குவியலாய் இரண்டாக பிரிந்து, நடுவில் பாதையை அமைத்து கொடுத்தது. அல்லேலூயா! உலர்ந்த தரை வழியாக இஸ்ரவேலர் சமுத்திரத்தை கடந்தார்கள். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து வந்த பார்வோனின் சேனையோ, அதே சமுத்திரம் திரும்பி வந்து, அவர்கள் அனைவரையும மூடிப்போட்டது.

.

மோசேக்கு பிறகு தேவன் தெரிந்து கொண்ட யோசுவா ஜனங்களை வாக்குதத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு கொண்டு போவதற்கு முன் அவர்கள் யோர்தான் நதியை கடக்க வேண்டியிருந்தது. அப்போதும் அவர்களுக்கு படகோ, கப்பலோ இல்லை. இப்போது மோசேயின் கையில் இருந்த கோலும் இல்லை. அந்த கோலினாலே அநேக அற்புதங்களை மோசே தேவக் கிருபையால் செய்திருந்தார். யோசுவா ஐயோ கோல் என்னிடம் இல்லையே, எப்படி நான் இந்த கடலை தாண்டுவேன் என்று துயரப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை, யோசுவாவுக்கு தெரியும் கர்த்தர் சிவந்த சமுத்திரத்தில் வழி திறக்க முடியுமென்றால், யோர்தானிலும் வழிதிறக்க முடியும் என்று. 'யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்' (யோசுவா 3:5). 'யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர் வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள்' (யோசுவா 3:15-16). யோர்தான் நதியும் விசுவாசிகள் கடந்து போவதற்காக பிரிந்து வழிவிட்டது. அவர்கள் உலர்ந்த தரைவழியாக நடந்துப்போவதுப் போல யோர்தான் நதியின் நடுவாக நடந்துப் போனார்கள். அல்லேலூயா!

.

அதற்குப்பின் அநேக வருடங்கள் கழித்து, எலியா தீர்க்கதரிசி, கர்த்தர் சுழல் காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன், எலிசா அவரை பின்தொடர்ந்து இரட்டிப்பான வரம் வேண்டி அவரோடு சென்றுக் கொண்டிருந்தபோது, இருவரும் யோர்தான் நதியை சந்திக்கிறார்கள். 'அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்' (2 இராஜாக்கள் 2:8). யோர்தான் இருபக்கமாக பிரிந்து, அவர்கள் இரண்டு பேரும் தரைவழியாக போவதைப் போல நடந்து, யோர்தானை கடந்துப் போனார்கள். அல்லேலூயா! கர்த்தரை நம்பியிருந்த இவர்கள் பிரச்சனை முன்பாக இருப்பதைக்கண்டு பயந்து போய் இருக்கவில்லை. தைரியமாக கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, பிரச்சனைகளின் மேல் வெற்றி எடுத்தார்கள்.

.

இவர்கள் எல்லாரையும் விட இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட விசுவாசிகளாகிய நமக்கு இயேசுகிறிஸ்துவின் கிருபை இருப்பதால் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

.

நாம் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளைப் போல கடலை பிளக்க தேவையில்லை, அதன் மேல் நடந்து சென்று அற்புதத்தை பெற்றுக் கொள்ள முடியும்! அல்லேலூயா! 'இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது (மாற்கு 14:25-32). பேதுரு கர்த்தரை பார்த்து நடந்தவரைக்கும் அவர் மூழ்கவில்லை. கடலின் மேல் நடந்தார். ஆனால் காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு பயந்த போது அமிழ ஆரம்பித்தார். கர்த்தர் மூழ்கட்டும் என்று சும்மா பார்த்துக் கொண்டு இருக்கவில்லை, உடனே தம் கரத்தை நீட்டி அவரைப்பிடித்து, தூக்கி, திரும்பவும் இருவரும் நடந்து வந்து படகில் ஏறினார்கள்.

.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கு மோசேயைப் போல நமக்கு கோல் தேவையில்லை, யோசுவாவைப்போல் உடன்படிக்கை பெட்டி தேவையில்லை, எலியாவின் சால்வை தேவையில்லை. பிரச்சனைகளைப் பார்த்து அப்படியே மூழ்கிப் போக வேண்டிய அவசியமும் இல்லை. கடலின் மேல் இயேசு நடந்ததைப் போல நாமும் பிரச்சனைகளின் மேல் நடக்க முடியும். அல்லேலூயா!

.

'இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது' (லூக்கா 10:19) என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மோடு இருப்பதால் பிரச்சனைகளை கண்டு மனம் துவளாமல், அவைகளின் மேல் நாம் நடந்து, பிரச்சனைகளை கொண்டு வருகிற சாத்தானாகிய சர்ப்பங்களையும் தேள்களையும் மிதித்து, வெற்றி எடுப்போம். உலகத்தின் கடைசி பரியந்தம் உங்களோடு இருக்கிறேன் என்று சொன்னவர் நம்மோடு இருந்து வெற்றி எடுக்க கிருபை செய்வார். பிரச்சனைகளை பார்த்து அமிழ்ந்து போகும்போது, அவரை நோக்கி பார்க்கும்போது, அவர் உடனே தம் கரத்தை நீட்டி நம்மை தூக்கி எடுத்து, மீண்டும் நம்மை நடக்க வைப்பார். ஆமென் அல்லேலூயா!

.

சர்ப்பங்களை மிதித்திடவும் - பெரும்

தேள்களை நசுக்கிடவும்

அதிகாரம் உண்டு வல்லமை உண்டு

தோல்வி இல்லை வெற்றி நமக்கே என்றும்

தோல்வி இல்லை வெற்றி நமக்கே

.

அந்தகார வல்லமைகளை

தேவ பெலத்தால் முறியடிப்பேன்

இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு

பயம் இல்லை வெற்றி எனக்கே - என்றும்

போராயுதம் தரிப்பேன்

போர் செய்வேன் போர் செய்வேன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பழைய ஏற்பாட்டு விசுவாசிகளைப் போல நாங்கள் கோலைக் கொண்டோ, மற்ற எவற்றைக் கொண்டும் அல்ல, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வெற்றி எடுக்க கிருபை செய்திருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். சத்துருவின் எந்த வல்லமைகளையும், எந்த பிரச்சனைகளையும் இயேசுவின் நாமத்தில் நாங்கள் வெற்றி எடுக்க தேவன் கிருபை செய்யும். விசுவாசத்தில் உறுதியாய் நிற்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 30 மார்ச், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 30th March 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

 யானைக்கு அடி சறுக்கும்

இவனுக்கோ முடி சறுக்கும்  -அவன் யார்?

 

விடை: சிம்சோன். நியாய 16:16-21.

====================================

மூடன் என்று சொன்னான்
முக்கியமானதைக் கேட்டான்
படியைப் போட்டு மடியை நிரப்பி
காத்துக்கொள்ள வேண்டிக் கொண்டான்  -அவன் யார்?

 

விடை: ஆகூர். நீதி 30:1-9.

====================================

சாத்தானின் வீட்டினிலே
சாத்தானுக்கு டாட்டா காட்டி
சாட்சியாய் வாழ்ந்து வந்த
உண்மையுள்ள உத்தமன்   -அவன் யார்?


விடை: அந்திப்பா. வெளி 2:13.

====================================
நன்றி: 'வேதாகம நண்பன்'

 

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 28 மார்ச், 2014

28th March 2014 - நாம் பூமிக்குரியவர்கள் அல்ல

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 28-ம் தேதி – வெள்ளிக்கிழமை
நாம் பூமிக்குரியவர்கள் அல்ல
...........

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? - (ரோமர் 8:31).

.

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? இந்த வசனம் நம் அனைவரையும் சந்தோஷப்பட வைக்கும் வசனம். என் வேதாகமத்திலும் இந்த வசனத்தை ஒட்டி வைத்திருக்கிறேன். நாம் கிறிஸ்தவர்களாயிருப்பதால், தேவன் நம்மோடு இருப்பதால், நமக்கு விரோதமாக யாரும் இருக்க முடியாது என்று நாம் விசுவாசிக்கிறோம். அது உண்மை என்றாலும், இந்த வசனத்தின் உண்மையான அர்த்தத்தை காண்போம்.

.

பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் ஜனங்கள் கூறினார்கள், 'தேவன் எங்களோடிருக்கிறார், ஆகவே நாங்கள் பெலிஸ்தியர்களை முறியடிப்போம்' என்று. தாவீது கூறினார், 'சேனைகளின் கர்த்தரின் நாமத்தினாலே கோலியாத்தாகிய உன்னை ஜெயிப்பேன்' எனறு. இஸ்ரவேலர் எமோரியரை அழித்தனர், எலியாவை பிடிக்க வந்தவர்களை தேவன் அழித்தார், இதே சிந்தையுடன் அநேக கிறிஸ்தவர்கள இன்றும் காணப்படுகின்றனர். 'எனக்கு விரோதமாக எழும்பும் அண்டை வீட்டுக்காரனை, இந்த இடத்தையே விட்டு காலி பண்ண செய்யும் ஆண்டவரே, எங்கள் குடும்ப சொத்தில் இருக்கும் தகராறில் என் சகோதரனுக்கும், எனக்கும் உள்ள வழக்கில், என்னை ஜெயிக்க வைத்து நீர் என்னோடு இருக்கிறீர் என்பதை அவனுககு வெளிப்படுத்தும் ஆண்டவரே' என ஜெபிக்கின்றனர்,

.

பழைய ஏற்பாட்டிலே எலிசாவை 'மொட்டை தலையா' என கேலி செய்தவர்களை கரடிகள் வந்து பட்சித்து போட்டது என வாசிக்கிறோம். ஆனால் கவனியுங்கள், இயேசுகிறிஸ்துவை பெயல்செபூல் (பிசாசுகளின் தலைவன்) என்று விரோதிகள் கூறிய போது எந்த கரடியும் வந்து அவர்களை சாப்பிடவில்லை. ஆகவே மேற்கண்ட வசனத்திற்கு, நம்முடைய எல்லா சத்துருக்களையும் தேவன் கொன்று விடுவார் என்று பொருளல்ல. அவர்களை தேவன் தோற்கடிப்பார் என்றும் பொருளல்ல, ஒரு வேளை நம் சத்துருக்கள் நம்மை கொல்ல தேவன் அனுமதிக்கலாம், இயேசுகிறிஸ்துவை விரோதிகள் கொன்றனர். இயேசுவோடிருந்த அப்போஸ்தலரையும், சத்துருக்கள் கொலை செய்தனர். நாம் இயேசுகிறிஸ்துவையும் அப்போஸ்தலர்களையும் காட்டிலும் மேன்மையானவர்கள் அல்ல.

.

புதிய ஏற்பாட்டின்படி நம்முடைய சத்துரு பிசாசு, மாம்சம், பாவம் ஆகியவையே. அண்டை வீட்டுக்காரரோ, சகோதரனோ சக விசுவாசிகளோ அல்ல. தேவனுடைய ராஜ்யம் இந்த உலகத்திற்குரியதல்ல. ஆகவே தேவப்பிள்ளைகளுக்கு பூமியில் சத்துருக்களே இருக்க கூடாது. பூமியில் உங்களுக்கு சத்துருக்கள் இருப்பார்களானால் இன்னும் நாம் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்கு உட்படவில்லை என்பதே பொருள். இயேசுகிறிஸ்து கூறினார், 'என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, அப்படியிருந்திருந்தால் உங்களிடம் என்னை ஒப்புகொடாதபடி என் ஊழியக்காரர்கள் போராடியிருப்பார்களே' (யோவான் 18:36) என்று. பூமிக்குரிய காரியங்களுக்காக, மக்களோடு போராடும் யாவரும் இவ்வுலகத்தின் ராஜ்யத்திற்கு உரியவர்களே! இன்னும் அண்டை வீட்டாரோடு சண்டையிட்டு கொண்டு, சகோதரனை பகைத்து, நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டிருப்போமானால், நாம் இவ்வுலகத்திற்குரியவர்கள் என்பதற்கு அதுவே அத்தாட்சி.

.

பிரியமானவர்களே, நாம் எந்த ராஜ்யத்திற்குரியவர்களாக இருக்கிறோம்? நமது அன்றாட வாழ்க்கை நம்மை இந்த உலகத்திற்குரியவர்களாக மாற்றியிருக்குமானால், நம்மை தேவ ராஜ்யத்திற்குரியவர்களாக மாற்றி கொள்ள முடிவு செய்வோம். நாம் இந்த உலகத்தில் வாழ்கிறவர்களாக இருந்தாலும், நமது ராஜ்யம் பரலோகத்திற்குரியதாகவே இருக்க வேண்டும்! ஆமென் அல்லேலூயா!

.

பூமிக்குரியவை அல்ல பூமிக்குரியவை அல்ல

மேலானவைகளை என்றும் நாடிடுவோமே நாமும்

..

லாபமான தெல்லாம் நஷ்டமென்றெண்ணுகிறேன்

உலக மேன்மை எல்லாம் குப்பை என்றே சொல்வேன்

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல என்றும், எங்கள் ராஜ்யம் பரலோகத்திற்குரியதாகவும், நாங்கள் பரலோகத்தின் பிரஜைகள் என்றும் எப்போதும் மனதில் வைத்து, இந்த உலகத்தின் காரியங்களுக்கு எங்களில் இடம் கொடாதபடிக்கு காத்து கொள்ளும். எந்த சத்துருக்களும் எங்களுக்கு இராதபடி, எல்லாரோடும் நட்புறவோடு வாழ உணர்த்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 27 மார்ச், 2014

27th March 2014 - தேவ கட்டளையை நிறைவேற்றுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 27-ம் தேதி – வியாழக்கிழமை
தேவ கட்டளையை நிறைவேற்றுவோம்
.........

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. - (மத்தேயு 7:21).

.
ஒரு நாட்டில் அதில் வாழும் மக்கள் தங்களை மீனவர்கள் என்று சொல்லி கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாழ்கின்ற இடம் முழுவதும் ஏரிகளும், ஆறுகளும், குளங்களும் அதிகமாய் இருந்தன. அவற்றில் அநேக சிறிய மீன்களும், பெரிய மீன்களும் அதிகமாய் இருந்தன.

.

ஆனால் அந்த மக்கள் தங்களை மீனவர்கள் என்று சொல்லி கொள்வதில் ஆர்வமாய் இருந்தார்களே ஒழிய, ஒருவரும் போய் மீன் பிடிக்க விருப்பப்படவில்லை. அவர்களின் ராஜா, அந்த மக்களின் சோம்பலை நன்கு அறிந்திருந்தார். ஆகையால் ஒரு நாள், 'நான் சற்று காலம் மற்ற ஒரு நாட்டிற்கு போக வேண்டி இருக்கிறது, நீங்கள் அனைவரும் மீனவர்கள், நான் வருவதற்குள் அனைவரும் மீன் பிடிக்க வேண்டும்' என்று கட்டளையிட்டு விட்டு சென்றார்.

.

அந்த மக்கள் ஒவ்வொருவரும், அவர் எனக்கு சொல்லவில்லை, மற்றவர்களுக்குத்தான் சொன்னார் என்று நினைத்து கொண்டு ஒருவரும் மீன் பிடிக்க போகவில்லை. ஒவ்வொரு வாரமும் அமைச்சர்கள் முதல் கொண்டு அனைவரும் கூடி மீன் வளர்ப்பு மையம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட்டம் கூடி பேசினார்கள். ஆனால் ஒருவரும் மீன் பிடிக்க போகவில்லை. மீன் எப்படி பிடிக்க வேண்டும் என்கிற புத்தகம் அப்போது மிகவும் பிரபலமாக விற்கப்பட்டது. அனைவரும் அதை வாங்கினார்கள், ஆனால் யாரும் அதை படிக்கவில்லை.

.

நாட்டின் ஒவ்வொரு பட்டணத்திலும் எப்படி மீன் பிடிப்பது என்று சிறந்த மீனவர்களால் பாடம் சொல்லி தருவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டது, அதன்படி அவர்களும் சொல்லி தந்தார்கள். மக்கள் நினைத்தார்கள், அவர்களே போய் மீன்பிடித்து வருவார்கள் என்று. ஆகவே யாரும் மீன் பிடிக்க போகவில்லை. அநேக மீன்களை பிடித்தால் எங்கு வைப்பது என்று திட்டமிடப்பட்டு, அதற்கென்று பெரிய ஸ்டோர் ரூம் கட்ட வேண்டுமென்று ஒவ்வொரு கூட்டத்திலும் அதற்கென்று பணத்தை வசூலிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் யாரும் மீன்பிடிக்க போகவில்லை. ஸ்டோர் ரூமும் கட்டி முடிந்தது, ஆனால் யாரும் மீன் பிடிக்க போகாததால், அந்த அறைகள் காலியாக இருந்தன.

.

ஒரு நாள் யாரும் எதிர்பாராதவிதமாக ராஜா நாட்டிற்கு திரும்ப வந்தார். அவர் பார்த்தபோது, ஸ்டோர் அறைகள் எல்லாம் காலியாக இருந்தன. ராஜா மிகவும் நல்லவர், தாம் சொன்ன கட்டளையை மறந்திருப்பார், அப்படியே நினைவில் இருந்தாலும், நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் மன்னித்து விடுவார் என்று அனைவரும் அமைதியாக நின்றார்கள். ராஜாவின் நியாயசன சிங்காசனத்தின் முன் அனைவரையும் ஒவ்வொருவராக ராஜா வர சொன்னார்.

.

ஓவ்வொருவரும் வந்து நின்றபோது, அவர் அவர்களை நோக்கி, 'ஒருக்காலும் நான் உங்களை அறியவில்லை, என்னை விட்டு அகன்று போங்கள்' என்று அவர்களை அவர் சமுகத்தினின்று துரத்தி விட்டார்.

.

பிரியமானவர்களே, இயேசுகிறிஸ்துவும் தாம் பரலோகத்திற்கு சென்றபோது, 'நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15) என்று கட்டளை கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அவர் தங்களுக்கு சொல்லவில்லை என்று அநேகர் ஒன்றும் செய்யாமலேயே கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனிதர்களை பிடிக்கிறவர்களாக இன்னும் போகவில்லை, அநேகர் அதற்கென்று படிப்புகளை படித்திருக்கிறார்கள், ஆனால் வசதியாக தங்களுடைய இடத்திலேயே சுகமாக அமர்ந்திருந்திருக்கிறார்களே தவிர மனிதர்களை பிடிக்க போகவில்லை, மனிதர்களை எப்படி கர்த்தருக்குள் கொண்டு வருவது, எழுப்புதலை எப்படி கொண்டு வருவது என்று புத்தகங்கள் அநேகம் வாங்கி வைத்திருக்கிறார்கள், ஆனால் படிப்பதில்லை, படித்ததை வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை. ஒரு நாள் இயேசு கிறிஸ்துவின் சிங்காசனத்தின் முன் யாவரும் நிற்போம், ஒவ்வொருவரும் கணக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர் நம்மை பார்த்து, 'பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்' (மத்தேயு 7:21-23) என்று சொல்லாதபடி, அவர் சொன்ன கட்டளைக்கு நாம் இருக்கும் இந்த கடைசி நாட்களில் நிறைவேற்றுவோம். 'அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்' (மத்தேயு 25:23) என்று கர்த்தர் நம்மை பார்த்து சொல்லும்படியாக அவருக்கென்று நாம் உழைக்க தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே

ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் ஆத்துமா இழப்பாயே

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மௌனமாயிருக்காதே

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உங்களை மனிதர்களை பிடிக்கிறவர்களாக்குவேன் என்று கூறி கர்த்தருடைய வழியில் நடக்கும்படியாக, போதிக்கிறவர்களாக சீஷர்களை மாற்றின இயேசுகிறிஸ்து, நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்று கட்டளையிட்டு விட்டு சென்றாரே, அவருடைய கட்டளையை நிறைவேற்றுகிறவர்களாக எங்கள் ஒவ்வொருவரையும் மாற்றும் தகப்பனே. நாங்கள் காலத்தை வீணாக செலவு செய்கிறவர்களாக இல்லாதபடி, எங்களால் இயன்ற அளவு கர்த்தருடைய கட்டளையை செய்து முடிக்க பெலத்தை தாரும், கிருபைகளை தாரும். அவருடைய கட்டளைகளை உண்மையாய் நிறைவேற்றும் ஒவ்வொரு ஊழியரையும் ஆசீர்வதியும், இன்னும் உமக்கென்று செய்ய பெலப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 26 மார்ச், 2014

26th March 2014 - தேவனின் தெரிந்தெடுப்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 26-ம் தேதி - புதன் கிழமை
தேவனின் தெரிந்தெடுப்பு
...

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - (சங்கீதம் 118:22-23).

.

முற்காலத்தில் கல்வி கற்றோரின் சதவிகிதம் ஏறக்குறைய வளர்ந்த நாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும் பின்தங்கியிருந்தது. இருப்பினும் தங்கள் குழந்தைகளை எப்படியாகிலும் கல்வி கற்க வைக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்பினர். இதறகாக அவர்கள் அதிக பிரயாசமெடுத்தனர். இந்த சூழ்நிலையில் ஒரு விவசாயி இங்கிலாந்தின் நாட்டுப்புறத்தில் தனது மகனை தொடக்கப்பள்ளி ஒன்றில் மிகுந்த சிரமத்திற்கிடையில் படிக்க வைத்தார். அப்பையன் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்ததும் உயர்நிலை பள்ளிக்கு செல்ல நகருக்கு செல்ல வேண்டியதாருந்தது. அது ஐந்து மைல்களுக்கும் அதிகமாக இருந்ததால் அந்த தகப்பன் தன் மகனை தோளின் மீது சுமந்தே சென்றார்.

.

பள்ளிக்கு சென்றதும் தலைமையாசிரியர் அவனுக்கு ஒரு நுழைவுத்தேர்வு வைத்தார். அதில் அவன் தேர்ச்சியடையாததால் அவனை தன் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாதென்று புறக்கணித்தார். ஆனால் தகப்பன், தலைமையாசிரியரை நோக்கி, அவனை இதுவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததையும், அன்று அவனை தூக்கி சுமந்தே கொண்டு வந்ததையும அவரிடம் கூறி அவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சி மன்றாடினார். அவர் மீது இரக்கம் கொண்டு தலைமையாசிரியர் அந்த பையனிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து ஆஸ்திரேலிய நாட்டின் வரைப்படத்தை வரைய சொன்னார். அச்சிறுவன் எவ்வித அடித்தலுமின்றி அப்படியே வரைந்து கொடுத்தான். அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பள்ளியில் இடம் கொடுத்தார். தகப்பனார் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

.

அந்த சிறுவன் யார் தெரியுமா? அவர்தான் இங்கிலாந்து ஜனாதிபதியான லார்ட் வின்சென்ட் சர்ச்சில் ஆவார். சர்ச்சில் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டார். வல்லரசு நாட்டிற்கு தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவரின் பின்னணி இப்படியாக இருந்தது.

.

ஆம் நம் தேவனின் தெரிந்தெடுப்பை மனித மூளையால் கணிக்க முடியாது. அவர் ஞானிகளை வெட்க்கப்படுத்தும்படி பைத்தியங்களை தெரிந்து கொள்பவர். பலவான்களை வெட்கப்படுத்தும்படி பலவீனரை தெரிந்து கொள்பவர். உள்ளவைகளை அவமாக்கும்படி இல்லாதவைகளையும் அற்பமானவைகளையும் தெரிந்து கொள்பவர். ஆம், ஆடுகளின் பின்னால் அலைந்த தாவீதை இராஜாவாய் அபிஷேகம் பண்ணினவர். தாய் தகப்பனற்று எதிர்கால நம்பிக்கையற்றிருந்த எஸ்தரை இராஜாத்தியாய் உயர்த்தினவர் நம் தேவன்.

.

இவன் எல்லாம் தெரிந்தவன், என்ற தகுதியால் தேவன் ஒருவரையும் தெரிந்தெடுப்பதில்லை. அவரது தெரிந்தெடுப்பு வித்தியாசமானது, விசேஷமானது!

.

பிரியமானவர்களே, ஐயோ நான் ஒன்றுக்கும் தகுதியில்லையே, வீட்டில் யாருடைய நம்பிக்கைக்கும் பாத்திரன் இல்லையே என்று நினைக்கிறோமா? பூமியின் கடையாந்திரத்தில் ஒரு புழுவைப் போல எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த என்னை தேவன் தெரிந்துக் கொள்ள முடியுமானால், உங்களையும் தெரிந்துக் கொள்வது நிச்சயமல்லவா?

.

தேவனின் தெரிந்தெடுப்பு இல்லாதவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், யாருடைய கவனமும் ஈர்க்காத, ஈர்க்கமுடியாதவர்களையும் சந்திக்கிறது. அவர்களை தகுதிப்படுத்தி கர்த்தர் தமக்கென்று உபயோகப்படுத்துகிறார். எத்தனையோப் பேர் சொல்ல முடியும், நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை என்று நினைத்திருந்தேன், தேவன் என்னை தெரிந்தெடுத்து பயன்படுத்துகிறார் என்று.

.

'ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்' (2தீமோத்தேயு 2:21) என்ற வசனத்தின்படி கர்த்தரால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட எவரும், எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாக முடியும். ஆகாது என்று மற்றவர்களால் தள்ளப்பட்டவர்களே அவருக்கு உபயோகமான பாத்திரமாக மாற்றப்பட்டு, அவருக்காக எழும்பி பிரகாசிக்கிறார்கள். அப்படிப்பட்ட பாத்திரமாக தேவன் நம்மையும் எடுத்து உபயோகிப்பாராக. ஆமென் அல்லேலூயா!

.

ஆடுகள் பின் அலைந்த அந்த

தாவீதை அழைத்தது நான்

தாவீதின் வேரில் கிளையாய் உதித்தவர்

தலையை நான் உயர்த்தவில்லையா

.

என் சமுகம் உன் முன் செல்லும்

ஒன்றுக்கும் கலங்காதே

உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்

அழைத்தவர் நான் தானே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எல்லாராலும் தள்ளப்பட்டு, கைவிடப்பட்ட பாத்திரங்களை தேவன் தமக்காக தெரிந்துக் கொள்வதற்காக ஸ்தோத்திரம். எங்களை பரிசுத்தமாய் காத்துக் கொண்டு, தேவன் அழைத்த அழைப்பின் உறுதியாய் நிற்க தேவன் எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்களை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருப்பதுப்போல நாங்களும் உண்மையுள்ளவர்களாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 25 மார்ச், 2014

25th March 2014 - வேதமே வெளிச்சம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 25-ம் தேதி – செவ்வாய்க்கிழமை
வேதமே வெளிச்சம்
....

அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். - (அப்போஸ்தலர் 17:11).

.

அப்போஸ்தலர் நடபடிகளில் பவுலுடைய பிரயாணங்ககளை குறித்தும் அவருடைய ஊழிய விபரங்களை குறித்தும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 17 ஆவது அதிகாரத்தில் பவுல் தெசலோனிக்கேய பட்டணத்திற்கு சென்று ஊழியம் செய்ததாக வாசிக்கிறோம். மக்கள் வாஞ்சையோடு கூட சுவிசேஷத்தை ஏற்று கொண்டனர். பின்பு அங்கு ஏற்பட்ட எதிர்ப்பினால் பவுலை சகோதரர்கள் அருகாமையிலுள்ள பெரோயா பட்டணத்திற்கு அனுப்பினார்கள். அங்கும் அவர் பிரசங்கித்தார். அவரது பிரசங்கத்தை கேட்டு அநேகர் வசனத்தை ஏற்று கொண்டனர்.

.

ஆனால் இந்த தெசலோனிக்கேய பட்டணத்தாருக்கும், பெரோயா பட்டணத்தாருக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் கூறப்பட்டுள்ளது. அது என்ன? பெரோயா பட்டணத்தார் பவுல் கூறியது உண்மையா என்று அறியும்படி வேத வசனத்தை தினந்தோறும் ஆராய்ந்து பார்த்தனர். ஆகவே தெசலோனிக்கேயர்களை காட்டிலும் இவர்கள் நற்குணசாலிகள் என்று பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் எழுதி வைத்துள்ளார்.

.

அப்போஸ்தலனாகிய பவுல் இயேசு கிறிஸ்துவை முகமுகமாய் தரிசித்தவர். புதிய ஏற்பாட்டின்அநேக நிருபங்களை எழுதியவர் அவர். இப்படிப்பட்ட ஒரு பவுலின் பிரசங்கத்தையும் சரியா தவறா என்று வேத வசனத்தின் மூலம் அறிய வேண்டுமோ? ஆம், கட்டாயமாக நிதானிக்க வேண்டும். பெரோயா பட்டணத்தாரின் இந்த காரியமே பரிசுத்த ஆவியானவரின் பாராட்டுதலை பெற காரணமாயிற்று.

.

பிரியமானவர்களே, இந்த கொடிய வஞ்சம் நிறைந்த கடைசி நாட்களில் இந்த சத்தியம் மிக முக்கியமானது. ஒரு ஊழியர் பல இலட்ச மக்களை இரட்சிப்பிற்கு நேராய் நடத்தியிருக்கிறார் என்ற ஒரே காரியத்திற்காக அவர் சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்று குருட்டுத்தனமாக நம்பக்கூடாது. ஒரு சுவிசேஷகர் பத்து பேரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பியிருக்கிறார் என்று வைத்து கொள்வோம். நல்லதுதான். ஆனால் அது அவர் சொல்லும் சத்தியங்களெல்லாம் உண்மையென்று கொள்வதற்கு ஆதாரமல்ல. அவர் கூறும் பிரசங்கம் வேத வசனத்திற்கு ஒத்ததா என்று நிதானிக்கும் பக்குவம் நமக்கு கண்டிப்பாக வேண்டும்.

.

மத்தேயு 24:24ல் 'கள்ள தீர்க்கதரிசிகள் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்கக் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்' என்று இயேசு கிறிஸ்து கூறினார். எவ்வளவு ஒரு முக்கியமான ஒரு எச்சரிக்கை பார்த்தீர்களா, ஒரு ஊழியர் ஒரு சரியான தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டால் கண்மூடித்தனமாக முழுமையாக நமபும் தன்மையுள்ளவர்களாக நாம் காணப்படுகிறோம். இது தவறு. ஒரு ஊழியரின் பிரசங்கமும், எழுத்துக்களும் வேத வசனத்திற்கு முரணாக இருக்கும் பட்சத்தில் அதை ஏற்று கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. அதை குறித்து கலங்கவும் தேவையில்லை.

.

இப்படி சத்தியங்களை நிதானிக்க வேண்டுமென்று சொல்லும்போது, எதை வைத்து நிதானிப்பது? வேத வசனத்தை வைத்து தான். ஆகவே முழு வேதத்தையும் நீங்கள் அடிக்கடி வாசித்து முடிக்காவிட்டால், எந்த ஒரு சத்தியத்தையும் தெளிவாக நிதானிக்க முடியாது. வேத வசனம் தெரியாதவர்களை வாசிக்காதவர்களை மிக எளிதாக ஏமாற்றி விட முடியும். கர்த்தர் சொன்னார் என்று சொல்லி, நம்ப வைக்க முடியும். ஆகவே வேதத்தை தினமும் வாசித்து, பெரோயா பட்டணத்து விசுவாசிகளை போல எந்த ஒரு தீர்க்கதரிசனத்தையும், எந்த ஒரு புது சத்தியத்தையும் வேத வசனத்தோடு நிதானிக்க பழகி விட்டால் நீங்கள் கர்த்தரால் நற்குணசாலிகள் என்று புகழப்படுவீர்கள். சத்துருவின் வஞ்சகங்களுக்கு உங்களை காத்து கொள்ள முடியும். ஆமென் அல்லேலூயா!

.

வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்

நன்கு புரியும்படி

தேவனே எனது கண்களையே

தினமும் திறந்தருளும்

..

நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்

தீபமே உம் வசனம்

செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே

தேவனே உம் வாக்கு

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, வேதத்திலுள்ள இரகசியங்களை நாங்கள் அறிந்து கொள்ளும்படி எங்கள் மனக்கண்களை பிரகாசமாக்கியருளும். எந்த ஒரு சத்தியத்தையும், தீர்க்கதரிசனத்தையும் நாங்கள் கேட்கும்போது, அது வேதத்தின்படி சரியானதா என்று சோதித்து பார்த்து நலமானதை பிடித்து கொள்ள கிருபை தாரும். செய்யும் அற்புதங்களை வைத்து அவர்கள் சொல்வது, செய்வது எல்லாம் சரி என்ற முடிவிற்கு வராதபடி எங்களை காத்து கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 24 மார்ச், 2014

24th March 2014 - நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 24-ம் தேதி - திங்கட் கிழமை
நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பு
...

உங்கள்வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.... இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். - (1 கொரிந்தியர் 12:4,5,11).

.

பழங்காலத்தில் வழக்கத்தில் கதை ஒன்று உண்டு. தேவன் இந்த உலகத்தை படைத்தபோது, உயிரோடிருக்கிற ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு தூதனை பாதுகாக்கும்படி நியமித்தார். மனிதனுக்கு, கடல் வாழ் ஜீவ ராசிகளுக்கு, காட்டில் வாழும் மிருகங்களுக்கு, மரங்களுக்கு, பூக்களுக்கு என்று எல்லாவற்றிற்கும் ஒரு தூதனை காக்கும்படி நியமித்தார்.

.

அப்போது புல்லை பாதுகாக்கும்படி அதற்கும் ஒரு தூதனை நியமித்தார். ஆனால் அந்த தூதன் அதில் விருப்பப்படவில்லை. இதை பாதுகாக்க நான் என்ன செய்வது? அது தானாகவே வளர்ந்து பெருகும். இதை பாதுகாக்க நான் செய்யப் போவது ஒன்றும் இல்லை என்று புறக்கணித்து விட்டு, ஒன்றும் செய்யாமல் அந்த தூதன் சென்று விட்டான்.

.

காலங்கள் மாறினபோது, புல் காய்ந்து போனது. பூக்கள் வாடிப்போனது, ஏனெனில் புல் காய்ந்து, அதன்மேல் பனித்துளிகள் நிற்காத காரணத்தினால். நாட்டில் வாழும் பசுக்கள், மாடுகள், ஆடுகள், காட்டில் வாழும் மான்கள் போன்றவை புல் இல்லாமல் பசியால் வாடின.

.

தேவன் அந்த தூதனை நோக்கி, 'நான் உனக்கு கொடுத்த வேலை சிறியதா? பெரியதா? பார் நீ பாதுகாக்காததால் புல் இல்லாமல் உயிரினங்கள் தவிப்பதை? இதில் உனக்கு சந்தோஷமா?' என்று கேட்டார்.

.

அப்போதுதான் தன் தவறை உணர்ந்த தூதன், தேவனிடம் மன்னிப்புக் கேட்டு, தன் சிறிய வேலையிலும் எத்தனை அரிய காரியங்கள் உண்டு என்பதை உணர்ந்து, தன் வேலையை செய்ய துவங்கினான்.

.

பிரியமானவர்களே, நமக்கும் சபையில் சிறிய வேலைதான் கொடுக்கப்பட்டிருக்கலாம், அல்லது நாம் வேலை செய்யும் இடங்களில் நம்மோடு வேலை செய்பவர்களை விட நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு சிறியதாக இருக்கலாம். நான் படித்த படிப்பு என்ன? என்னுடைய அறிவு என்ன? நான் இதை எப்படி செய்யலாம் என்று நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்பை அல்ல தட்டாமல், நம்மை நம்பி கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையோடும், நேர்மையோடும் செய்வோம்.

.

அதைக்காணும் தேவன் நாம் கொஞ்சத்தில் உண்மையாயிருக்கிறதை பார்த்து, நம்மை அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார். ஆனால் நாம் நம் உள்ளத்தில் இது என்ன வேலை என்று வேண்டா வெறுப்பாக செய்வோமானால், அதையும் தேவன் காண்பார்.

.

'வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்' என்று வேதம் கூறுகிறது. ஆவியானவரே நமக்கு பகிர்ந்து கொடுக்கிற வரங்களிலும், ஊழியங்களிலும் உண்மையாக இருப்போம்.

.

ஆரம்பத்தில் உண்மையாக இருந்த பலர், அதினிமித்தமாக கர்த்தர் உயர்த்தும்போது, பெருமையின் நிமித்தமாக விழுந்து போயிருக்கிறார்கள். கர்த்தர் நம்மை உயர்த்தும்போது நாம் நம்மை அதிகமாக தாழ்த்துவோமானால் இன்னும் அதிகமாக உயர்த்தப்படுவோம்.

.

அநேகருக்கு கர்த்தருக்காய் உழைக்க வேண்டும் என்கிற வாஞ்சை உண்டு. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் கனி நிறைந்த ஜீவியம் இல்லாதபடியால், ஆவியானவரின் கனியாகிய அன்பு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய ஆவியானவர் விரும்பும் கனி இல்லாதிருப்பதால் அவர்களை கர்த்தர் எடுத்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

.

அதே சமயம் கனி கொடுக்கிறவர்கள் என்று ஆவியானவர் நம்மை நம்பி கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில், பொறுப்பில் உண்மையோடு இருப்போம். கர்த்தர் பார்க்கிறார் என்கிற உணர்வோடு செய்வோம். இந்த சிறிய பொறுப்புதானா என்றோ, இந்த சிறிய வேலைதானா என்றோ முறுமுறுப்போடு செய்யாமல், நம்மால் இயன்ற அளவு சிறப்பாக செய்வோம். சிறிய வேலைக்கும் அதற்கேற்ற பொறுப்பு உண்டு. பலன் உண்டு. கர்த்தர் அதை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். நம்மை ஏற்றக்காலத்தில் உயர்த்துவார். ஆமென் அல்லேலூயா!

.

எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று

என்னைப் பிரிக்காது காத்துக் கொண்டார்

என்னை நம்பி அவர் தந்தப் பொறுப்பதனை

அவர் வரும் வரை காத்துக்கொள்வேன்

.

ஆ ஆ ஆனந்தமே பரமானந்தமே -

இது மாபெரும் பாக்கியமே

.

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்

இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்

இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்

எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களை நம்பி நீர் கொடுத்திருக்கிற பொறுப்பில், ஊழியத்தில், வேலையில் நாங்கள் உண்மையாய் இருக்க, நீர் விரும்பும் வண்ணம் நேர்மையுள்ளவர்களாக, பொறுப்புள்ளவர்களாக இருக்க கிருபை செய்யும். எந்த மேன்மையான எண்ணமோ, பெருமைகளோ எங்களை தாக்காதபடி, எந்த விதத்தில் உயர்த்தப்பட்டாலும் தாழ்மையோடு ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.