Friends Tamil Chat

செவ்வாய், 27 மே, 2014

27th May 2014 – ஒருவரும் விரும்பாத மனிதன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மே மாதம் 27-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
ஒருவரும் விரும்பாத மனிதன்
.................

யோராம் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. - (2 நாளாகமம் 21:20).

.

ஒரு நண்பர் சமீபத்தில் தன்னுடைய மூத்த சகோதரன் மரித்து போனதாக கூறினார். நான் அவரிடம், 'ஐயோ எனக்கு தெரியாதே' என்று கூறினேன். அப்போது அவர் சொன்னார், 'நாங்கள் யாரிடமும் இதை அறிவிக்கவில்லை. அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் யாரையும் மதிக்கவில்லை, கவனிக்கவில்லை. இப்போது அவர் மரித்த போது யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை' என்றார். என்ன ஒரு பரிதாபமான சாவு!

.

வேதத்தில் இராஜாவாகிய யோராம் அப்படிதான் வாழ்ந்தான். அவன் ஆட்சிக்கு வந்தவுடன் தன் சகோதரர் யாவரையும் கொன்று போட்டான். 'யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்' (2 நாளாகமம் 21:4). மட்டுமல்ல, அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான். உண்மையான தேவனை விட்டு வழிவிலக செய்து, பாகால்களை வணங்கும்படி செய்தான். அவன் அரசாண்ட வருஷங்கள் மிகவும் மோசமானதாக, துன்பம் நிறைந்ததாக இருந்ததுடன், அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்.

.

என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அதைவிட பரிதாபம், அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான் என்று வேதம் கூறுகிறது. அவனை விரும்புவாரில்லாமல், தனிமையாக, மிகுந்த வேதனையோடு மரித்தான். ஏன் இந்த நிலைமை? அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் என்று வேதம் கூறுகிறது. அவன் தன்னையே முக்கியப்படுத்தி, தேவனுடைய கற்பனைகளை மீறி நடந்து, தான்தான் இராஜா என்று தேவனையும் மனிதரையும் மதியாதாபடி வாழ்ந்தபடியால் இந்த சோக முடிவு அவனுக்கு ஏற்பட்டது.

.

நாம் நம் வாழ்வில் கர்த்தரை முதலிடமாக வைத்திருக்கிறோமா? சிலர் கையில் பணம் வந்தவுடன், அவர்களுடைய நடையே மாறிவிடும், பேச்சே மாறிவிடும், மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். தாங்கள் இந்த உலகத்தையே ஆளுவதாக மனதில் ஒரு பெருமை வந்துவிடும். நாம் மரிக்கும்போது நம்மை குறித்து நன்மையான காரியங்களை கூறும்படி நாம் வாழ்க்கை வாழ்கிறோமா? இல்லாவிட்டால், அப்பாடா, போனான், உலகத்திற்கே பாரமாக இருந்தான். போனது நல்லது என்று கூறும்படி வாழ்கிறோமா?

.

நாம் வாழும்போது, கர்த்தருக்கு பிரியமான, மற்றவர்களுக்கு பிரயோஜனமான ஒரு வாழ்க்கையை வாழும்போது, நாம் மரிக்கும்போது மற்றவர்களால் ஐயோ இவர்கள் போய் விட்டார்களே, என்று கண்ணீர் விடும் நிலைமை ஏற்படும்.

.

ஒருவர் மரிக்கும்போதுதான் அவர்களுடைய உண்மையான வாழ்வு மற்றவர்களுக்கு தெரியும். என்கூட வேலை செய்யும் ஒருவர், 'இவர் மரித்தாரே, இவரை குறித்த எனக்கு நினைவு வரும்போதெல்லாம் நான் இப்படிப்பட்ட நண்பரை கொடுத்தாரே என்று கடவுளை துதிக்கிறேன். ஆனால் மற்ற மனிதரை பார்க்கும்போது, ஏன் இந்த மனிதர் இன்னும் உலகத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்' என்று கூறினார். நாம் வாழ்வது ஒருமுறைதான். அந்த வாழ்க்கையை தேவனுக்கு பிரியமுள்ளதாக வாழ்வதற்கு முயற்சிப்போம். மற்றவர்கள் கர்த்தரை துதிக்கும் அளவு நம்முடைய வாழ்க்கை இருக்கட்டும். தேவனே அவரை எடுத்துக் கொள்ளும் என்று முறையிடாதபடி நம் வாழ்க்கை அமையட்டும்.

.

வாழும் வாழ்க்கை ஒருமுறைதான்

வாழ்ந்திடுவோம் நாமும்

வானவர் இயேசுவுக்கு பிரியமாக

வாழுகின்ற மற்றவர்க்கு பிரயோஜனமாக -சீர்

வாழ்வு வாழ்ந்திட உங்களை வாழ்த்துகிறேன்

.

ஜெபம்
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, நீர் பிரியப்படும் வாழ்க்கை வாழவும், மற்றவர்கள் விரும்பும் வாழ்க்கை வாழவும் கிருபை செய்யும். இந்த உலகத்தில் நாங்க்ள கொண்டு வந்தது ஒன்றுமில்லை, கொண்டு போவதும் ஒன்றுமில்லை. ஆனால் எங்களை குறித்த நல்ல நினைவுகளை மற்றவர்களுக்கு நாங்கள் விட்டு செல்லதக்கதாக எங்கள் வாழ்க்கை அமைய கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.