Friends Tamil Chat

வியாழன், 27 மார்ச், 2014

27th March 2014 - தேவ கட்டளையை நிறைவேற்றுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 27-ம் தேதி – வியாழக்கிழமை
தேவ கட்டளையை நிறைவேற்றுவோம்
.........

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. - (மத்தேயு 7:21).

.
ஒரு நாட்டில் அதில் வாழும் மக்கள் தங்களை மீனவர்கள் என்று சொல்லி கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாழ்கின்ற இடம் முழுவதும் ஏரிகளும், ஆறுகளும், குளங்களும் அதிகமாய் இருந்தன. அவற்றில் அநேக சிறிய மீன்களும், பெரிய மீன்களும் அதிகமாய் இருந்தன.

.

ஆனால் அந்த மக்கள் தங்களை மீனவர்கள் என்று சொல்லி கொள்வதில் ஆர்வமாய் இருந்தார்களே ஒழிய, ஒருவரும் போய் மீன் பிடிக்க விருப்பப்படவில்லை. அவர்களின் ராஜா, அந்த மக்களின் சோம்பலை நன்கு அறிந்திருந்தார். ஆகையால் ஒரு நாள், 'நான் சற்று காலம் மற்ற ஒரு நாட்டிற்கு போக வேண்டி இருக்கிறது, நீங்கள் அனைவரும் மீனவர்கள், நான் வருவதற்குள் அனைவரும் மீன் பிடிக்க வேண்டும்' என்று கட்டளையிட்டு விட்டு சென்றார்.

.

அந்த மக்கள் ஒவ்வொருவரும், அவர் எனக்கு சொல்லவில்லை, மற்றவர்களுக்குத்தான் சொன்னார் என்று நினைத்து கொண்டு ஒருவரும் மீன் பிடிக்க போகவில்லை. ஒவ்வொரு வாரமும் அமைச்சர்கள் முதல் கொண்டு அனைவரும் கூடி மீன் வளர்ப்பு மையம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கூட்டம் கூடி பேசினார்கள். ஆனால் ஒருவரும் மீன் பிடிக்க போகவில்லை. மீன் எப்படி பிடிக்க வேண்டும் என்கிற புத்தகம் அப்போது மிகவும் பிரபலமாக விற்கப்பட்டது. அனைவரும் அதை வாங்கினார்கள், ஆனால் யாரும் அதை படிக்கவில்லை.

.

நாட்டின் ஒவ்வொரு பட்டணத்திலும் எப்படி மீன் பிடிப்பது என்று சிறந்த மீனவர்களால் பாடம் சொல்லி தருவதற்கு ஆயத்தம் செய்யப்பட்டது, அதன்படி அவர்களும் சொல்லி தந்தார்கள். மக்கள் நினைத்தார்கள், அவர்களே போய் மீன்பிடித்து வருவார்கள் என்று. ஆகவே யாரும் மீன் பிடிக்க போகவில்லை. அநேக மீன்களை பிடித்தால் எங்கு வைப்பது என்று திட்டமிடப்பட்டு, அதற்கென்று பெரிய ஸ்டோர் ரூம் கட்ட வேண்டுமென்று ஒவ்வொரு கூட்டத்திலும் அதற்கென்று பணத்தை வசூலிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் யாரும் மீன்பிடிக்க போகவில்லை. ஸ்டோர் ரூமும் கட்டி முடிந்தது, ஆனால் யாரும் மீன் பிடிக்க போகாததால், அந்த அறைகள் காலியாக இருந்தன.

.

ஒரு நாள் யாரும் எதிர்பாராதவிதமாக ராஜா நாட்டிற்கு திரும்ப வந்தார். அவர் பார்த்தபோது, ஸ்டோர் அறைகள் எல்லாம் காலியாக இருந்தன. ராஜா மிகவும் நல்லவர், தாம் சொன்ன கட்டளையை மறந்திருப்பார், அப்படியே நினைவில் இருந்தாலும், நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் மன்னித்து விடுவார் என்று அனைவரும் அமைதியாக நின்றார்கள். ராஜாவின் நியாயசன சிங்காசனத்தின் முன் அனைவரையும் ஒவ்வொருவராக ராஜா வர சொன்னார்.

.

ஓவ்வொருவரும் வந்து நின்றபோது, அவர் அவர்களை நோக்கி, 'ஒருக்காலும் நான் உங்களை அறியவில்லை, என்னை விட்டு அகன்று போங்கள்' என்று அவர்களை அவர் சமுகத்தினின்று துரத்தி விட்டார்.

.

பிரியமானவர்களே, இயேசுகிறிஸ்துவும் தாம் பரலோகத்திற்கு சென்றபோது, 'நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15) என்று கட்டளை கொடுத்து விட்டு சென்றார். ஆனால் அவர் தங்களுக்கு சொல்லவில்லை என்று அநேகர் ஒன்றும் செய்யாமலேயே கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனிதர்களை பிடிக்கிறவர்களாக இன்னும் போகவில்லை, அநேகர் அதற்கென்று படிப்புகளை படித்திருக்கிறார்கள், ஆனால் வசதியாக தங்களுடைய இடத்திலேயே சுகமாக அமர்ந்திருந்திருக்கிறார்களே தவிர மனிதர்களை பிடிக்க போகவில்லை, மனிதர்களை எப்படி கர்த்தருக்குள் கொண்டு வருவது, எழுப்புதலை எப்படி கொண்டு வருவது என்று புத்தகங்கள் அநேகம் வாங்கி வைத்திருக்கிறார்கள், ஆனால் படிப்பதில்லை, படித்ததை வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை. ஒரு நாள் இயேசு கிறிஸ்துவின் சிங்காசனத்தின் முன் யாவரும் நிற்போம், ஒவ்வொருவரும் கணக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர் நம்மை பார்த்து, 'பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்' (மத்தேயு 7:21-23) என்று சொல்லாதபடி, அவர் சொன்ன கட்டளைக்கு நாம் இருக்கும் இந்த கடைசி நாட்களில் நிறைவேற்றுவோம். 'அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்' (மத்தேயு 25:23) என்று கர்த்தர் நம்மை பார்த்து சொல்லும்படியாக அவருக்கென்று நாம் உழைக்க தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் அறுவடை இழப்பாயே

ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் ஆத்துமா இழப்பாயே

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் மௌனமாயிருக்காதே

.

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உங்களை மனிதர்களை பிடிக்கிறவர்களாக்குவேன் என்று கூறி கர்த்தருடைய வழியில் நடக்கும்படியாக, போதிக்கிறவர்களாக சீஷர்களை மாற்றின இயேசுகிறிஸ்து, நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்று கட்டளையிட்டு விட்டு சென்றாரே, அவருடைய கட்டளையை நிறைவேற்றுகிறவர்களாக எங்கள் ஒவ்வொருவரையும் மாற்றும் தகப்பனே. நாங்கள் காலத்தை வீணாக செலவு செய்கிறவர்களாக இல்லாதபடி, எங்களால் இயன்ற அளவு கர்த்தருடைய கட்டளையை செய்து முடிக்க பெலத்தை தாரும், கிருபைகளை தாரும். அவருடைய கட்டளைகளை உண்மையாய் நிறைவேற்றும் ஒவ்வொரு ஊழியரையும் ஆசீர்வதியும், இன்னும் உமக்கென்று செய்ய பெலப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.