Friends Tamil Chat

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

8th August 2014 பரிசுத்தத்தை காத்துக் கொள்வோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 08-ம் தேதி - வெள்ளிக் கிழமை
பரிசுத்தத்தை காத்துக் கொள்வோம்
...

உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். - (லேவியாராகமம் 19:2).

.
ஒரு பெரிய உணவகத்தில் ஒரு இளம் ஜோடி வந்து உணவை ஆர்டர் செய்தார்கள். அதோடு கூட கையில் எடுத்துச் செல்லும்படியாக ஒரு பார்சலையும் கேட்டார்கள். பார்சல் வந்ததும், பணத்தை செலுத்திவிட்டு, தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பினர். சிறிது நேரத்திற்குப்பின் திறந்தால் அதில் உணவு இல்லை. கட்டுகட்டாக பணநோட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

.

அதைக் கண்ட அதிர்ச்சியுற்று, அதை அப்படியே எடுத்துக் கொண்டு கடை முதலாளியிடம் கொடுத்தனர். அவரும் அதிச்சியுற்றார். பின் அவர்களுக்கு நன்றி செலுத்தினார். அவர்களைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் பெருமையாக சொன்னார்.

.

அங்கே தற்செயலாக வந்திருந்த பத்திரிக்கை நிருபர் ஒருவர் இருவரையும் பேட்டிகண்டு, புகைப்படம் எடுப்பதற்காக சேர்ந்து நிற்க சொன்னார். ஆனால் அவர்கள் இருவரும் ஒரேயடியாக மறுத்தனர். கடை முதலாளி 'இப்படிப்பட்ட நற்குணம் எல்லாருக்கும் தெரிய வேண்டும். ஆகவே கண்டிப்பாக போட்டோ எடுத்து பத்திரிக்கையில் போட வேண்டும்' என்று வற்புறுத்தினார். ஆனால் அவர்களோ பிடிவாதமாய் மறுத்து விட்டனர். ஏன் என்று முதலாளி கேட்கவே, அவர்கள் இருவரும் 'நாங்கள் கணவன் மனைவி அல்ல' என்று சொல்லி தலைகுனிந்து நின்றனர்.

.

நற்பண்பும் நல்ல நடத்தையும் இணைபிரியா இரண்டு தண்டவாளங்கள் போன்றவை. மேலேயுள்ள சம்பவத்தில் நற்பண்பு சிறந்து விளங்கினாலும், நடத்தை மோசமாயிருந்தது.

.

வேதத்திலே சிம்சோனின் வாழ்வை பார்ப்போமென்றால், 'இஸ்ரவேலை பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான்' என்ற பெரிய திட்டத்தோடு தேவனால் மனோவா தம்பதியினருக்கு கொடுக்ப்பட்ட விசேஷித்த பிள்ளைதான் இந்த சிம்சோன். தேவன் பேரில் வைராக்கியமுள்ளவனாகவே அவன் வளர்க்கப்பட்டான். கர்த்தருடைய ஆவியானவா அவனை வழிநடத்தினார். அதன்படி அவன் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான். ஆம், அவன் தேவனுக்காக வைராக்கியமாய் செயல்பட்டது உண்மைதான்.

.

ஆனாலும் காசாவில் அவன் தனது நடத்தையில் தேவனுக்காக வைராக்கியம் பாராட்டவில்லை. தவறான நடக்கையால் தேவ ஆவியையும், நியாயாதிபதியின் பொறுப்பையும், தன் பெலத்தையும், தன் இரு கண்களையும் இழந்து. இரு தூண்களுக்கு நடுவில் பரிகசிக்கப்படும் நபராய் மாறிப் போனான். சிம்சோனும் இஸ்ரவேலை விடுவிக்க சிறந்த செயல்களை செய்தான. அனால் அவன் நடத்தையோ மோசமாயிருந்தது.

.

ஆனாலும் கடைசி நிமிஷத்தில் 'சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, என்னைப் பலப்படுத்தும் என்று சொல்லி, அவன் கர்த்தரை நோக்கி கூப்பிட்ட போது கர்த்தர் அவன் ஜெபத்தை கேட்டார் என்றுப் பார்க்கிறோம். கர்த்தர் அவரது பாவங்களை மன்னித்து, அவரது பெயர் விசுவாசிகளின் பட்டியல் நிரம்பிய எபிரேயர் 11ம் அதிகாரத்தில் இடம் பெற வைத்து விட்டார்.

.

நாமும் கூட பிறருடைய பார்வையிலும், அவர்கள் பாராட்டும் விதத்திலும் நற்கிரியைகள் பலவற்றை செய்யலாம். ஆனால் நம்முடைய அந்தரங்க வாழ்வு, வாழ்க்கையின் மறுபக்கம் தேவன் பாராட்டும்படி உள்ளதா? நமது நடத்தை நன்றாயிருக்கும்போது மட்டுமே, தேவன் நமது நற்செயல்களை அங்கீகரிக்க முடியும். அதில் அவர் மகிமைப்பட முடியும்.

.

பிரியமானவர்களே, நாமும் நற்செயல்கள் பல மற்றவர்களுக்கு செய்து, ஆனால் அந்தரங்க வாழ்வில் பாவமுள்ளவர்களாக இருப்போமானால், இந்த நேரத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, ஆண்டவரே, தயவாய் என்னை மன்னியும், நான் பாவ வழிகளிலிருந்து திருந்தி வாழ எனக்கு ஒரு விசை கிருபை செய்யும் என்று கூப்பிடுவோமானால் கர்த்தர் நம் ஜெபத்தையும் கேட்டு, நம்மை பரிசுத்தமாக்குவார். 'உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்' என்று அவர் சொன்னாரே!

.

நாம் கர்த்தருக்கு பிரியமாக இருக்க வேண்டுமானால் நாம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்பது கர்த்தருடைய சித்தம். பரிசுத்தமாய், கர்த்தருக்கு பயந்து, மற்றவர்களுக்கு நன்மையான காரியங்களை செய்யும்போது, கர்த்தர் அதில் மகிழுவார். அவர் நாமமும் மகிமைப்படும். ஆமென் அல்லேலூயா!

.

உள்ளத்திலும் எண்ணத்திலும்

தீமையை வெறுத்திடுங்கள்

பளுவான பாவப் பாரங்கள் யாவும்

பதர் என்றே தள்ளிடுங்கள்

அநித்தியமான அற்பசுகங்கள்

அருவெறுத்திடுங்கள்

விசுவாசப் பயணம் இயேசுவைக் கொண்டு

ஓடியே முடித்திடுங்கள்

.

மேலானவைகளை நாடுங்கள்

தேவாதி தேவனின் பிள்ளைகள் நீங்கள்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் அநேக நற்கிரியைகளை செய்தாலும், பரிசுத்தமில்லாமல் செய்வோமானால், அதினால் பயனேதுமில்லையே. நீர் பரிசுத்தராயிருக்கிறதுப் போல நாங்களும் பரிசுத்தமாய் ஜீவிக்க கிருபை செய்யும். தேவ நாமம்; மகிமைப்படும்படி எங்கள் சொல், செயல், நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் பரிசுத்தத்தைக் காத்துக் கொண்டு, பின் நற்கிரியைகளை செய்யவும், மற்றவர்களுக்கு பிரயோஜனமாயிருக்கவும் உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.