Friends Tamil Chat

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

25th August 2014 – உணர்வில்லாத இருதயம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி - திங்கட் கிழமை
உணர்வில்லாத இருதயம்
...................

அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். - (லூக்கா 16:27-28).

.

ஒரு சர்க்கஸ் நடைபெற்று கொண்டு இருந்த இடத்தில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். ஜனங்கள் தங்களையே மறந்து அந்த கோமாளிகள் செய்யும் கோமாளிதனத்தை இரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து, அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரையும் வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜனங்களோ, இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி கெஞ்ச ஆரம்பித்தார். பின்னர்தான் மக்களுக்கு புரிய வந்தது, அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று. ஆனால் ஏற்கனவே கொட்டகை முழுவதும் தீப்பிடித்து விட்டபடியால், உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.

.

அதைப்போலவே ஒரு ஐசுவரியவான் தான் நரகத்தின் அக்கினியில் எரியும்போது, லாசருவை தன் சகோதரரிடத்தில் அனுப்பும்படிக்கும், அவர்கள் அந்த நரக அக்கினியில் சிக்கி கொள்ளாதபடி லாசரு சென்று எச்சரிக்கும்படியாகவும் அவனை அவனுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கெஞ்சுகிறான் (லூக்கா 16:27-28). 'ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 16:29-31). எத்தனை சோகமான காட்சி! அத்தனை நாட்கள் பூமியிலிருந்த நாட்களில் தன்னுடைய சகோதரர்கள் மேல் இல்லாத கரிசனை நரகத்தில் எரியும்போது அந்த ஐசுவரியவானுக்கு வருகிறது, ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டபடியால், ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை!

.

'நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும் (மத்தேயு 24:37-39). கடைசி நேரம் வரை ஜனங்கள், சந்தோஷமாய் உலகத்தை அனுபவித்து கொண்டு, யார் எங்களை அசைக்க முடியும் என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஜலப்பிரளயம் வரப்போகிறது, பூமியை அழிக்க போகிறது என்று நோவா சொன்ன வார்த்தைகளுக்கு செவிகொடாமல், அவர்கள் தங்கள் இஷ்டம் போல வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு நாள் வந்தது. ஜலப்பிரளயம் வந்தது, ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோனது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அவர்கள் உணர தொடங்கும்போது, ஏற்கனவே நேரம் கடந்து விட்டபடியால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே காலம் இருக்கும்போதே கர்த்தரின் சத்தத்திற்கு செவிகொடுத்து இரட்சிக்கப்படும்படி வந்துவிட வேண்டும். நாளை பார்த்து கொள்ளலாம் என்று நாட்களை தள்ளிப்போட்டால், ஒருவேளை நாளை வராமலே போகலாம்! ஆகவே நாட்கள் பொல்லாதவைகளாய் இருப்பதால் காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்வோமாக!

.

கர்த்தர் நீதியுள்ளவர், அவர் எல்லாரும் அவரை குறித்து அறிந்து கொள்ளும்படியான தருணத்தை கொடுக்கிறார். அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கிறவர்கள் பாக்கியவான்கள். செவிகொடாமற் போகும்போது, கருணையுள்ள தேவன், நீதியுள்ள தேவனாய் இருக்கிறபடியால், செவிகொடாதவர்களுக்கு அந்தநாளில் அவரும் செவிகொடாமலே போவார். ஆகையால் இந்த நாளே இரட்சண்ய நாள் என்று இரட்சிப்பின் கோட்டைக்குள்ளே வந்து விடுவோமாக!

.

நாளை என்று நாட்களை கழியாதே – நல்ல

வேளையிது என்றுணர்ந்து விரைந்து வா –

வாலவயதும் மாறும்போது வருந்துவாய் நீ

மேலவனின் பாதம் பணிய ஓடிவா ஓடிவா

ஓ! இரட்சிப்பின் சந்தோஷம் காண ஓடிவா!

நீ பட்சமுடன் ராஜனேசு வண்டை ஓடிவா!

.
ஜெபம்
எங்கள் மேல் கரிசனையுள்ள நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். கிருபையாய் எங்கள் வாழ்நாட்களை கூட்டி சேர்த்து கொடுக்கிற நல்லவரே இந்த நாட்களில் இரட்சிக்கப்படாத ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட கிருபை செய்யும். காலம் கடந்துவிட்டால் எத்தனை வருத்தப்பட்டும் பிரயோஜனமில்லை என்பதை உணரும் இருதயத்தை தருவீராக. காலம் இருக்கும்போதே இரட்சிக்கப்படவும் உம்மை ஏற்றுக்கொள்ளவும் கிருபை செய்யும். நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்களை போல உணர்வில்லாத இருதயம் ஒருவருக்கும் இல்லாதபடி, உணர்வுள்ள இருதயங்களாக மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.