Friends Tamil Chat

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

28th August 2014 - தாறுமாறாக்கப்பட்ட பாஷை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி - வியாழக்கிழமை
தாறுமாறாக்கப்பட்ட பாஷை
.......

நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். - (ஆதியாகமம் 11:7-9)

.

நீங்கள் என்றாவது உலகில் எத்தனை பாஷைகள் உண்டென்று யோசித்திருக்கிறீர்களா? அவைகள் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? மொழி ஆராய்ச்சியாளர்கள் மொழிகள் எப்படி வந்தது என்று இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், ஒரு மொழி பேசும் குடும்பத்திலிருந்து தான் மற்ற மொழிகள் வந்திருக்க வேண்டும் என்று. அவர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால், வேதத்தில் நமக்கு தெளிவாக பாஷைகள் எப்படி வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதையே நாம் விசுவாசிப்போம். பூமியெங்கும் வழங்கின பாஷையை கர்த்தர் தாறுமாறாக்கினார் என்று வசனம் சொல்கிறது. அதற்கு முன் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது (வசனம் 1).

.

தேவன் ஏன் அதை தாறுமாறாக்கினார்? ஏனென்றால் மனிதன் கர்த்தருக்கு விரோதமாக எழும்பினபடியால், தேவன் அந்த காரியத்தை செய்தார். மனிதர்கள் ஒன்று சேர்ந்து தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து, செய்ய ஆரம்பித்த முதல் முரண்பாடான காரியமும் அதுதான். அவர்கள் ஒரு கோபுரத்தை மாத்திரம் கட்ட திட்டமிடவில்லை, அதற்கு மேலான ஒன்றை செய்ய ஆரம்பித்தார்கள். நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள் (வசனம் 4). இங்கு கர்த்தர் எங்கே? அவரை குறித்து அவர்கள் பயப்படாதபடி, அவர்களுடைய திட்டங்களில் அவர் இல்லாதபடி செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம், திரும்பவும் தேவ கோபாக்கினை வந்து, ஒரு வெள்ளம் வந்தால், வானளாவும் இந்த கோபுரத்தின்மேல் ஏறி தப்பித்து கொள்ளலாம் என்று. எப்படியாயினும், அவர்கள் தேவனில்லாதபடி தங்களுக்கென்று ஒரு ராஜய்த்தையும், தங்கள் பெயருக்கென்று ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். ஆகவே தேவன் இறங்கி வந்தார். அவர் அப்படி வந்து செய்திருக்காவிட்டால், அந்த மனிதர்கள், நோவாவின் காலத்தில் இருந்த பாவத்தைவிட அதிக பாவத்தை செய்து, தேவன் வேறு முறையில் உலகத்தை அழிக்கும்படியான நியாயத்தீர்ப்பை பெற்றிருப்பார்கள்.

.

கர்த்தர் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினபடியால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, புரிந்து கொள்ள கூடாதிருந்தது. அப்போது அவர்கள் அந்த கோபுரத்தை கட்டுவதை விட்டுவிட்டார்கள். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.

.

ஆனால், தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவருடைய திட்டத்தை நாம் பெந்தேகோஸ்தே நாளில் பார்க்கிறோம். 'அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்' (அப்போஸ்தலர் 2:3-6). வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்த வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அந்த இடத்திலே கூடி வந்திருந்தார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவரால் மேல்வீட்டறையிலே கூடியிருந்த 120 பேரும் வௌ;வேறு பாஷையிலே பேசினபோது, அங்கு வந்திருந்து அனைத்து மக்களும் எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் (வசனம்7). அவர்கள் தங்கள் மொழியில் அவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசினதை கேட்டபோது, ஆச்சரியப்பட்டார்கள். ஆம், தேவன், குழப்பத்தின் இடமாகிய பாபேலில் அவர்கள் ஒரே பாஷையை பேசினபோது, அதை தாறுமாறாக்கினவர், அவர்கள் தேவனை பற்றிக்கொள்ளாமல், தேவனுக்கு முதலிடத்தை கொடாமல், தங்களுக்கு பெயர் உண்டாக்கும்படி அவர்கள் செய்தபடியால், அந்த இடத்தில் பாஷையை தாறுமாறாக்கினவர், பெந்தேகோஸ்தே நாளில், அவர்கள் பேசின வார்த்தைகள் மற்றவர்கள் விளங்கி கொள்ளும்படி செய்தார். உலகில் உள்ள ஜனம் இரட்சிப்பை பெற்றுகொள்ளும்படி, அவர் அந்த நாளில் வெவ்வேறு பாஷைகளை பேச வைத்தார். அந்த நாளில் இரட்சிப்பின் செய்தியை பேதுரு எழுந்து நின்று அறிவித்தபோது, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா! பரலோகத்தின் பாஷை குழப்ப பாஷையல்ல, இரட்சிக்கும் பாஷையே!

.

கர்த்தருடைய இரட்சிப்பு எல்லா மொழி பேசும் மக்களுக்கும் உரியது. 'தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 5:9-10). ஆம் பரலோகத்தில் சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து வந்த ஜனங்கள் அல்லேலூயா என்று பாட்டுக்களை பாடுவார்கள். ஒவ்வொரு மொழிகளிலுமிருந்து தேவனுக்கு துதிகள் செலுத்தப்படும். ஆமென் அல்லேலூயா!

.

எல்லா ஜாதியார், எல்லா தேசத்தார்

எல்லா மொழியும் பேசும் மக்களாம்

ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு

ஆட்டுக்குட்டிக்கே மகிமை என்று

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

திரளாய் நிற்கும் யார் இவர்கள்

சேனைத்தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில்

அழகாய் நிற்கும் யார் இவர்கள்

.

ஜெபம்
எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய எங்கள் தகப்பனே, உம்மை துதிக்கிறோம். உலகத்தில் அநேக மொழிகள் இருந்தாலும் அத்தனை மொழிகளிலிருந்தும் மக்களை இரட்சிக்க சித்தம் கொண்ட எங்கள் தகப்பனே, உம்மை துதிக்கிறோம். எங்கள் தமிழ் மொழி பேசும் மக்களை உம்முடைய சமுகத்தில் கொண்டு வருகிறோம் தகப்பனே, பரலோகத்தை தமிழ் மொழி பேசும் மக்கள் நிரப்புவார்களாக. இன்னும் இரட்சிக்கப்படாத தமிழின மக்களை இரட்சிப்பீராக. ஒவ்வொரு மொழிபேசும் மக்களையும் இரட்சிப்பீராக. எங்கள் இந்திய தேசத்தில் காடுகளிலும் மலைகளிலும், பாஷை புரியாத மக்கள் மத்தியிலும், அவர்கள் பாஷைகளை படித்து, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கும் ஒவ்வொருவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.