Friends Tamil Chat

புதன், 13 ஆகஸ்ட், 2014

13th August 2014 சம்பவிக்க வேண்டியவைகள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதி - புதன் கிழமை
சம்பவிக்க வேண்டியவைகள்
...

யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். - (மத்தேயு 24:6-7).


இந்த நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் அநேகருக்கு தெரியாது. அதைப் பற்றி செய்திகளை கேட்டாலும், எங்கோ நடக்கிறது நமக்கு என்ன என்கிற மனநிலைதான் அநேகரிடம் காணப்படுகிறது. ஆனால் கடைசி கால சம்பவங்களில் மத்திய கிழக்கு நாடுகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது நாம் யாவரும் அறிந்திருக்க வேண்டும். செய்தித்தாள்களை வாசிக்கும்போது அதோடு வேத வசனம் என்ன சொல்கிறது என்று பார்த்து, வேதத்தில் சொல்லப்படுகிற தீர்க்கதரிசன நிறைவேறல் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

.

தற்போது இஸ்ரேலுக்கும், இஸ்ரேலின் ஒரு பகுதியாகிய காசாவிற்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரத்தின்படி எகிப்தில் போர் நிறுத்தத்தைக் குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது.

.

இஸ்ரேலின் மூன்று வாலிபர்களை காசாவிலுள்ள ஹமாஸ் என்னும் தீவிரவாத குழு கடத்திச் சென்று, இஸ்ரேல் அரசாங்கத்தின் வேண்டுகோள் எதையும் கேட்காமல், அவர்களை கொன்று, தூக்கி வீசியது. அதனால் கோபமுற்ற யூதர்களில் சிலர் பாலஸ்தீனாவை சேர்ந்த சிறுவன் ஒருவனை கடத்தி சென்று அவனை கொன்றனர். அதன்பின் ஹமாஸ் இஸ்ரவேலை ராக்கெட்டுகள் வீசி தாக்க, போர் ஆரம்பித்தது. ஜூலை மாதம் 8ம்தேதி ஆரம்பிக்கப்பட்ட போர் இன்றளவும் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையிடையே போர் நிறுத்தம் இரண்டு நாள், மூன்று நாள் என்று நிறுத்தப்பட்டாலும், ஹமாஸ் அதையும் மீறி தாக்கும்போது, மீண்டும் போர் தொடர்கிறது.

.

இப்படியாக கடந்த முப்பத்து மூன்று நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த போர் தற்போது மூன்று நாட்களாக பேச்சு வார்த்தையின் நிமித்தம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போரில் இஸ்ரவேல் பக்கத்திலிருந்து, மூன்று பாமரமக்களும், (அதில் ஒருவர் தாய்லாந்தை சேர்ந்தவர்) அறுபத்தி மூன்று போர் வீரர்களும் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் காசாவின் பக்கத்தில் இருந்து, 1964 பேரும், சுமார் 2000 பேருக்கும் மேலாக காயமடைந்திருக்கிறார்கள். அநேகருடைய வீடு தரைமட்டமாகி இருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து யுனைட்டட் நேஷன்ஸின் பாதுகாப்பில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

.

இத்தனைக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் விடாமல் 3488 ராக்கெட்டுகளை இஸ்ரவேல் மீது வீசியும் அவர்களில் மனித சாவும், கட்டிடங்கள் இடிபாடும் மிகவும் குறைவே. எப்படி இந்த காரியம் நடந்தது? போர் நடக்கும்போது, அதில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அநேக அற்புதங்களை கண்டனர். ஏன், ஹமாஸ் தீவிரவாதிகளில் ஒருவனே, 'நாங்கள் அனுப்புகிற ராக்கெட்டுகளை அவர்களின் தேவன் எங்கள் மேலேயோ, கடலிலோ திருப்பி அனுப்புகிறார்' என்று சாட்சி கூறினான்.

.

இந்த போரைப்பற்றியும், காசாவிற்கு ஏற்படப் போகும் அழிவைக் குறித்தும், 2000 வருடங்களுக்கு முன்பாகவே கர்த்தர் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆச்சரியம்! 'காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப் பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். . சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன். சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும். அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்' (செப்பனியா 2:4-7) என்று வசனம் திட்டவட்டமாக காசாவின் அழிவைக் குறித்து தீர்க்கதரிசனமாய் நமக்கு வெளிப்படுத்துகிறது.

.

அவர்களுக்கு ஏன் இந்த அழிவு? அதே அதிகாரத்தில் 'அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்' (10ம் வசனத்தில்) கூறப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஜனத்திற்கு விரோதமாக பெருமைபாராட்டி, அவர்களை நிந்தித்தபடியினால் அவர்களுக்கு இந்த தண்டனை என்று கர்த்தர் கூறுகிறார்.

.

இஸ்ரவேல் தவறு செய்யவில்லையா? அவர்கள் பாவம் செய்யவில்லையா? வசனம் கூறுகிறது, 'அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்' (எண்ணாகமம் 23:21) அவர்கள் அக்கிரமம் செய்தாலும், குற்றம் செய்தாலும், ஒரு தகப்பனைப் போல அவர் தம் சொந்த ஜனத்தை சிட்சிப்பார், அவர் அவர்களை தண்டிப்பார். அவர்களை நியாயம் தீர்க்கும் நாள் உண்டு. அப்போது அவர்களை நியாயம் விசாரிப்பார். ஆனால் எதிரிகளிடம் அவர்களை காட்டிக் கொடுத்து, அவர்களை அழிக்கும்படி அனுமதியார். எத்தனை நல்ல தேவன் நம் தேவன்!

.

பிரியமானவர்களே, நாமும் கூட பாவம் செய்தாலும், ஒரு தகப்பனைப் போல அவர் நாம் செய்த அக்கிரமங்களுக்கும், பாவங்களுக்கும் தண்டிப்பார். ஆனால் மற்றவர்களிடம் காட்டிக் கொடுத்து, மற்றவர்கள் முன் நம்மை வெட்கப்படுத்த விடமாட்டார்.

.

கர்த்தர் தமக்கு சொந்தமாக தெரிந்துக் கொண்ட ஜனத்திற்கு எதிராக யார் வந்தாலும், கர்த்தர் தம் ஜனத்தோடு இருந்து அதைக் காப்பார். ஏனெனில் ஆயிரம் வருட அரசாட்சி எருசலேமில் இருந்து கர்த்தர் ஆட்சி செய்யப்போகிறபடியால் அதை யாருக்கும் விட்டுக் கொடார். ஆந்திக்கிறிஸ்துவின் காலத்தில் யூதர்கள் உபத்திரவ காலத்திற்கு கடந்து செல்ல நேரிட்டாலும், பின் கிறிஸ்து அந்திக்கிறிஸ்துவோடு போராடி, வெற்றிப்பெற்று, ஆயிர வருட அரசாட்சியை எருசலேமில் அமைப்பார்.

.

இந்த யுத்த நிகழ்ச்சிகள் தற்போது நடந்துக் கொண்டிருந்தாலும், உடனே முடிவு வராது என்று இயேசுகிறிஸ்து சொன்னாலும், ஆனால் இது வேதனைகளுக்கு ஆரம்பம் என்று நம்மை எச்சரித்திருக்கிறபடியால் நாம் நம் தேவனை பற்றிக் கொள்வோம். எந்த வேளையில் கிறிஸ்து வந்தாலும் அவருடன் செல்ல ஆயத்தப்படுவோம். மற்றவர்களை ஆயத்தப்படுத்துவோம். ஆமென் அல்லேலூயா!

.

ஓங்கும் புயமும் பலத்த கரமும்

உன் பக்கமேயுண்டு

தாங்கும் கிருபை தயவு இரக்கம்

தாராளமாயுண்டு

.

இஸ்ரவேலென் ஜனமே என்றும்

இடறிட வேண்டாம்

யெகோவா உன் தெய்வமானால்

ஏதும் பயம் வேண்டாம்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே இந்த கடைசி நாட்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற எங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிற சம்பவங்கள் எச்சரிக்கையாக எங்களை கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக்கும்படியாக நீர் வெளிப்படுத்துகிறதற்காக ஸ்தோத்திரம். இஸ்ரவேல் தேசத்தை நீர் கைவிடாதபடி காத்துக் கொள்வதற்காக உமக்கு ஸ்தோத்திரம். தொடர்ந்து காத்துக் கொள்ளும். ஏங்களை கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.