Friends Tamil Chat

திங்கள், 30 ஜூன், 2014

30th June 2014 - நன்மைகளை மறவாதிருப்போம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 30-ம் தேதி - திங்கட் கிழமை
நன்மைகளை மறவாதிருப்போம்
...

'நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும்... உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக' -(உபாகமம் 8:12,13,18).

.

யூத் வித் எ மிஷன் (YWAM) என்பது வாலிபர்கள் மூலம் சுவிசேஷத்தை அறிவிக்கும் ஒரு மிஷனெரி ஸ்தாபனமாகும். இதன் ஸ்தாபகர் லாரன் கன்னிங்ஹாம் என்ற தேவ மனிதர் உலகெங்கும் சுவிசேஷம் அறிவிக்கவும், தேவையுள்ள இடங்களில் மருத்துவ உதவிகள் மூலம் கிறிஸ்துவின் அன்பை வெளிபபடுத்தவும், புது வழிகளை கையாள ஜெபித்துக் கொண்டிருந்த போது தேவன் கப்பல் ஒன்றை வாங்கும்படி அவரை வழிநடத்தினார்.

.

இந்த பெரிய திட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேவனின் அற்புத கரம் இருப்பதை அவர்கள் கண்டனர். அந்த நேரத்தில் மாவோரி என்ற நேர்த்தியான கப்பல் மிகக்குறைந்த விலைக்கு வந்தது. அதற்கான அட்வான்ஸ் தொகை ரூபாய் 40 இலட்சத்தை இங்கிலாந்திலுள்ள ஒரே நபர் காணிக்கையாய் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பல இலட்சங்கள் வந்து குவிந்தன. முப்பது நாட்களுக்குள் மீதி தொகையை கொடுத்து கப்பலை பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

.

ஒப்பந்தம் முடிய ஒரு வாரம் இருக்கும்போது திடீரென காணிக்கை வருவது நின்றது. பிலிப்பைன்ஸிலுள்ள தொழிலதிபர் ஒருவர் மீதமுள்ள பணம் அனைத்தையும் தான் தருகிறேன் என முன்வந்தார். ஆனால் அந்த பணத்தை அந்த நாட்டிலிருந்து வெளி கொண்டு வர அநேக தடைகள் காணப்பட்டது. இந்த நேரத்தில் லாரன் கண்ணீரோடு தேவ சமுகத்தில் காத்திருந்தபோது ஒரு தரிசனத்தை கண்டார்.

.

அதில் லாரனும் அவர்களின் ஸ்தாபனத்தின் மற்ற தலைவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி, 'தேவன் கப்பல் வாங்க பணத்தை தந்து விட்டார். கப்பல் நமக்கு கிடைத்து விட்டது' என்று லாரன் கூறவும், அனைவரும் கைகளை அசைத்து ஆர்ப்பரித்து கொண்டாட துவங்கினர்.

.

அப்பொழுது அந்த அறையின் ஒரு ஓரத்தில் ஒருவர் நிற்கக் கண்டார். லாரன் அவரை நெருங்கி சென்று பார்த்தார். அவர் அழுது கொண்டிருந்தார். இன்னும் நெருங்கி சென்று உற்று பார்த்தபோது, அவர் இருதயம் நொறுங்கியது. அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான். கப்பலை தருகிறவர் அவர், ஆனால் இங்கோ ஊழியத்தலைவர்கள் இயேசுவை மறந்து கப்பலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!

.

இந்ததரிசனத்தை ஊழியர்களிடம் பகிhந்து கொண்டபோது, ஒவ்வொருவருடைய இருதயமும் நொறுக்கப்பட்டு அழுது தேவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டனர். மாவோரி கப்பலை வாங்க முடியாமற் போனாலும் ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் 'உயிர்தெழுதல்' என்னும் அர்த்தம் கொண்ட 'அனஸ்டாஸிஸ்' என்ற கப்பலை வாங்கி இன்றும் அதில் ஊழியம் செய்து வருகின்றனர்.

.

'கிடைக்கப்பெற்ற பரிசில் கொடுத்தவரை மறந்து விடாதீர்கள்' என்றார் ஏமி கார்மைக்கேல் அம்மையார். தேவன் நாம் மகிழ்ந்திருக்கும்படியாக, அநேக நன்மைகளை கிருபையாக தருகிறார். பணம், பொருள், வீடு, ஆஸ்தி, வாகனங்கள, ஆவிக்குரிய அனுபவங்கள் என்று அனைத்தையும் தருகிறார். அநேக நேரங்களில் அவற்றை கொடுத்த தேவனை விட கொடுக்கப்பட்ட பொருளின் மேலேயே நம் சிந்தனை நின்று விடுகிறது. அதில் பெருமை கொண்டு அதை நமக்கு கொடுத்த தேவனை மறந்து விடுகிறோம்.

.

'நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,... எச்சரிக்கையாயிருந்து,... உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக' (உபாகமம் 8:12,13,17,18) என்று வசனம் கூறுகிறது.

.

நம்முடைய தாழ்மையில் நம்மை நினைத்து, நம்மை தெரிந்துக் கொண்டு, நம்மை இம்மட்டும் உயர்த்திய தேவனை மறந்து போவோமானால் அது எத்தனை பயங்கரமாயிருக்கும்! அநேக வேளைகளில் நம்முடைய செயல்களினால் தேவ ஊழியர் லாரனைப் போல நாம் நம் தேவனை புறம்பே தள்ளிவிடுகிறோம். நமக்கு தேவன் கொடுத்த நன்மைகளை முன்பாக வைத்து தேவனை பின்பாக தள்ளிவிடுகிறோம். தேவன் எத்தனையாய் வேதனைப்படுவார்!

.

நம்மை உயர்த்திய தேவனை நாம் மறந்துபோகாதபடி, நமக்கு கிடைத்த நன்மைகளிலேயே நம் முழு கவனத்தையும் செலுத்தி, தேவனை துக்கப்படுத்தாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம். ஆவிக்குரிய வரங்களை பெற்றுக் கொண்டவர்கள், தாங்கள் பெற்ற வரத்திலேயே கவனமாயிருந்து, அதிலே மேன்மைப்பாராட்டிக் கொண்டு, அதைக் கொடுத்த தேவனை மறந்து போகாதிருப்போமாக.

.

உலக மயக்கமும், ஐசுவரியமும் நம்மை நம் தேவனிடமிருந்து பிரிக்காதிருப்பதாக. எல்லாவற்றிலும் எந்த ஆசீர்வாதத்திலும் அதை நமக்கு கொடுத்த தேவனை மகிமைப்படுத்துவோம். கர்த்தர் அதில் பிரியமாயிருப்பார். இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

.

எத்தனையோ நன்மைகளை என்

வாழ்வில் செய்தவரே

அத்தனையும் நினைத்து நான்

அதிகமாய் நன்றி சொல்வேன்

நன்றி உமக்கு நன்றி

என் தேவா உமக்கு நன்றி

.

நன்றி சொல்ல வந்தேன் நாதா என்

நாவினால் துதிக்கிறேன்

நன்றி உமக்கு நன்றி

என் தேவா உமக்கு நன்றி

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எல்லா நன்மைகளுக்கும் ஊற்றானவரே, நீர் எங்களுக்கு கொடுத்த உலகப்பிரகாரமான, ஆவிக்குரிய நன்மைகளுக்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் கொடுத்த நன்மைகளிலேயே நாங்கள் மூழ்கி, அதை கொடுத்தவராகிய உம்மை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க கிருபை செய்யும். எந்நாளும் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.