Friends Tamil Chat

திங்கள், 9 ஜூன், 2014

09th June 2014 – ஒரே இருதயமும் ஒரே மனமும்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 09-ம் தேதி - திங்கட் கிழமை
ஒரே இருதயமும் ஒரே மனமும்
...................

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். - (அப்போஸ்தலர் 4:31-32).

.

நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும்போது அதனால் யாரும் பயப்படுவதில்லை. அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அதுவே ஒரு முழு படையாக வரும்போது, வழியில் காணப்படும் எந்தவிதமான பச்சையான இலைகளையும் விட்டுவைக்காமல், முழு பயிர்களையும் மேய்ந்து போடும்.

.

வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும்போது செய்து முடித்துவிடும். பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, அதில் வெட்டுக்கிளிகளைக் குறித்து, ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள், அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

.

இந்த மிகச்சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் உண்டு. கிறிஸ்துவின் விசுவாசிகள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களைவிட ஒரு குழுவாக, ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போது, அரிய பெரிய காரியங்களை செய்யலாம், பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் தமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.

.

இன்று சபைகளில் ஒருமனம் இல்லாதபடியால், சத்துரு வெற்றி எடுத்து கொண்டு இருக்கிறான். சபையின் ஊழியங்களில் அனைவரும் ஈடுபட வேண்டும். இரவு ஜெப கூட்டம் என்றால், அதற்கு வருகிறவர்கள், சபை ஆராதனைக்கு வருகிறவர்களில் பாதிகூட இருக்க மாட்டார்கள். ஒருமுறை இரவு ஜெபகூட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவரான மறைதிரு. சகோதரன் ஜீவானந்தம் அவர்கள் ஒரு இரவு ஜெப கூட்டத்திற்கு வரும்போது, அது அளவுக்கதிகமான ஆசீர்வாதத்தை கொண்டுவரும். அப்படி ஒவ்வொரு ஜெபக் கூட்டமும் உங்கள் வாழ்வில் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு ஆசீர்வாதங்களை கொண்டு வரும் என்று கூறினார். நாம் நினைக்கிறோம், கர்த்தருக்காக நாம் தியாகமாக இரவு முழுவதும் கண்விழித்து ஜெபிக்க போகிறோம் என்று. ஆனால் கர்த்தர் அதையே நமக்கு ஆசீர்வாதமாக மாற்றுகிறார். சபையாக சுவிசேஷ ஊழியங்களுக்கு செல்லும்போது யார் யார் வீட்டில் இருக்கிறார்களோ, அத்தனைபேரும் ஒருமனமாய் ஊழியத்திற்கு செல்ல வேண்டும். ஒருமனமாய் எல்லா ஊழியங்களிலும் பங்கு பெற வேண்டும்.

.

ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும்போது, உலகத்தையே அசைக்க முடியும். ஆதி திருச்சபை ஆரம்ப காலத்தில் விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது என்று பார்க்கிறோம்.

.

இன்று நம்மிடையே நிலவுகின்ற சிறுசிறு மனவருத்தங்கள், சிறுசிறு காரியங்கள் நம் சபையின் மூலமாக வர இருக்கின்ற பெரிய எழுப்புதலுக்கு தடையாக இல்லாதபடி ஒருவரையொருவர் மன்னித்து, சபையாக ஒருமனப்படுவோம். சத்துருவுக்கு எதிர்த்து நிற்போம். தேசத்தை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்குவோம். இந்த கடைசி நாட்களில் ஒருமனமாய் ஒரே இருதயமாய் கர்த்தர் சபையை தெரிந்து கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவோம். தேசத்தை அசைப்போம். சேனையாக எழும்பிடுவோம். தேசத்தை கலக்கிடுவோம்.

.

விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு

அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு

ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு

என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும்

இருள் சூழும் நாட்கள் இனி வருதே

அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்

.


ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த கடைசி நாட்களில் கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் ஒருமனதை தாரும் தகப்பனே. உம்முடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்தியது என்று வசனத்தில் வாசிக்கிறோமே, எங்களை ஒருமனப்படுத்தும். ஒருமனமாய் நீர் எங்களை ஏற்படுத்தின நோக்கத்தை நிறைவேற்ற கிருபை செய்யும். ஒருமனமாய் தேசத்தை உமக்கு சொந்தமாக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.