Friends Tamil Chat

புதன், 4 ஜூன், 2014

4th June 2014 - இரக்கம் பாராட்டுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 04-ம் தேதி - புதன் கிழமை
இரக்கம் பாராட்டுவோம்
...

அவருடைய இரக்கங்கள் மகா பெரியது . - (2 சாமுவேல் 24:14).

.
இயேசுகிறிஸ்துவையும், இரக்கத்தையும் தனியாக பிரித்துவிட முடியாது. வியாதியஸ்தர்களை கண்டபோது தாம் மிகவும் களைப்பாயிருந்தபோதிலும், அவர்கள் மேல் மனதுருகி, அவர்கள் மேல் கைகளை வைத்தார் என்று வாசிக்கிறோம். பாவத்தில், வியாதியில் மூழ்கி தவிப்போருக்கு கிறிஸ்துவைப் போல ஆறுதல் அளித்து, நம்பிக்கை கொடுத்து, தேற்ற வேண்டிய கடமை கிறிஸ்துவை பின்பற்றுகிற நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இரக்கம் பாராட்டுதல் என்றால் என்ன என்பதைக் குறித்த சில உண்மை சம்பவங்களை காண்போம்.

.

மேற்கு மிச்சிகன் மாநிலத்தில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டான். கீமோ தெரப்பி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை. ஏனென்றால் அவனுடைய தலையிலிருந்த முடி எல்லாம் கொட்டி வி;ட்டது. நோயின் முடிவு என்னவாகும் என்று அறியாத நிலையில், கி;ட்டத்தட்ட வழுக்கை தலையோடு பள்ளிக்கு சென்றால் வெட்கமாயிருக்குமே என்று தயங்கினான். ஆனால் பள்ளிக்கு அவன் சென்ற போது அவனுக்கு மிகப்பெரிய வியப்பு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்புகொண்ட சிறுவர்கள் புதிய முறையில் தங்களது இரக்கத்தை காட்டினர். நண்பர்களின் அச்செயல் அந்த சிறுவனின் மன வேதனையை குறைத்தது.

.

ஒரு வேதாகம மாநாட்டில் செய்தி கொடுக்க வந்திருந்து ஜேக் வைர்ட்ஜன் என்பவர் மிகவும் வித்தியாசமான சரீர பாதிப்புடைய ஒருவருடன் உணவருந்த சென்றார். அந்த பாதிப்புடைய நபர், வாயில் வைக்கும் உணவை மெல்ல முடியாததினால் வாயிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக உணவு கீழே விழுந்து கொண்டே இருக்கும். ஆகவே தன் கழுத்தில் செ;யதிதாளைக் கட்டி வைத்துக் கொண்டு சாப்பிடுவார். யாரும் அவர் அருகில் அமர்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தனித்து விடப்பட்ட அவருடன் ஜேக் உணவருந்தி ஆறுதல் அளித்தார். இது ஒரு தனி நபர் மீது இரக்கம் காட்டும் செயலாகும்.

.

எலியட் என்பவர் காலை தோறும் வேதத்தை தியானிக்கும் பழக்கமுடையவர். அந்நேரத்தில் குப்பையை அகற்றும் நபரை பார்க்க நேரிட்டால் தனது தியானத்தை நி;றுத்திவிட்டு, வெளியே சென்று இன்முகத்தோடு அவரை விசாரித்து, உற்சாகப்படுத்துவார். அந்த குப்பை அகற்றும் தொழிலாளிக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி, தன்னையும் ஒருவர் மதித்து பேசுகிறாரே என்று! சிறு காரியமாயிருந்தாலும் அது ஒருவரை திடப்படுத்துகிறது என்றால் அதை செய்ய தயங்கலாமா? இதுவும் இரக்கத்தின் விளைவுதானே!

.

பால் என்பவர் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருந்தபோது அருகில் அமாந்திருந்த பிரட்டி என்பவருக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் விரைவிலேயே கர்த்தரை ஏற்றுக் கொண்டார். சில காலம் கழித்து பிரட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக, ஒரு சிறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பால் அவரை நாள்தோறும் சென்று சந்திப்பார். அவரது தேவைகள் அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் மரணமடையப் போகும் இரவில் அவரருகே வேத வசனங்களை கூறிக்கொண்டே இருந்தார். இதுவும் இரக்கும் பாராட்டுதலே!

.

பிரியமானவர்களே, இரக்கம் பாராட்டுதல் என்ற உடன் நீங்கள் வேறு ஏதோ பெரிய பெரிய காரியங்களை நினைத்து ஐயோ அப்படி செய்ய என்னிடம் அதிக பணமில்லையே என்று எண்ண வேண்டாம். சிறு சிறு காரியங்களை நமது உறவினர்களல்லாதவர்களுக்கு தியாகத்தோடு செய்யும் காரியங்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.

.

வீட்டிலேயே அடைபட்டு கிடக்கும் வயதானவர்களோடு பேசி நலம் விசாரிப்பது, நோய்வாய்ப்பட்டவர்களையும், காயமடைந்தவர்ளையும் சென்று விசாரிப்பது, படுக்கையில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து கொண்டு செல்வது, உடல் ஊனமுற்றவர்கள், தனிமையில் வாடுபவர்களை கரிசனையோடு விசாரிப்பது போன்ற செயல்களை நாம் செய்ய முடியும்தானே!

.

நம்முடைய தேவன் நம் மேல் வைத்த இரக்கத்தினாலே நாம் நிர்மூலமாகாமல் இருக்கிறோம். ஏனெனில் அவருடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை (புலம்பல் 3:22). நாமும் மற்றவர்களிடம் இரக்கத்தை வெளிப்படுத்துவோம். நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்வோம். கர்த்தர் அதில் பிரியமாயிருப்பார். ஆமென் அல்லேலூயா!

.

இரக்கம் உள்ளவரே

மனதுருக்கம் உடையவரே

நீடிய சாந்தம் கிருபை

அன்பு நிறைந்து வாழ்பவரே

.

என் இயேசு இராஜா ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே

உயிருள்ள நாளெல்லாமே

ஜெபம்
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீர் இரக்கமுள்ளவராக இருப்பதுப்போல் நாங்கள் மற்றவர்களிடம் இரக்கமுள்ளவர்களாய் நடக்கவும், உம்முடைய அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தவும் உதவி செய்யும். எங்களால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்து, அவர்கள் உம்மை மகிமைப்படுத்ததக்கதாக எங்கள் கிரியைகள் காணப்பட கிருபைசெய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.