Friends Tamil Chat

புதன், 3 ஜூலை, 2013

3rd July 2013 - மற்றவர்களுக்கு முன் மாதிரி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜூலை மாதம் 03-ம் தேதி - புதன் கிழமை
மற்றவர்களுக்கு முன் மாதிரி
...

...நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. - (1தீமோத்தேயு 4:12).


ஒரு கிறிஸ்தவர் ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். அவரிடம் நிறைய கிறிஸ்தவ கைப்பிரதிகள் இருந்தன. தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவருக்கு கிறிஸ்துவின் அன்பைக் குறித்து கூற ஆரம்பித்தார். அப்போது வயதான ஒருவர் அவர்களின் பக்கத்தில் நின்று கொண்டு, 'தம்பி, என் கால் வலிக்கிறது, தயவு செய்து இடம் கொடுங்கள்' என்று கேட்டார். அதற்கு கிறிஸ்தவர், 'எனக்கும் கால் வலிக்கிறது, நான் எப்படி இடம் கொடுப்பது' என்று சொல்லி விட்டு, தொடர்ந்து சுவிசேஷத்தை கூற ஆரம்பித்தார்.
.

ஆனால் அதை கேட்டுக் கொண்டிருந்த பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழுந்து அந்த பெரியவருக்கு இடம் கொடுத்தார். இப்போது கிறிஸ்தவரின் நிலைமை சங்கடமானது. பெரியவருக்கும் அவர் சுவிசேஷம் சொல்ல முடியாது. ஏனெனில் அவருடைய கிரியை கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவில்லை.
.
அநேக கிறிஸ்தவர்கள் அவர்களை பேச சொன்னாலும், ஜெபிக்க சொன்னாலும் உலகமே அதிசயிக்கும் வண்ணம் பேசுவார்கள், ஜெபிப்பார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை பார்க்கும்போது, அவர்கள் சொல்வதற்கும், ஜெபிப்பதற்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது.

.

கிறிஸ்துவை நாம் பிரதிபலிக்காதவரை நாம் மற்றவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி சொல்கிற காரியங்கள் எல்லாம் வீணாகவே இருக்கும். மற்றவர்கள் 'எப்படி பேசினான் பார், ஆனால் மற்றவர்களை மன்னிக்க முடியவில்லை, மற்றவர்களுக்கு சிறிய உதவிக்கூட செய்ய முடியவில்லை' என்று பேசுவார்கள்.
.
'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆனால் அநேகர் நமககுள் இருக்கிற கிறிஸ்துவாகிய ஒளியை காண்பிப்பதற்கு பதிலாக நம்மையே அல்லது நம்முடைய ஜென்ம சுபாவத்தையே காண்பித்து கொண்டிருக்கிறோம்.
.
'ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான், பழையவை ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின' என்று வேதம் கூறுகிறது. ஆனாலும் நாம் நம்முடைய பழைய சுபாவங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் கிறிஸ்து நமக்குள் இல்லை என்பதே அர்த்தமாகும்.

.

கிறிஸ்தவர் ஒவ்வொருவருமே மற்றவர்கள் வாசிக்கும் வேதம் என்று கூறுவார்கள். நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே மற்றவர்கள் இவர்கள் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை உடையவர்கள் என்று தீர்மானிப்பார்கள்.
.
ஒருவர் ஒரு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தபோது, ஒரு ஹோட்டலில் தங்கும்படி சென்றபோது, அங்கிருந்த
ரிஷப்ஷனிஸ்ட் அவரிடம் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டாள். அப்போது அவர் அவளிடம் சொன்னார், 'நீ இந்த இடத்தில் வேலை செய்வதைக் கண்டுதான் உன்னுடைய நாட்டைக் குறித்து வெளிநாட்டவர்களாகிய நாங்கள் இது நல்ல நாடா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும். நீ இவ்வாறு அலட்சியம் செய்தால், உங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் அனைவருமே இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒருவேளை நான் நிதானிக்கக்கூடும். ஆகவே வெளிநாட்டவர்களை மதிக்க கற்றுக் கொள்' என்று அறிவுரை கூறினார்.

.
ஆம், நாம் நம் கிரியைகளில் கிறிஸ்துவை வெளிப்படுத்தாதவரை நாம் சொல்லும் எந்த காரியமும் எடுபடாது. ஆகையால் நம்முடைய நற்கிரியைகளை கண்டு மற்றவர்கள் கிறிஸ்துவை அறியும்படி மற்றவர்களுக்கு முன் ஒரு நல்ல எடுத்துக்காட்டுகளாக ஜீவிப்போம். அது ஆயிரம் சொற்பொழிவுகளை விட அதிகமானதாக இருக்கும். 'நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு' என்ற பவுலின் அறிவுரைப்படி நடப்போம். கிறிஸ்து அதனால் மகிமைப்படுவார். ஆமென் அல்லேலூயா!

.

நம் வாழ்வை மற்றவர் பார்த்து கூறும் நல்ல சாட்சிகள்

இயேசுவின் அன்பை பிரதிபலிக்கும் நீதியின் சாட்சிகள்

இயேசுராஜனின் திருவடிச் சுவட்டை தொடரும் உண்மை சாட்சிகள்

சிலுவை கொடியை உயர்த்தி ஜீவனையும் தரும் சத்திய சாட்சிகள்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வாழ்க்கையை கண்டு மற்றவர்கள் உம்மை துதிக்கத்தக்கதாக எங்கள் சொல்லிலும், செயலிலும், நடக்கையிலும் உம்மை பிரதிபலிக்க உதவி செய்யும். எதை செய்தாலும் அது கர்த்தருக்கு மகிமையை கொண்டுவருமா என்று நினைத்து கர்த்தருக்கு மகிமையை கொண்டு வரும் காரியங்களையே செய்ய போதித்தருளும். எங்களை காண்கின்றவர்கள் ஜீவிக்கிற கிறிஸ்துவை காணும்படி எங்கள் நடை உடை செயல் எல்லாவற்றிலும் உம்மை பிரதிபலிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.