Friends Tamil Chat

வியாழன், 8 ஜனவரி, 2015

8th January 2015 பரிதபிக்கப்படதக்கவர்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஜனவரி மாதம் 08-ம் தேதி - வியாழக் கிழமை
பரிதபிக்கப்படதக்கவர்கள்
...

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். - (1 கொரிந்தியர் 15:19).

.

ஒரு கிறிஸ்த தம்பதியினருக்கு அநேக வருடங்கள் கழித்து, ஒரு மகள் பிறந்தாள். பக்தியிலும், அன்பிலும், அரவணைப்பிலும் வளர்க்கப்பட்டாள். அவளது ஐந்தாவது பிறந்த நாளுக்கு அவளுடைய அப்பா ஒரு அழகிய பொம்மை ஒன்றை வாங்கி கொடுத்தார். பார்ப்பதற்கு அசல் குழந்தையைப் போலவே காணப்பட்ட அந்த பொம்மைதான் படுக்கும்போது அவளுக்கு துணை.

.

ஒரு நாள் இரவு படுக்கும்போது பொம்மையைத் தேடினாள். காணவில்லை. அப்போது தான் மதியானம் மாடி அறையில் விளையாடி விட்டு அதை அங்கேயே விட்டு வந்தது நினைவிற்கு வந்தது. உடனே அம்மாவிடம் சென்று. 'அம்மா மாடியில் என் பொம்மை இருக்கிறது. அதை எடுத்துக் தாருங்கள்' என்று அழுதாள். சமையலறையில் வேலையிருந்த அம்மா, 'எனக்கு வேலையாயிருக்குமா, நீ இயேசப்பாவை துணைக்கு கூப்பிட்டுக் கோயேன்' என்றார்கள்.

.

உடனே அவள் மாடிப்படிகட்டுக்கு முன் நின்று கண்களை மூடி, 'இயேசப்பா எனக்கு மாடிக்கு போக பயமா இருக்கு. நீங்க என் கூட வாங்க' என்று ஜெபித்து விட்டு, மடமடவென மேலே ஏறிச் சென்று பொம்மையை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.

.

கடைசிப்படிக்கு வந்ததும், மீண்டும் கண்களை மூடி, 'இயேசுப்பா என் கூட வந்ததற்கு மிகவும் நன்றி. இப்ப நீங்க போகலாம்' என்று ஜெபித்து விட்டு வேகமாக வந்து பொம்மையோடு படுத்துக் கொண்டாள். இதை கவனித்த தாய் 'என் மகளுக்கு நான் வேத சத்தியத்தை சரியாய் கற்றுக் கொடுக்கவில்லையே' என மனம் வருந்தினார்கள்.

.

இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் இச்சிறுப்பிள்ளையைப் போலவே காணப்படுகிறோம். நம்முடைய தேவையில், ஆபத்தில், குறைவில், வியாதியில், நெருக்கடியில், கடனில் கண்ணீரில் அவரை தேடுகிறோம். உதவி செய்யுமாறு அழைக்கிறோம். ஆனால் அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், நன்றி கூறிவிட்டு அவரை மறந்து விடுகிறோம். 'இனி நீர் தேவையில்லை, நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்'என சொல்வதைப் போல.

.

ஆனால் ஒரு கிறிஸ்தவன் வேதத்தின் மூலம் தேவனுடைய வாஞ்சையை அறிந்துக் கொள்ள முடியும் என்பதையும், ஒவ்வொரு நிமிடமும் அவரோடு உறவு கொள்ள முடியும் என்பதையும், ஒவ்வொரு நிமிடமும் அவரோடு ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அநேக கிறிஸ்தவர்கள் அறியவில்லை என்பதே உண்மை.

.

நம் தேவன் நம்மை நேசிக்கிறவர். நாமும் அவரை நேசிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறவர். அவரோடு நாம் ஐக்கியப்படும்போது, அவரோடு ஒவ்வொரு நிமிடமும் தொடர்பு வைத்திருக்கும்போது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாக வெளிப்படுத்துவார். நமக்கு சிறந்த ஆலோசனை சொல்லி நடத்துவார். வேதத்தின் மூலம் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துவார்.

.

'இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்' என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று உலக காரியங்களுக்காக மாத்திரம் நாம் தேவனை தேடி, ஆவிக்குரிய உலகில், ஆவிக்குரிய தேவைகளை தேடாமல் போவோமானால், மற்ற எல்லாரைப் பார்க்கிலும் நாமே பரிதபிக்கப்படத் தக்கவர்கள்.

.

ஏனென்றால், இந்த உலகம் நிரந்தரமானது அல்ல, நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. அங்கு நித்திய நித்தியமாய் வாழ்கின்ற வாழ்வைக் குறித்து தேடாமல், நிரந்தரமல்லாத காரியங்களுக்காக நாம் தேவனை தேடி, நித்திய வாழ்வை கோட்டை விட்டால், அதைவிட பரிதாபமான நிலை வேறு எதுவுமில்லை.

.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் - (மத்தேயு 6:33). ஆமென் அல்லேலூயா!

.

உலகமெல்லாம் மாயையையா

உம் அன்பொன்றே போதுமையா

.

இன்னும் உம்மை அறியணுமே

இன்னும் கிட்டி சேரணுமே

.

இராஜா உம் பிரசன்னம் போதுமையா

எப்போதும் எனக்குப் போதுமையா

.

பிரசன்னம் பிரசன்னம்

தேவ பிரசன்னம்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, இத்தனை நாட்கள் நாங்கள் எங்கள் தேவைகளில் மாத்திரம் உம்மை தேடி மற்ற நாட்களில் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று உம்மை விட்டுவிட்ட காரியங்களை தயவாய் மன்னிப்பீராக. அநித்தியமான காரியங்களை அல்ல, நித்தியமான காரியங்களை தேடி, நித்திய வாழ்விற்கு எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள கிருபை செய்யும். மறுமையின் வாழ்வே நித்தியம் என்பதை உணர்ந்து உம்மோடு ஒவ்வொரு நிமிடமும் செலவழிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.