Friends Tamil Chat

புதன், 5 நவம்பர், 2014

5th November 2014 - ஆவியின் கனியோ... விசுவாசம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 நவம்பர் மாதம் 05-ம் தேதி - புதன் கிழமை
ஆவியின் கனியோ... விசுவாசம்
...

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23).

.
ஏழாம் சுளை......... விசுவாசம்:

.

ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பது 'எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தா சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'; (மாற்கு 11:23) என்று இந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிற விசுவாசம் அல்ல. ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பதற்கு உண்மை, நேர்மை, உத்தமம் என்பது பொருளாகும்.

.

ஒரு எஜமானுக்கு ஒரு வேலைக்காரன் விசுவாசமுள்ளவனாக இருந்தால், அவன் நேர்மையாக, உண்மையாக, தன் செயல்கள் எல்லாவற்றிலும் தன் எஜமானுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் கொண்டு வராதவனாக இருப்பான்.

.

ஒரு உண்மையுள்ள கணவனுக்கு நல்ல மனைவி விசுவாசமுள்ளவளாக இருப்பாள், நல்ல மனைவிக்கு ஒரு உண்மையுள்ள கணவன் விசுவாசமுள்ளவனாக இருப்பான்.

.

வேதத்தில் தேவன் எத்தனை உண்மையுள்ளவராயிருக்கிறார் என்றுப் பார்க்கிறோம். 'வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே' (எபிரேயர் 10:23), 'தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்' (1 கொரிந்தியர் 1:9) 'மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்' (1 கொரிந்தியர் 10:13) என்று நம் தேவன் எத்தனை உண்மையுள்ளவர் என்று வேதத்தில் பார்க்கிறோம். அந்த வார்த்தைகளின்படியே அவர் இந்நாள் பரியந்தம் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.

.

தேவன் உண்மையுள்ளவராக இருப்பதால் இந்த நாள் பரியந்தம் நம்மை நடத்தி வருகிறார், நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருப்பதால்தான் எந்த போராட்டங்கள், பாடுகள், துன்பங்கள் வந்தாலும் கூடவே இருந்து தாங்கிக் கொள்ளவும், எல்லா பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கவும் வல்லவராக இருக்கிறார்.

.

நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கிறதுப் போல நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? கர்த்தர் நம்மை நம்பிக் கொடுத்திருக்கிற வேலைகளில், பொறுப்புகளில், குடும்பங்களில், சபைகளில், சமுதாயத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? எத்தனை குறைவுள்ளவர்களாக காணப்படுகிறோம்?

.

அநேக ஊழியர்கள் தேவன் அவர்களை நம்பிக் கொடுத்த சிறிய ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தபடியால், தேவன் அவர்களை அநேகத்திற்கு அதிகாரிகளாக மாற்றி, அவர்களை நம்பி தமது பணியினை ஒப்படைத்தார். சிறிய காரியத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது நிச்சயமாகவே தேவன் நம்மை நம்பி பெரிய காரியங்களை ஒப்படைப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதிமொழிகள் 28:20) என்று வேதம் கூறுகிறதல்லவா?

.

'என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்' (எண்ணாகமம் 12:7) என்று தேவனே நம்மைப் போல ஒரு மனிதனைக் குறித்து சாட்சி கொடுக்கிறார் என்றால் அவர் எத்தனை உண்மையுள்ளவராக இருந்திருக்க வேண்டும்? தேவன் நம்மைக் குறித்து அப்படிப்பட்ட சாட்சிக் கொடுப்பாரா?

.

'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வாசகத்தை தனது தாரக மந்திரமாக கொண்டு திரு. உ. சகாயம் I.A.S. அவர்கள் தன் வேலையில் உண்மையாக இருந்தபடியால், தான் வேலை செய்த 23 வருடங்களில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் மனம் உடைந்துப் போகவில்லை, தொடர்ந்து அநீதிக்கு எதிராக போராடினார். திருட்டுத்தனமாக மணல் கொள்ளை அடிப்பதை கண்டு, அதற்கு எதிராக அவர் செயல்பட்டார். அதில் ஈடுபட்டிருந்தவர்கள் சும்மாவா இருந்திருப்பார்கள்? கொலை மிரட்டல் விட்டாலும் தன் வேலையை உண்மையாய் செய்வேன் என்று தொடர்ந்து எதிராக போரிட்டதால், தற்போது, அவரையே விசேஷித்த ஆபிசராக கோர்ட் நியமனம் செய்திருக்கிறது. அவர் தன் தேவனுக்கு முன்பாக தன் உண்மையை காத்துக் கொண்டார். கர்த்தரின் வருகையின் நாளில், 'அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்' எனறு கர்த்தர் அவரை கனப்படுத்துவார் (மத்தேயு 25:23).

.

எத்தனைப் பேர் நமக்கு எதிராக வந்தாலும், நமக்கு விரோதமாக போராடினாலும், நாம் நம் உண்மையில் நிலைத்திருப்போம். ஆவியின் கனியாகிய விசுவாசத்தை காத்துக் கொள்வோம். கர்;த்தர் சீக்கிரம் வருகிறார். அவர் அளிக்கும் பலன் அவரோடேக் கூட வருகிறது. ஆமென் அல்லேலூயா!

.

மரணம் என்னை சந்திக்கும்

நாள் வரையும் உண்மையாய்

உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே

உன்னத கிருபை தாருமே

.

கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால்

அநேகத்திற் கதிகாரியாய்

மாற்றுவேன் என்ற என் நேசரே

நீர் என்னையும் மாற்றிடுமே

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவராக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். மரண பரியந்தம் எந்த நிலையிலும் நாங்கள் உமக்கு உண்மையாக இருக்க கிருபை செய்யும். நீர் எங்களைக் குறித்து என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன், உண்மையுள்ளவள் என்று சாட்சிக் கொடுக்கத்தக்கதாக எங்கள் வாழ்வில் எல்லாவற்றிலும், உண்மையும் நேர்மையுமாக நடக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.