Friends Tamil Chat

புதன், 26 நவம்பர், 2014

26th November 2014 – வெள்ளியை போல புடமிடுகிறவர்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 நவம்பர் மாதம் 26-ம் தேதி - புதன் கிழமை
வெள்ளியை போல புடமிடுகிறவர்
.........

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். - (மல்கியா 3:3).

.

ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்தை குறித்து போதித்து கொண்டிருந்தபோது, அதில் பங்கெடுத்த சில சகோதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ளியை சுத்திகரிப்பான் என்றும், அந்த காரியம் எப்படி தேவனோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறது என்றும் பார்க்க தோன்றியது. அதன்படி ஒரு சகோதரி, தான் போய் தட்டானுடைய இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு, அடுத்த வாரம் அதை குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள போவதாக சொல்லி போனார்கள்.

.

அதன்படி, ஒரு வெள்ளி தட்டானை கண்டுபடித்து, அவர் எப்படி அதை சுத்திகரிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டு ஒரு நாளை குறித்து, அதன்படி அங்கு போனார்கள். தான் எதற்காக அப்படி கேட்கிறார்கள் என்பதை அந்த மனிதரிடம் எதுவும் சொல்லாமல், அவர் செய்வதை பார்க்க ஆரம்பித்தார்கள்.

.

அவர்கள் பார்த்து கொண்டிருந்தபோது, அந்த தட்டான் தன் கையிலிருந்த வெள்ளியை எடுத்து, நெருப்பில் காட்ட ஆரம்பித்தார். அப்போது அவர் சொன்னார், 'இந்த வெள்ளி, நெருப்பின் நடு மையத்தில் வைத்து, சூடு காட்டப்பட வேண்டும். ஏனென்றால், நடுவில்தான் நெருப்பின் அதிகபட்சம் சூடு இருக்கும், அப்படி காண்பித்தால்தான், வெள்ளியிலிருக்கிற அழுக்கு எல்லாம் மாறும்' என்று கூறினார்.

.

அப்போது அந்த சகோதரி 'அவர் உட்கார்ந்து' என்ற இடத்தை நினைவு கூர்ந்து, அந்த தட்டானிடம், "நீர் உட்கார்ந்து தான் அதை நெருப்பில் காட்ட வேண்டுமா" என்று கேட்டதற்கு, அவர், "ஆம், அந்த வெள்ளி நெருப்பில் காட்டி முடியும்வரை நான் இங்கு உடகார்ந்து தான் ஆக வேண்டும், மட்டுமல்ல என் கண்கள் அதன் மேலேயே இருக்க வேண்டும், ஒரு நிமிடம் அதிக நேரம் இந்த வெள்ளி நெருப்பில் இருந்தாலும், அது ஒன்றுமில்லாமற் சேதமாகி போய் விடும்" என்று கூறினார். அதை கேட்ட அந்த சகோதரி, சற்று நேரம் அமைதலாய் இருந்த பின், 'நீர் எப்படி இந்த வெள்ளி சுத்தமாயிற்று என்று அறிவீர்' என்று கேட்டதற்கு, அவர், 'அது மிகவும் சுலபம், என் சாயல் அதில் தெரியும்' என்று கூறினார்.

.

ஓ! எத்தனை உண்மை! நம் தேவன் எத்தனை அருமையானவர்! நீங்கள் ஒரு வேளை நெருப்பின் நடுவில் போடப்பட்ட வெள்ளியை போல இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்னால் தாங்க முடியாத வேதனைகளும் சோதனைகளும் என்னை சூழ இருக்கிறது என்று துவண்டு போயிருக்கிறீர்களா? தேவன், உங்களை உட்கார்ந்து, வெள்ளியை புடமிடுகிறது போல புடமிட்டு கொண்டிருக்கிறார். அவர் புடமிட்டு முடியுமட்டும் அவருடைய கண்கள் உங்கள் மேலேயே இருக்கிறது, மட்டுமல்ல, உங்கள் அசுத்தங்களும், குறைகளும் மாறி போய் அவருடைய சாயல் உங்களில் தெரியும்வரை நீங்கள் புடமிடப்படுகிறீர்கள். மனம் சோர்ந்து போக வேண்டாம், என்னால் தாங்க முடியாத அளவு பாடுகள் இருக்கிறதே என்று மனம் துவள வேண்டாம். நெருப்பின் நடு மையத்தில் காட்டப்பட்ட வெள்ளி எப்படி தூய்மையாய் மாறுகிறதோ அப்படி நீங்களும் தூய்மையாய் மாறுவீர்கள், 'அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்'.

.

ஆம் கர்த்தர் நம்மை ஆசாரியர்களாகவும் இராஜாக்களாகவும் அழைத்திருக்கிறபடியால், நாம் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தருக்கு, சுத்தமான இருதயத்திலிருந்து, துதிபலிகளை காணிக்கையாய் அவருக்கு செலுத்தும்படியாகவும், அவர் நம்மை புடமிட்டு கொண்டிருக்கிறார். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள். அவர் புடமிட்டு முடியும்போது, நாம் மிகவும் தூய்மையை அவருக்கே சொந்தமானவர்களாக இருப்போம். ஆமென் அல்லேலூயா!

.

முட்களுக்குள் மலர்கின்றதோர்

மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்

என்னையுமே தம் சாயலாய்

என்றென்றும் உருவாக்குவார்

.

கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்

கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்

இரட்டிப்பான பங்கை பெற

இரட்சகர் அழைத்திடுவார்

.

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்

தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, நாங்கள் சுத்தமாய் மாற வேண்டும் என்பதற்காக, நாங்கள் உம்முடையவர்களாக வேண்டும் என்பதற்காக சோதனைகளையும் பாடுகளையும் எங்களுக்கு அனுமதிக்கிறவரே உமக்கு நன்றி, நீர் சோதித்து முடித்த பிறகு நாங்கள் சுத்தமாய் விளங்குவோமே, அதற்காக உமக்கு ஸ்தோத்திரம், நாங்கள் தாங்க முடியாத அளவு சோதிக்காமல், எங்கள் மேல் உமது கண்களை வைத்து, சரியான நேரத்தில் எங்களை விடுவித்து பாதுகாக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் அவைகளை தாங்கி கொள்ள எங்களை பெலப்படுத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.