Friends Tamil Chat

திங்கள், 22 ஏப்ரல், 2013

22nd April 2013 - வெட்கப்பட வேண்டாம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஏப்ரல் மாதம் 22-ம் தேதி – திங்கட்கிழமை
வெட்கப்பட வேண்டாம்
....

ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி. அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன். ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். - (2 தீமோத்தேயு 1:8,12)

.
மேரி அன்னா மார்ட்டின் என்னும் சிறுமி, தன் பெற்றோருக்கு ஒரே மகளாக வளர்ந்தவள். அவள் வாழ்ந்த நாட்களில் ஐரோப்பிய நாடுகளில் மாபெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. அவளுடைய தகப்பன் சொந்தமாக ஒரு பேக்கரி கடை வைத்திருந்தார். அவர் எப்போதும் சந்தோஷமாக காணப்பட்டார். அவருடைய மனைவியும் எப்போதும் பாடி கொண்டு அவர்கள் ஒரு சந்தோஷமான குடும்பமாக வாழ்ந்தனர். பஞ்சத்தின் காரணமாக அவர் தன் பேக்கரி கடையை இழக்க வேண்டியிருந்தது.

.

அதனால் அவர் வேறு எந்த வேலையும் செய்ய ஆயத்தமாயிருந்தார். எப்படியாவது தன் குடும்பத்திற்கு உணவை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் வேலையை தேடி கொண்டிருந்தார். அவருக்கு பெரிய பெரிய வீடுகளை சுத்தம் செய்து காவல் காக்கும் வேலை கிடைத்தது. ஆனால் அதினால் அவர் மனம் சோர்ந்து போகாமல், பாட்டு பாடியபடியே தன் வேலைளை ஒழுங்காக செய்து வந்தார். மேரி அன்னா மார்ட்டினுக்கு அவர் எங்கு வேலை செய்கிறார் என்று தெரியாமல் இருந்தது. அவள் தனது 13 ஆவது வயதில் உயர்நிலை பள்ளியில் சேர்ந்தாள். அவளுக்கென்று ஒரு நண்பர் கூட்டம் இருந்தது. ஒரு நாள் ஒரு பள்ளி மாணவி தன் உணவை தரையில் கொட்டி விட்டாள். அதினால் அவளுடைய ஆசிரியர் அவளுடைய தகப்பனின் பெயரை உரக்க சொல்லி கூப்பிட்டார். அப்போது தான் அவளுக்கு தெரிந்தது, தன் தகப்பன் அந்த பள்ளியில் சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்கிறார் என்று. அப்போது அவளுடைய தந்தை சுத்திகரிக்கும் பொருட்களை எடுத்து கொண்டு வந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

.

அவளுடைய தோழி ஒருத்தி அவளிடம், 'அவருடைய பெயரும், உன்னுடைய பெயரும் ஒன்றாக இருக்கிறதே, அவரை உனக்கு தெரியுமா' என்று கேட்டாள். அப்போது அவள் தன் தலையை உயர்த்தி, சுத்தம் செய்யும் தன் தகப்பனை பார்த்து விட்டு, 'இவரை நான் முன்பின் பார்த்ததே இல்லை' என்று கூறினாள். அவளுடைய தகப்பானாருக்கு அவள் சொன்னது கேட்கவில்லை. அதை சொல்லிவிட்டப்பின், அவளுக்கு தன் மேலேயே ஒரு வெறுப்பு ஏற்பட்டது. சே, என்ன சொல்லி விட்டோம் என்று. பின், தன் தகப்பனின் தலையை தடவி, அவரோடு மிகவும் அன்பு கூர்ந்தவள் போல நடந்து கொண்டாலும், தன் தோழியிடம் அவள் கூறிய காரியத்தை அவளால் மறக்க முடியவில்லை. என்ன செய்தாலும், அவளுக்கு தன் தகப்பனை மறுதலித்த காரியமே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

.

வருடங்கள் கழிந்தது. அவளுடைய தகப்பனார் மிகவும் உடல்நிலை குறைவால் படுக்கையில் இருந்தார். அவரருகே அமர்ந்திருந்த அவள், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அதை கவனித்த அவளுடைய தாயார், ஏன் என்ன நடந்தது என்று கேட்டார்கள். அவள் நடந்த காரியத்தை கூறிவிட்டு, 'கடந்த 15 வருடங்களாக என் மனதை இந்த காரியம் அலைகழித்து கொண்டிருக்கிறது, நான் கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டாலும், என் மனம் என்னை குற்றவாளியாக வாதித்து கொண்டே இருக்கிறது' என்று கதறினாள்.

.

அவளுடைய தாயார், அவளை கட்டியணைத்து கொண்டு, ' உன் தகப்பனாருக்கு தெரியும், நீ அவரை நேசிக்கிறாய் என்று. நீ அவரை தெரியாது என்று சொன்னதை அவர் அன்று கேட்டிருந்தாலும், அவர் உன்னை நிச்சயமாய் நேசித்திருப்பார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறைய கொண்டு செல்லும்போது, சீமோன் பேதுரு அவரை தெரியவே தெரியாது என்று சாதித்ததை அறிந்த போதும், அவர் அவனை நேசித்தாரே' என்று ஆறுதல்படுத்தினார்கள். அதை கேட்ட அன்னாவின் இருதயம் அமைதியானது.

.

நாமும் கூட அநேக வேளைகளில் நம்முடைய செய்கைகளின் மூலம், நம்முடைய பேச்சுகளின் மூலம், நம்முடைய நடத்தையின் மூலம், கர்த்தரை மறுதலித்து கொண்டுதான் இருக்கிறோம். நாம் நம்மையே வெறுக்கும் அளவு, வெட்கப்படும் அளவு தேவனுக்கு விரோதமாக செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

.

அப்போஸ்தலனாகிய பவுல், இளம் பிராயத்தில் போதகராக இருந்த தீமோத்தேயு, தனக்கு வந்த உபத்திரவங்களினாலோ, சோதனைகளினாலோ கர்த்தரை குறித்த சாட்சியையோ, சுவிசேஷத்தையோ மறுதலிக்காமல், வெட்கப்படாமல் இருக்கும்படிக்கு ஆலோசனையை கூறுகிறார். பவுல் நம்முடைய வாழ்க்கையில் எந்த காரணத்தை முன்னிட்டும் நாம் நம் தேவனை குறித்தோ, சுவிசேஷத்தை குறித்தோ வெட்கப்படகூடாது என்று கற்று கொடுத்தார்.

.

ஒருவேளை விசுவாசிகளாகிய நாமும் கூட நாம் இருக்கிற சூழ்நிலையின் நிமித்தமாக நாம் விசுவாசிகள் என்பது மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்தால் நல்லது என்று நினைத்து கொண்டிருக்கிறோமா, நாம் செய்த பாவமான காரியத்தின் மூலம், அது நம்மை வாதித்து கொண்டிருப்பதால், கர்த்தரோடு ஐக்கியம் கொள்ளாமல் இருக்கிறோமா? அல்லது நம்முடைய வேதம் மற்றவர்களின் வேதத்தை விட வேறுபட்டு, அவர்கள் அதிகமான பேர்களாயிருப்பதால் அதை குறித்து வெளியே சொல்லாமல் இருக்கிறோமா? இயேசுகிறிஸ்துவை ஏற்று கொண்டால் தான் இரட்சிப்பு உண்டு என்பதை மற்றவர்களுக்கு வெட்கப்பட்டு கூறாமல் இருக்கிறோமா? எது எப்படி இருந்தாலும், பவுல் சொன்னதை போல 'ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி' என்று அவருக்காக எதையும் செய்யும்படியாகவும், தீங்கநுபவிக்கும்படியாகவும், அவரை குறித்து வெட்கப்படாமல், அவருக்கு எழும்பி பிரகாசிக்க வேண்டும். அவர் வெட்கப்படாமல், நமக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்தாரே, அவருக்கு நாம் எதை செய்திருக்கிறோம்? வெட்கப்படாதபடி, அவருக்காக எழும்பி நிற்போமா? அப்படி செய்ய தேவன் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

.

நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்

பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூறுவேன்

...

சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில்

பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்

எந்த நேரமும் எனதுள்ளத்திலும்

பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் எந்த சூழ்நிலையிலும், உம்மை குறித்து வெட்கப்படாதபடி, உம்முடைய சுவிசேஷத்தை தைரியமாக எடுத்து கூற எங்களை பெலப்படுத்தும். உம்மோடு உள்ள ஐக்கியத்தில் எந்த குறையும் இல்லாமல், தேவனுக்கு சாட்சியாக என்றும் வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

.

..

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.