Friends Tamil Chat

ஞாயிறு, 10 மார்ச், 2013

10th March 2013 - கர்த்தர் கொடுத்த பந்தம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 10-ம் தேதி – ஞாயிற்றுக்கிழமை
கர்த்தர் கொடுத்த பந்தம்
...

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். - (கொலோசேயர் 3:13-14).

.
சென்னையிலுள்ள குடும்ப நீதி மன்றங்களில் சுமார் 6000க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தீர்வு அளிக்கப்படாமல நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. சென்னையில் மாத்திரம் தினமும் சுமார் 30 வழக்குகள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இவ்வழக்குகள் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் முடிப்பது என்பது இமாலய சாதனையாக உள்ளது. இதனால் கூடுதல் நீதி மன்றங்கள் அமைக்க வேண்டிய தேவையில் தமிழ்நாடு உள்ளது.

.

கணவன் மனைவி உறவில் ஏன் இந்த பிரச்சனை என்பது குறித்து ஆராய்ந்தபோது ஒட்டு மொத்தமாக வெளிப்படும் ஒரு காரணம் என்னவெனில் தன்னல நோக்கமுள்ள அகங்காரம், அதாவது நான் என்ற எண்ணமே என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். மனைவி அதிகம் படித்திருந்தால், அதிக சமபளம் வாங்கினால் கணவனுக்கு பிடிப்பதில்லை. மனரீதியான ஆலோசனை மையங்கள் இவர்களுக்கு சொன்னாலும் ஆலோசனைகள் எடுபடுவதில்லை. கணவன், மனைவி உறவு குறித்த வழக்குகளை மிகவும் கருத்தாய் மென்மையாய் செய்ய வேண்டும். மற்ற வழக்குகளைப் போல கருதக்கூடாது என மன நல நிபுணர்கள் கூறுகின்னறனர்.

.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும், அவர்களுடைய தாய் அவர்களை பார்க்க வரும் போது, மிகவும் ஐக்கியமுள்ளவர்கள் போல நடிப்பார்கள். அந்த தாய், என் மகள் நன்றாக இருக்கிறாள் என்று சந்தோஷத்துடன் செல்வார்கள். அவர்கள் அந்த பக்கம் போனவுடன் கணவன் அந்த மனைவியை கண்மண் தெரியாமல் அடிப்பான். அதில் காயம் ஏற்பட்டால், நான் தவறி கீழே விழுந்து விட்டேன். அதனால் காயம் ஏற்பட்டது என்று அந்த மகள் பொய் சொல்லுவாள். மற்றும் அந்த மனிதன் குடிப்பான், பிள்ளைகளை அடிப்பான். அவள் மிகவும் மெலிந்து கொண்டே போனாள். கேட்டால், நான் டயட்டிங்கில் இருக்கிறேன் என்று பொய் சொல்வாள். இப்படி எத்தனை நாட்கள் போய் கொண்டிருக்க முடியும்? ஒரு நாள் அது வெளிபட்டு, விவாகரத்து ஏற்பட்டது.

.

இந்நாட்களில் கணவன் மனைவியிடம் அன்பு குறைந்து விரிசல்கள்தான் அதிகமாய் காணப்படுகின்றது. நமது இந்தியாவின் கலாச்சாரமாகிய கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று போதித்த காலம் மாறிவிட்டது. விவாகரத்துக்கள் இந்தியாவிலும் அதிகமாகி விட்டன. அது மட்டுமல்லாமல், கணவன் மனைவி உறவில் கசப்புகள் முற்றி விவாகரத்து கேட்டு நீதி மன்றத்திற்கு செல்லவா வேண்டாமா என்றும் உறவினர் நடுவே அவமானமாகுமே என்றும் அமைதியோடு சகித்து கொண்டிருக்கிற குடும்பங்களும் உண்டு. கணவரின், மாமியாரின் கொடுமையான வார்த்தைகளை கேட்டுக்கொண்டு உள்ளத்திலே குமுறிக் கொண்டு வெளியே அமைதியாக சென்றுக் கொண்டிருக்கிற மனைவிமாரும் உண்டு. விடுதலை பெற வேண்டும் என்று ஏக்கத்தோடு வெளியே யாருக்கும் சொல்ல முடியாமல் தவிக்கும் ஏராளமான கணவரும் மனைவிமாரும் உண்டு. அவர்களுக்காக ஜெபிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? கர்த்தர்தான் அவர்களுடைய அந்த கொடிய நிலைமைகளை மாற்ற முடியும்!

.

இந்நாட்களில், காதல் திருமணங்கள் அதிகரித்து விட்டிருக்கிற நிலையில், அதற்கு சினிமாக்களும் காரணம் என்றே நாம் சொல்ல முடியும். பெற்றோர் பார்த்து வைக்கிற திருமணங்களிலேயே வரதட்சணை காரணமாக பிரச்சனைகள் வரும்போது, காதல்திருமணங்களில் பிரச்சனைகளுக்கு சொல்லவா வேண்டும்? அது ஆரம்பத்தில் மிகவும் இனிமையாக தோன்றும். ஆனால் காலம் செல்லும்போது அந்த கவர்ச்சி போய், அவர்களுடைய சிறிய சிறிய தவறான காரியங்களும் பெரியவைகளாய் தோன்றும். எடுத்ததற்கும் தொடுத்ததற்கும் சண்டை, இதுதான் இன்றைய குடும்பங்களின் நிலைமை. கிறிஸ்தவ குடும்பங்களும் இதற்கு விலக்கல்ல. திருமணம் செய்ய முன்வரும்போது வேதத்திலுள்ள காரியங்களை மனதில் கொண்டு செய்ய வேண்டும். திருமணத்தில் இணையப் போகிற இருவரும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? (2 கொரிந்தியர் 6:14) இப்படி செய்வதினால் ஏகப்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம். அவிசுவாசியை மணந்த ஒரு சகோதரியின் வாழ்வில் காணப்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. சுதந்தரமாக தேவனை துதிக்கவும் வீட்டில் தடை! ஆகவே காதல் திருமணங்களை தவிர்ப்பது நல்லது. ஆரம்பத்தில் தோன்றும், 'நான் அவரை எப்படியாவது மாற்றி விடுவேன்' என்று, ஆனால் கல்யாணம் என்று ஆகிவிடும்போது அதுவரை சொன்னதற்கெல்லாம் வளைந்த மனிதர், இப்போது தான் சொன்னதே சட்டம் என்று மாறி விடுவார். அப்போது அதிலிருந்து வெளிவர முடியாத நிலைமை ஏற்படும். ஆகவே அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக என்ற வேத வசனத்தை கைகொண்டே ஆக வேண்டும்.

.

கணவன் மனைவி இருவரும் பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இருவரும் வேலை வேலை என்று ஓடிவிட்டு சாயங்காலம் களைப்பாக வந்து சாப்பாடு செய்து சாப்பிட்டு தூங்குவதற்குதான சரியாக நேரம் இருக்கும், பின் பிள்ளைகளுக்கும் கணவனுக்கும், மனைவிக்கும் ஏது நேரம் ஒதுக்குவது? எப்படியாவது ஒரு அரைமணிநேரமாவது ஒதுக்கி இருவரும் அமர்ந்து குடும்ப காரியங்களை குறித்து, பேச வேண்டும். அதன் மூலம் எத்தனையோ சச்சரவுகளை தவிர்க்கலாம். ஆனால் சிலர் வீட்டில் பேச ஆரம்பித்தாலே சண்டைதான். அப்படி இருக்காமல், அமைதியாக பேசி, குடும்பத்தோடே ஜெபம் செய்துவிட்டு சாந்தத்தோடே படுக்கைக்கு செல்ல வேண்டும்.

.

சிலவேளைகளில், நான் ஏன் இவரை அல்லது இவளை திருமணம் செய்தேன்? என்று நம்மில் அநேகர் நொந்து கொள்கிறோம். தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் (ஆதியாகமம் 2:18) என்றுதான் ஆதாமுக்கு ஏவாளை உண்டாக்கினார். ஆகவே உங்களுடைய கணவர்தான் உங்களுக்கு ஏற்ற துணை, உங்கள் மனைவிதான் உங்களுக்கு ஏற்ற துணை. இது கர்த்தர் ஏற்படுத்திக் கொடுத்த பந்தம். ஆகவே கர்த்தர் இணைத்ததை மனிதன் அல்லது மனுஷி பிரிக்காதிருக்கக்கடவர்கள்.

.

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள் என்ற கர்த்தருடைய வசனத்தின்படி, ஒருவரையொருவர் மன்னித்து, அன்பை அடித்தளமாக வைத்து குடும்பத்தை கட்டி எழுப்புவோம். கர்த்தர் மூன்றாவது நபராக அந்த குடும்பத்தில் இருந்து, முப்புரி நூல் அறாது என்ற வசனத்தின்படி, கணவனும் மனைவியும், தேவனுமாக ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக, தேவன் தங்கியிருக்கிற குடும்பமாக, அவரே அந்த குடும்பத்தின் தலைவராக இருந்து, தாங்கி நடத்துகிற குடும்பமாக உங்கள் குடும்பம் அமைய கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துகிறோம். அந்த ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்தில் என்றென்றும் நிலைத்திருப்பதாக!

.

இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே

இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே

இயேசு வந்த வீட்டிலே சந்தோஷமே

சந்தோஷம் எப்போதும்

...

இயேசு வந்த வீட்டிலே சண்டை இல்லையே

இயேசு வந்த வீட்டிலே கவலை இல்லையே

இயேசு வந்த வீட்டிலே துன்பம் இல்லையே

.

ஜெபம்

எங்களை நேசிக்கிற நல்ல தகப்னே, உம்முடைய மட்டில்லாத கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்று நீர் எங்களுக்கு கொடுத்த எங்கள் கணவர் மற்றும் மனைவிக்காக உம்மை துதிக்கிறோம். நீர் ஏற்படுத்தி கொடுத்த குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க அவற்றை நிவிர்த்தி செய்ய ஒவ்வொருவருக்கும் ஞானத்தை தருவீராக. நரகத்தை போன்று இருக்கும் சில குடும்பங்களில், உம்முடைய சமாதானத்தையும் சந்தோஷத்தையும் ஊற்றுவீராக. கணவன் மனைவிக்குள் அன்பை ஊற்றுவீராக. ஒருவரையொருவர் நேசித்து உமக்கென்று வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.