நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான். - (ஆதியாகமம் 6:22). . பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர். இரண்டு நாள் அவர் சொன்ன வேலையை செய்தனர். மறுநாளோ ஆட்கள் வருவதை நிறுத்தி கொண்டனர். இறுதியில் ஒரு வாலிபன் வேலைக்கு வந்தான் அவனிடம் அந்த செல்வந்தர் அங்கு கிடந்த ஜல்லி கற்களை எடுத்து சற்று தொலைவில் போய் கொட்ட சொன்னார். மறுநாள் அதை அள்ளி ஏற்கனவே இருந்த இடத்திற்கு வந்து போட சொன்னார். அவ்வாறு ஒரு வாரம் முழுவதும் நடைபெற்றது. ஞாயிறு உனக்கு விடுமுறை என்றார். ஒரு வாரத்திற்கான கூலியையும் கையில் கொடுத்தார். . திங்கட்கிழமை அவர் சற்றும் அந்த வாலிபனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவ்வாலிபனோ திங்கட்கிழமை காலை சொன்ன நேரத்திற்கு வேலைக்கு வந்து விட்டான். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியுமின்றி எஜமானின் கட்டளைக்கு அப்படியே உண்மையாய் கீழ்ப்படிந்த வாலிபனுக்கு அவன் படிப்பிற்கும் திறமைக்கும் ஏற்ற உயர்ந்த வேலையை கொடுத்தார். பல இலட்ச ரூபாய் கணக்கு வழக்குகளை பார்க்கவும், முக்கியமான பொறுப்புகளை அவனிடம் கொடுத்து இரகசியம் காக்கவும அவனை நியமித்தார். அவன் உயிருள்ள வரை அவருடைய குடும்பத்தாருக்கு மெய்காப்பாளானாக இருந்தான். . ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே அரைகுறையான கீழ்ப்படிதல் இருக்குமானால் அது ஆபத்தானது. பூமியில் பாவம் பெருகினதினால் தேவன் இவ்வுலகை அழிக்க சித்தமாகி நோவா என்ற தேவ மனிதனுடன் பேசுகிறார், "தொடர் மழை பெய்யபோகிறது, அந்த அழிவிலிருந்து உன்னையும் உன் குடும்பத்தையும் காத்துகொள்ள ஒரு பேழையை செய்" என்று. மழை அதற்குமுன் பூமியிலே பெய்ததா என்பது தெரியவில்லை. ஆனாலும் அது என்ன? ஏன், எதற்கு என எந்த கேள்வியும் கேட்காமல் நோவா கர்த்தர் சொன்ன அளவின்படியே ஒரு இஞ்ச் கூட்டியோ குறைத்தோ கட்டாமல் அவர் சொற்படி கீழ்ப்படிந்து பேழையை செய்தார். அழிவிலிருந்து அவர் குடும்பம் காக்கப்பட்டது. . அடுத்ததாக ஆபிரகாமிற்கு 100 வயதில் பிறந்த பிள்ளையை மோரியா என்ற மலைக்கு கொண்டு போய் தேவன் பலியிட சொன்னார். அப்படியே கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்த ஆபிரகாம் தன் மனைவியிடம் கூட சொல்லாமல், எங்கே கூறினால் அழுது தன்னை தடுத்து விடுவாளோ என்று எண்ணி, வேலைக்காரரில் இரண்டு பேரை கூட்டி கொண்டு அதிகாலமே கிளம்பி விடுகிறார், கேள்வி கேட்காத கீழ்ப்படிதலை கண்ட ஆண்டவர் அவரை உலகம் முழுவதற்கும் ஆசீர்வாதமாக மாற்றினார். . பிரியமானவர்களே, நமது தனிப்பட்ட அந்தரங்க வாழ்வில் நாம் தேவனுக்கு கீழ்ப்படிகிறோமா? வேதத்தில் அவர் கட்டளையிட்ட காரியம் ஒவ்வொன்றிலும் அதை நிறைவேற்ற பிரயாசப்படுகிறோமா? கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தை செய்ய விரும்பும் விசுவாசிகளையே தேவன் தேடி கொண்டிருக்கிறார். அப்படி கீழ்ப்படியும்போது அநேகருக்கு பிரயோஜனமுள்ள ஜீவ ஊற்றாக நம் ஒவ்வொருவரையும் அவர் நிச்சயமாகவே மாற்ற வல்லவராக இருக்கிறார். ஒருவேளை ஆலயத்தில் ஒரு சிறு வேலையை நீங்கள் செய்யும்படி தேவன் உங்களை அழைத்திருக்கலாம், அதில் நீங்கள் கேள்வி கேட்காமல், எனக்கு இருக்கிற படிப்பு என்ன, தாலந்து என்ன, எனக்கா இந்த வேலை என்று கேள்வி கேட்காமல், அந்த வேலையில் உத்தமமாக இருக்கும்போது, உங்கள் உண்மையை காண்கின்ற தேவன் உங்களை அநேகத்திற்கு பொறுப்புள்ளவராக மாற்றுவார். சிறு காரியத்திலேயே முறுமுறுத்து கொண்டிருந்தால், யார் நம்பி ஒரு வேலையை கொடுக்க முடியும்? தேவன் கட்டளையிட்டபடியே நோவா செய்து முடித்தார். ஆபிரகாம் செய்து முடித்தார் மோசே செய்து முடித்தார். அப்படி செய்தவர்களின் பெயர் தாழ்ந்து போயிற்றா? இல்லை, தேவன் அவர்களை அவர்களுடைய எண்ணத்திற்கும் மேலாக உயர்த்தினார். நாமும் அவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து கேள்வி கேட்காமல், அவருடைய சித்தத்தை நிறைவேற்றினால், நிச்சயமாகவே நம்மையும் அவர் உயர்த்துவார், ஆமென் அல்லேலூயா! . சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே - இயேசு சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே . காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது – கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே – 2 . கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவருக்குச் சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும் கீழ்படியாவிட்டால் சாபம் பெருகும் . |