Friends Tamil Chat

புதன், 29 அக்டோபர், 2014

29th October 2014 - ஆவியின் கனியோ...... சந்தோஷம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 29-ம் தேதி - புதன் கிழமை
ஆவியின் கனியோ.. சந்தோஷம்
...

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23)

.
இரண்டாம் சுளை சந்தோஷம்:

சந்தோஷம் என்றதும், நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை நாம் நினைக்கிறோம். உலகத்தில் சந்தோஷம் தருபவை எத்தனையோ இருக்கின்றன. பூக்களை பார்க்கும்போது, சிறு குழந்தைகள் நடப்பதை, பேசுவதை பார்க்கும்போது, சூரிய உதயத்தையும், முழு நிலாவையும் பார்க்கும்போது என்று நம் மனம் பூரிப்படைகிறது. நம் பிள்ளைகள் நல்ல மார்க் வாங்கி வரும்போது ஒரு சந்தோஷம், நாம் செய்த ஒரு காரியத்தை மற்றவர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்... ஆனால் எதுவும் நிரந்தரமானது இல்லை.

.

இத்தனை சந்தோஷங்கள் இருந்தும் வாழ்க்கை சில வேளைகளில் நமக்கு தருவது, வெறுமையும், விரக்தியும், கவலையும், கண்ணீரும்தான். உலகத்திலேயே எப்போதும் சந்தோஷமாயிருக்கிற மனிதன் ஒருவனும் இல்லை. ஒருவேளை மனநிலை சரியில்லாதிருந்தால் அவன் அந்த நிலைமையில் இருக்கக் கூடும்.

.

வேதத்திலும் நாம் சந்தோஷத்தைக் குறித்து அநேக வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம், களிகூருதல் என்று நான்கு வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' (சங்கீதம் 68:3). நீதிமான்கள்தான் இந்த நான்கு வகையான சந்தோஷமும் அடைவார்கள் என்று வேதம் கூறுகிறது.

.

'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்' (பிலிப்பியர் 4:4) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். அவர் எந்த நிலையிலிருந்து அப்படி கூறுகிறார் என்றால் எல்லாம் நன்றாக, மனரம்மியமாக இருந்தபோதல்ல, சிறையில் இருந்துக் கொண்டுதான் இந்த கடிதத்தை அவர் எழுதினார். அவர் சிறையில் இருந்தபோதும், அவர் மனம் சோர்ந்துப் போய் உட்கார்ந்து விடவில்லை, 'பாருங்கள் நான் கர்த்தருக்காக பாடுகள் பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறையில் வாடிக் கொண்டிருக்கிறேன்' என்று முறுமுறுத்துக் கொண்டு கடிதத்தை எழுதவில்லை, மாறாக வெளியில் இருக்கும் மற்றவர்களை சிறையில் இருந்துக் கொண்டே உற்சாகப்படுத்தினார். கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று உற்சாகப்படுத்தினார். என்ன ஒரு அற்புதமான கர்த்தருடைய அப்போஸ்தலன் அவர்!

.

பிரியமானவர்களே, நம் வாழ்வில் துக்கமான, துயரமான, தாங்க முடியாத பாரங்கள் அழுத்தும்போது, கண்ணீர் வடிப்பதும், இதிலிருந்து என்னை விடுவிப்பவர் யார் என்று கதறுவதும் சாதாரண மனிதனுடைய நிலைமையாகும். ஆனால் கர்த்தருக்குள் இருப்பவர்கள் அவர் கொடுக்கிற, ஆவியானவரால் உண்டாகிற சந்தோஷத்தால் நிறைந்தவர்களாக, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும், அவற்றை தாங்கக்கூடிய, அவற்றால் சோர்ந்துப் போய் விடாமல், கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, சந்தோஷமாக இருக்க முடியும்.

.

'அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 16:23-25). இந்த வசனங்களை பார்க்கும்போது, பவுலும் சீலாவும் பிசாசு பிடித்திருந்த ஒரு பெண்ணை சுகப்படுத்தினதால் அவள் மூலம் அவளுடைய எஜமானர்களுக்கு கிடைத்த வருமானம் போய் விட்டது என்று, அவர்கள், பவுல், சீலாவின்மேல் பொய்யாய் குற்றம் சாட்டி, அநேக அடிகளை அடித்து, சிறையில் அதுவும் உள்ளே இருக்கும் இருண்ட இடத்தில் காவலில் வைத்து, கால்களை தொழுமரத்தில் கட்டி வைத்திருந்தார்கள்.

.

இந்த நிலையிலும், அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள் என்று வேதம் கூறுகிறது. யார் பாடலை பாட முடியும்? சோகமாய், உலகத்தை வெறுத்தவர்கள் யாரும் எனக்கில்லை என்று அழுது வடிந்து பாடுவார்கள். இல்லையென்றால் சந்தோஷமாய் இருப்பவர்கள் பாடுவார்கள். பவுலும் சீலாவும் அழுது வடிகிற பாடலை அல்ல, தேவனை துதித்துப் பாடினார்கள் என்று பார்க்கிறோம். அப்படியென்றால் ஆவியானவர் கொடுக்கிற, எந்த சூழ்நிலையிலும் மாறாத சந்தோஷத்தினால் நிறைந்தவர்களாக அவர்கள் உள்ளம் நிறைந்திருந்தபடியால் அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள். அல்லேலூயா!

.

நம்மைப் போல மனிதனாக இருந்த பவுலினால் பயங்கரமான சூழ்நிலையிலும் சந்தோஷமாயிருக்க முடியுமென்றால், அவருக்குள் இருந்த ஆவியானவர் அவரை தேற்றி, திடப்படுத்தி, சந்தோஷத்தினால் நிறைத்திருந்தார். நாமும் நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், போராட்டங்களில் சோர்ந்துப் போகாமல், சந்தோஷமாய் அவற்றை சந்தித்து, கர்த்தருக்குள் களிகூருவோமா! ஆவியின் இரண்டாம் சுளையாகிய சந்தோஷத்தினால் நாம் எப்போதும் நிரம்பியிருப்போமா? 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' ஆமென் அல்லேலூயா!

.

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க

உயர்வானாலும் தாழ்வானாலும்

சர்வ வல்ல தேவன் நம்மோடிருப்பதால்

.

நெருக்கத்தின் நேரத்திலும்

கண்ணீரின் பாதையிலும்

நம்மை காண்கின்ற தேவன்

நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

.

என்னதான் நேர்ந்தாலும்

சோர்ந்துப் போகாதீங்க

நம்மை அழைத்த தேவன்

கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வாழ்க்கையில் நெருக்கத்தின் நேரத்திலும், கண்ணீரின் பாதையிலும் நீர் எங்களோடிருப்பதால், எதைக் குறித்தும் கவலைப்படாமல், எப்போதும் சந்தோஷமாயிருக்க கிருபை செய்யும். துன்ப நேரத்தில் முறுமுறுக்கிறவர்களாக இல்லாமல், உம்முடைய சித்தம் இல்லாமல் எதுவும் நடக்காது என்கிற விசுவாசத்தோடு உம்மைப் பற்றிக் கொண்டு, சந்தோஷமாய் கடந்து செல்ல உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.