Friends Tamil Chat

புதன், 1 அக்டோபர், 2014

1st October 2014 – சுயத்தை வெறுத்தல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 01-ம் தேதி - புதன் கிழமை
சுயத்தை வெறுத்தல்
.................

அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். - ரோமர் 6:11.

.

விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லரிடம் ஒருமுறை வாலிபன் ஒருவன் சென்று 'உங்கள் ஊழிய வெற்றிக்கு காரணம் என்ன' என்று கேட்டான். அதற்கு அவர் 'கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன். என் சுயம் மரித்தது. அதுவே என் ஊழிய வெற்றிக்கு காரணம்' என்றார். அப்போது அந்த வாலிபன் 'ஐயா சுயத்திற்கு மரிப்பது என்றால் என்ன' என்று கேட்டான். அதற்கு அவர், 'தம்பி நீ கல்லறைக்கு போய் அங்கே எழுதப்பட்டிருக்கும் மரித்தவர்களின் பெயரை வாசித்து, அவர்களை உன மனம் போல வாய்க்கு வந்தபடிபெயல்லாம் பழித்து பேசு, பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவர்களின் பெயர்களை சொல்லி புகழ்ந்து பேசு. பிறகு என்னிடம் வா' என்று சொல்லி அனுப்பினார்.

.

அப்படியே இந்த வாலிபன் கல்லறைக்கு சென்று அவர்களை பழித்தும் புகழ்ந்தும் பேசி விட்டு திரும்பி வந்தான். முல்லர் கேட்டார், 'நீ கடினமாய் பேசினபோது, கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் உன் மேல் சீறினார்களா' 'இல்லை ஒரு பதிலும் பேசவில்லை' என்றான் 'நீ புகழ்ந்த போது பெருமையடைந்து உன்னை பாராட்டினார்களா' என்றார். 'இல்லை ஒன்றும் பேசவில்லை' என்றான். 'சுயம் மரித்தல் என்பது அதுதான். மற்றவர்களுடைய புகழுரை நம்மை பெருமையடையவும் செய்ய கூடாது, கடுஞ்சொற்கள் நம்மை பாதிக்கவும் கூடாது. இந்த மனநிலையை சிலுவையில் தம் ஜீவனை தந்த கிறிஸ்துவின் உதவியோடு பெற்று கொள்வது தான் சுயம் மரித்தல்' என்று முல்லர் கூறினார்.

.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சுயம் நம்மை விட்டு நீங்கி, கிறிஸ்து நமக்குள் வாழ்கிற அனுபவம் ஆகும். அதாவது பழைய ஜென்ம சுபாவங்கள் நம்மிடமிருந்து வெளிப்படாமல், கிறிஸ்துவின் சுபாவங்கள் வெளிப்பட வேண்டும். எத்தனைதான் ஆவிக்குரியவர் என்று எண்ணப்பட்டாலும் ஒருவருடைய ஜென்ம சுபாவங்கள் மாறுவது மிகவும் கடினமாகவே காணப்படுகிறது. வெளிப்படும் சுபாவத்தின் அடிப்படையில் நம்மிடம் இன்னும் சுயம் வாழ்கிறதா அல்லது கிறிஸ்து வாழ்கிறாரா என அறிந்து கொள்ளலாம்.

.

நம்மில் பலர் ஆவிக்குரியவர்களாக பக்தி வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் குடும்பத்தில், சமுதாயத்தில், வேலை பார்க்கும் இடத்தில் நமக்கு தர வேண்டிய முக்கியத்துவமும் மரியாதையும் சற்று குறைந்து விட்டால் தாங்கி கொள்ள முடிவதில்லை. நம்முடைய நற்செயல்கள் கண்டு கொள்ளப்படாமல் போகும்போதும், நம்முடைய ஆலோசனை ஏற்று கொள்ளப்படாமற் போகும்போதும், நாம் அதிகமாய் சோர்ந்துவிடுகிறோம். அதுப்போல நாம் பாராட்டப்படும்போதும், ஒரு கூட்ட ஜனங்களுக்கு முன் கௌரவிக்கப்படும் போதும் கிறிஸ்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுகிறார். நான் என்ற எண்ணமே மேலோங்கி பெருமை தலை தூக்குகிறது. பிறரால் இகழப்படும்போது, சோர்ந்து விடுவதும், பாராட்டப்படும்போது, பெருமை அடைவதும் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவனுக்கு உகந்ததல்ல. தன்னை கிறிஸ்துவின் சிலுவையின் முன் ஜீவ பலியாய் ஒப்புக்கொடுத்தவரின் சிந்தனை இவ்விரண்டிற்கும் சாய்கிறதாய் இருக்க முடியாது.

.

இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வர விரும்பினவர்களுக்கு அவர் சொன்ன முதல் நிபந்தனை அவன் தன்னைதான் வெறுக்க வேண்டும் என்பதே. அப்படியே நம்மை வெறுக்கும்போது, எந்தவித புகழ்ச்சியும் இகழ்ச்சியும் நம்மை பாதிக்காது. கிறிஸ்துவே நம்மில் உயர்த்தப்படுவார். ஆமென் அல்லேலூயா!

.

உன்னையே வெறுத்து விட்டால்

ஊழியம் செய்திடலாம்

சுயத்தை சாகடித்தால்

சுகமாய் வாழ்ந்திடலாம்

பெயர் புகழ் எல்லாமே

இயேசுவின் நாமத்திற்கே

கிறிஸ்து வளரட்டுமே

நமது மறையட்டுமே

.
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்திவரும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். எங்களுடைய சுயம் சாகவும், கிறிஸ்துவின் நாமம் எங்கள் மூலமாய் மகிமைப்படவும் கிருபை செய்யும். எந்த புகழ்ச்சியும் எந்த இகழ்ச்சியும் எங்களை பாதிக்காதபடி எல்லாவற்றிலும் நாங்கள் உம்மையே சார்ந்து சுயத்திற்கு மரித்து வாழ கிருபை செய்யும். எங்களுடைய சுயத்தை வெறுக்க கிருபை செய்வீராக. இம்மட்டும் உதவின எபிநேசர், இந்த நாள் வரை ஒரு வருடமும் ஒரு மாதமுமாய் தொடர்ந்து மன்னா வெளிவர கிருபை செய்தீரே உமக்கு நன்றி, இப்போதும் அனுதின மன்னா வாசகர்கள் ஒவ்வொருவரையும் உம்முடைய காருண்யத்தினால் மூடிக்கொள்வீராக. உமக்கே எல்லா கனத்தையும் மகிமையையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் செலுத்துகிறோம். ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.