தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். - லூக்கா 1:31,32). . 2000 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு யூதனும் தங்களுக்கு ஒரு மேசியா அனுப்பப்பட வேண்டும் என்றும், அவர் வந்த அவர்களை ரோம பேரரசின் கைகளிலிருந்து விடுவிப்பார் எனவும் விசுவாசித்து, தங்கள் யெகோவா தேவனிடம் அவர்கள் தினமும் வேண்டி வந்தனர். அப்போது அந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு வாலிப பெண்ணின் கனவும், தான் அந்த மேசியாவின் தாயாக வேண்டும் எனவே இருந்தது. . அக்கால கட்டத்தில் ஒரு தூதன் வந்து மரியாளுக்கு தன்னை வெளிப்படுத்தி, மேசியா அவர்கள்; மூலம் பிறப்பார் என்று கூறியபோது அவர்கள்; எப்படியாய் மகிழ்ந்திருப்பார்கள்? அவர்கள் யோவான் ஸ்நானகனின் தாயாரை காண சென்ற போது அவர்கள் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அதை வெளிப்படுத்தியது, '..அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.. ' என கூறினார்கள். அவர்களுடைய தாழ்மையை, பரிசுத்தத்தை கர்த்தர் பார்த்து அவர்கள் மூலமாக இந்த உலகத்திற்கு மேசியாவை அனுப்பினார். . உலக முழுவதும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடி முடித்த இந்த நாட்களில், பிதாவாகிய தேவனுக்கு சமமான இயேசுகிறிஸ்து ஏன் இந்த உலகத்தில் மனிதனாய் பிறந்தார்? என்று நாம் தியானிப்பது இன்றியமையாதது. . இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது என்று எபிரேயர் 9:22-ல் பார்க்கிறோம். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு எனனும் முற்பிதாக்களின் காலத்தில் பலிபீடத்தை கட்டி அங்கு ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தையும் தேவன் குறிப்பிட்ட பலிகளையும் செலுத்தி வந்தனர். சாலமோன் காலத்தில், தேவாலயம் கட்டப்பட்டு, அங்கு பலிகள் செலுத்தப்பட்டு, பாவ பிரயாசித்தம் செய்யப்பட்டது. தேவாலயம் இடிக்கப்பட்ட போதோ பலிகளும் காணிக்கைளும் செலுத்துவது நிறுத்தப்பட்டது. இன்று வரை பலிகள் செலுத்தப்படவில்லை. இயேசுகிறிஸ்துவுக்கு பின் கி.பி. 70-ல் தீத்து இராயானால் எருசலேமும், ஏரோது ராஜா கட்டின தேவாலயமும் இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின்படி இடிக்கப்பட்டபின், அங்கு பலிகள் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது. ஏனெனில் இயேசுகிறிஸ்து தம் இரத்தத்தை சிந்தி பாவத்தை தீர்த்தபடியால் மீண்டும் இரத்தம் சிந்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. . தேவன், உலக தோற்றத்திற்கு முன் அடிக்கப்பட்ட தேவாட்டுக்குட்டியான இயேசுகிறிஸ்துவை இந்த பாவ உலகத்திற்கு பாவத்தை சுமந்து தீர்க்கும் கிருபாதார பலியாக அனுப்ப சித்தம் கொண்டார். ஏனெனில், அவருடைய இரத்தம் மாத்திரமே பாவமில்லாதது. பரிசுத்தமானது. தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால், தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்த பாவ உலகின் மாந்தர் மீட்கப்பட வேண்டி அவரை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இயேசுகிறிஸ்து, வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். - (எபிரேயர் 9:12). . பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார் (எபிரேயர் 7:26,27). அதற்காகவே அவர் பிறந்தார். 2000 வருடங்களுக்கு முன்பாக அவர் நமது பாவங்களுக்காகவும், நமக்கு முன் இருந்தவர்களின் பாவங்களுக்காகவும், நமக்கு பின் வரும் சந்ததியின் பாவங்களுக்காவும், ஒரே தரம் பிறந்து, பாவங்களுக்காக தம்மை தாமே பலியிட்டு, எல்லாருடைய பாவங்களையும் நீக்கி சுத்திகரித்ததினால், நம் பாவம் நீங்கிற்று. நமக்கு ஆத்தும மீட்பு உண்டாயிற்று. பாவிகளாயிருந்த நம்மை பரலோக ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாய் தேவன் மாற்றினார். . இயேசுகிறிஸ்து பிறந்த போது, சத்திரத்தில் இடமில்லாதபடியால், ஒரு மாடடையும் கொட்டிலில் ஏழை கோலமாய் பிறந்தார். அவர் மீண்டும் வர போகிறார். ஆனால் ஏழை கோலமாக அல்ல, இராஜாதி இராஜனாக கர்த்தாதி கர்த்தராக நியாயம் தீர்க்கிறவராக வரப் போகிறார். ஆமென் அல்லேலூயா! . ஆனால் நாம் இன்னும் அவரை சிறு குழந்தையாகவே நினைத்து கொண்டிருக்கிறோம். அதனால்தான், தூங்கு தூங்கு பாலா நீ என்று இன்னும் பாடி கொண்டிருக்கிறோம். அவர் இன்னும் பாலகனல்ல, பாவத்தையும் சாபத்தையும், மரணத்தையும் வென்ற ராஜாதி ராஜா! நம் பாவங்களை சிலுவையில் சுமந்து தீர்த்தவர், மீண்டும் வரும்போது நம்பாவங்களை நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியாக வரப்போகிறார். அதை மனதில் கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக! . மேசியா இவர்தானோ நம்மை மேய்த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ? |