'தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்'. - (சங்கீதம் 119:68). . கிரேக்க பேரரசன் அலெக்ஸாண்டர், தனக்கு பிரியமான ஒரு தளபதிக்கு அரசு நிதியிலிருந்து பணம் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்று கொள்ள உரிமை வழங்கியிருந்தார். ஒரு சமயம் அந்த தளபதிக்கு மிகவும் பெருந்தொகை தேவைப்பட்டது. அதற்கான ஒரு பண ஓலையை நிதித்துறை அதிகாரியிடம் கொடுத்தார். 'மன்னரை சந்தித்து அவர் அனுமதியை பெறும்வரை அவ்வளவு பெருந்தொகையை உமக்கு தர இயலாது' என கைவிரித்து விட்டார் நிதித்துறை அதிகாரி. . மன்னரை சந்தித்த நிதித்துறை அதிகாரி, 'தளபதி மிகவும் பெருந்தொகைக்கான பண ஓலையை என்னிடம் தந்துள்ளார்' என்று சொல்ல, 'நீர் அந்த ஓலைக்கு மதிப்பளித்தீரா? என்று அலெக்ஸாண்டர் கேட்டார். 'இல்லை, தொகை பெரிய அளவில் இருந்தததால் மன்னரின் அனுமதிபெறும்வரை தர இயலாது என கூறி விட்டேன்' என்றார் நிதி அதிகாரி. மன்னருக்கு கடும்கோபம் வந்து விட்டதை கண்டு அவர், 'அவ்வளவு பெரிய தொகையை கொடுப்பதால் குற்றம் வந்து விடுமோ என்று பயந்தேன்' என்றார். அதற்கு அலெக்ஸாண்டர், 'இவ்வளவு பெரிய தொகையை கேட்பதின் மூலம், தளபதி என்னையும் எனது பேரரசையும் எவ்வளவாய் கனப்படுத்தியிருக்கிறார் தெரியுமா? அப்படியிருக்க நீர் என்னை மட்டுப்படுத்தியது போல் அல்லவா இருக்கிறது' என அலெக்ஸாண்டர் அதிகாரியை கண்டித்தார். . நமது சர்வ வல்லமையுள்ள தேவன் கொடுக்கும் விஷயத்தில் தாராளமாகவே காணப்படுகிறார். ஆனால் கேடகும் நம்மிடம் தான் 'தாராளமாக கேட்கும்' மனப்பான்மை இல்லை. அப்படி நாம் தேவனிடம் பெரிதாய் கேட்காமல் இருப்பதற்கு சில காரணங்களும் உண்டு. முதலாவதாக, அவிசுவாசம்! இவ்வளவு பெரிய வியாதி, டாக்டர்களே கைவிரித்து விட்டார்கள். இதற்காக நாம் ஜெபித்து என்னவாக போகிறது? நம்பிக்கையில்லாத தன்மை. இரண்டாவதாக, நம்மிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை. நான் எவ்வளவு பெரிய பாவி, நான் இதை தேவனிடம் கேட்க தகுதியுள்ளவனா? இவற்றை அவர் எனக்கு செய்வாரா என்ற எண்ணமுமே ஆகும். தேவனால் செய்ய முடியுமா என்கிற சந்தேகம் இல்லை, எனக்கு செய்வாரா என்ற தாழ்வு மனப்பான்மை! எதையுமே தேவன் நம் தகுதியனடிப்படையில் அல்ல, தமது கிருபையினாலே தருகிறார் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். . அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரி சபையாருக்கு எழுதும் கடிதத்தில் இதை குறித்து தெளிவாய் எழுதியுள்ளார். 'எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மை தொழுது கொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறார் (ரோமர் 10:12) மேலும் கூறும் போது தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காவும் அவரை ஒப்பு கொடுத்தவர், அவரோடு கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32) என்றும் கூறுகிறார். . பிரியமானவர்களே, நம் தேவனிடம் திறந்த மனதுடன் தாராளமாய் கேளுங்கள். மேலானதையும், டாக்டர்களால் முடியாத காரியத்தையும் பெரிய பிரச்சனைகளையும், சாத்தியமே இல்லை என மனிதர் கூறும் காரியங்களையும் விசுவாசத்துடன் தேவனிடம் கேட:டு பெற்று கொள்ளுங்கள். அதன் மூலம் நம் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதையும், அவர் நாமம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் உலகிற்கு காட்டி அவரை கனப்படுத்துவோம். ஆமென் அல்லேலூயா! . உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை எல்லாமே உம்மால் ஆகும் அல்லேலூயா எல்லாமே உம்மால் ஆகும் . எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே எனக்காக யாவையும் செய்து முடிப்பவர் நீரே அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் . |