Friends Tamil Chat

வியாழன், 5 மார்ச், 2015

05th March 2015 - இருப்பதுவோ ஒரு வாழ்வு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மார்ச் மாதம் 05-ம் தேதி - வியாழக்கிழமை
இருப்பதுவோ ஒரு வாழ்வு
..................

அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,.. - (எபிரேயர் 9:27).

.

காலை விடிந்து விட்டது. என்ன செய்தி இன்று புதிதாக? ம்ம்.. நான் அலுவலகத்திற்கு புறப்பட வேண்டும்... எங்கே எல்லாரும் போய்விட்டார்கள்? மணி எத்தனை ஆகிறது? ஓ! பத்து மணி ஆகப்போகிறது! நான் உடனே வேலைக்கு போயாக வேண்டுமே! இல்லாவிட்டால் அந்த பெரியது என்னை பார்த்து கத்துமே!

.

ஒரு நிமிடம்! நேற்று நான் படுக்க போனபோது, எனக்கு நெஞ்சு மிகவும் வலித்தது. அப்படியே நான் தூங்கி போனேன், அப்புறம் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லையே! எங்கே என் மனைவி போய்விட்டாள்?

.

என் அறைக்கு வெளியே ஏதோ கூட்டமாய் நிற்கிறார்களே? என்ன விஷயம்? போய் எட்டி பார்த்தேன். ஐயோ, இது என்ன? நான் கீழே படுத்து கிடக்கிறேன்! என்னை சுற்றிலும் ஒரே கூட்டம்! சிலர் அழுகிறார்கள், சிலர் சோகமாய் இருக்கிறார்கள். 'நான் இங்கேதான் இருக்கிறேன்' என்று கத்துகிறேன். ஆனால் யாருக்கும் காதிலே விழவில்லை! 'நான் சாகவில்லை, என்னை பாருங்கள்' என்று மீண்டும் கத்தினேன். யாருமே அதை காதில் போட்டு கொள்ளவில்லை. எல்லாரும் படுத்து கிடக்கிற என்னையே பார்த்து கொண்டிருக்கிறார்களே. நான் சொல்வது யாருக்கும் கேட்கவில்லையே! ஒருவேளை நான் மரித்து விட்டேனா? என்று என்னையே கேட்டு கொண்டேன். என் மனைவி, பிள்ளைகள், என் பெற்றோர் எல்லாரும் எங்கே போய் விட்டார்கள்? இதோ, எல்லாரும் அடுத்த அறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார்கள்!

.

ஐயோ நான் உண்மையிலேயே மரித்து விட்டேனா? எப்படி நான் என் பிள்ளைகளுக்கு 'நான் உங்களை அதிகமாய் நேசிக்கிறேன்' என்று சொல்லவில்லையே! என்னுடைய மனைவியிடம், 'நீ தான் என் நேசத்திற்குரியவள், குடும்பத்தை அழகாய் நடத்தி செல்கிறாயே' என்று இதுவரை நான் சொல்லவில்லையே! என் பெற்றோரிடம் 'நான் இந்த நிலைக்கு காரணம் நீங்கள் தான்' என்று சொல்லவில்லையே!

.

என்னை இரட்சித்த கர்த்தரை குறித்து நான் பிறகு சொல்லி கொள்ளலாம் என்று நாட்களை கடத்தி விட்டேனே! நான் எனக்காகவே இதுவரை வாழ்ந்து விட்டேனே!

.

இதோ, அந்த மூலையில் நின்று அழுது கொண்டிருப்பது யார்? என் நண்பன், என்னிடம் சரியாக பேசாதவன்! இருவரும் சிறுவயது முதல் நண்பர்களாக இருந்தோம், ஏதோ சிறு காரியத்தில் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, யார் முதலில் பேசுவது என்று இதுவரை பேசாமல் இருந்து விட்டோம். இப்போது இங்கு அழுது கொண்டிருக்கிறானே, என் கையை நீட்டி, 'என்னை மன்னித்து விடு' என்று சொல்கிறேன். ஆனால் அவனோ அதை சட்டை செய்யவேயில்லை! என்ன இருந்தாலும் நான் தாழ்ந்து வரும்போது, அவன் என்னிடம் கை கொடுக்க வேண்டுமே! ஓ, அவன்தான் என் கையையே பார்க்கவில்லை, நான்தான் மரித்து விட்டேனே!

.

எனக்கு கீழே உட்கார்ந்து ஓ என்று அழ வேண்டும் என்று தோன்றியது. நான் உண்மையிலேயே மரித்து விட்டேனா? 'ஆ கர்த்தாவே, தயவு செய்து எனக்கு இன்னும் கொஞ்சம் நாட்களை தாரும் ஐயா! எனக்கு மீண்டும் ஜீவனை தாரும் ஐயா! கொஞ்ச நாட்கள் போதும், நான் சரிசெய்ய வேண்டியதை எல்லாம் சரி செய்து விட்டு, என் மனைவியிடமும், என் பிள்ளைகளிடமும், என் பெற்றோரிடமும், என் நண்பர்களிடமும் கூற வேண்டியதை கூறி விட்டு, கர்த்தருக்கு சாட்சியாக என்னால் இயன்றவரை சுவிசேஷத்தை அறிவித்து விடுகிறேன். அதன்பின் என்னை எடுத்து கொள்ளும்' என்று கதறினேன். என் மனைவி நான் இருந்த அறைக்குள் நுழைந்தாள். 'அன்பே, நான் உன்னை நேசிக்கிறேன்' என்று கத்தினேன். ஆனால் அவள் காதில் அது விழவே யில்லை. 'ஒரு தரம் என்மேல் இரங்கும் தேவனே' என்று கதறினேன். 'எனக்கு இன்னுமொரு தருணத்தை தாருங்கள்' என்று அழுதேன்.

.

என் மனைவி என்னை எழுப்பினாள். 'தூக்கத்தில் என்னவோ பிதற்றுகிறீர்கள்' என்று என்னிடம் கூறினாள். ஆ! நான் கனவு தான் கண்டிருக்கிறேன். என்ன ஒரு ஆசுவாசம்! அப்பாடி! என் மனைவிக்கு நான் சொல்வது கேட்கிறது, நான் அவளை அப்படியே கட்டியணைத்து, 'நீ தான் என் நேசத்திற்குரியவள், நான் உன்னை அதிகமாய் நேசிக்கிறேன்' என்று அவள் காதில் கூறினேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் அவள் கண்களில் கண்ணீர் சுரப்பதை கண்டேன். கண்களை ஏறெடுத்து, 'கர்த்தாவே எனக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது தருணத்திற்காக நன்றி' என்று கூறினேன்.

.

'அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது'. ஆகையால் நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஒரு வாழ்வே! அந்த ஒரு வாழ்வில், சிலர் ஏற்கனவே பாதியை கடந்திருப்போம். கொடுக்கப்பட்டிருக்கிற வாழ்வில், நமது பெருமைகளை மறந்திடுவோம், கடந்த காலங்களில் நடந்ததை மறந்திடுவோம், நமது அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவோம், நம்மால் இயன்றவரை கர்த்தருக்கு ஊழியம் செய்வோம். வாழ்வது ஒருமுறைதான். ஆனால் கர்த்தருக்காக எதை செய்தோமோ அதுவே நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்து, அவருக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை செய்து விடுவோமா?

.

யாரோ செய்யட்டும் எனக்கென்ன - நான்

நலமாய் இருந்தால் அது போதும்

என்றே சுயமாய் வாழ்வதினாலே

பின்னால் நீயும் வருந்திடுவாயே

என்று உணர்வாயோ இன்றே வா

.

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

இயேசுவுக்காய் வாழ்வோம்

இருப்பதுவோ ஒரு வாழ்வு - அதை

அவருக்கு கொடுத்திடுவோம்

வாழ்ந்திடுவோம் நாம் வாழ்ந்திடுவோம்

இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தி வரும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். அப்பா நாங்கள் வாழப்போவது ஒருமுறைதான். அதில் நாங்கள் உம்மையே உயர்த்தி ஜீவிக்கவும், உமக்காக எங்களால் இயன்ற அளவு ஆத்துமாக்களை ஆதாயம் செய்யவும் கிருபை தாரும், எங்கள் குடும்பத்தை நாங்கள் நேசிக்கவும், எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாய் ஜீவிக்கவும் கற்று தாரும். நாங்கள் நினையாத நேரத்தில் மரணம் எங்களை சந்தித்தாலும் நாங்கள் கர்த்தருக்காக ஜீவித்தோம் என்று மகிழும்படியாக நாங்கள் உமக்கென்று வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.