Friends Tamil Chat

வெள்ளி, 20 டிசம்பர், 2013

20th December 2013 - பரலோகமே நம் சொந்தமே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 டிசம்பர் மாதம் 20-ம் தேதி – வெள்ளிக்கிழமை
பரலோகமே நம் சொந்தமே
.....

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். - (யோவான் 14:2-3).

.
ஒரு வழிபோக்கன் ஒருவன் பிரயாணப்பட்டு, வெகு தூரமாய் சென்று கொண்டிருந்தான். இரவு நெருங்கி விட்டது. பகலெல்லாம் அவன் நடந்ததால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. எங்கேயாவது ஓய்வெடுத்தால் நலமாயிருக்கும் என்று அவன் எண்ணினான். சற்று தூரத்தில் ஒரு பெரிய வீட்டை கண்டான். அதன் பெரிய முற்றத்திலே பெரிய பெரிய திண்ணைகள் கட்டப்பட்டிருந்தன. வெளியில் வந்த வீட்டுக்காரரிடம் தன் பயணத்தை கூறி அன்றிரவு மட்டும் இந்த திண்ணையில் ஓய்வெடுத்து கொள்கிறேன் என்று கேட்டான். அதை கேட்ட கல்மனம் கொண்ட அந்த வீட்டுக்காரர், ' இது என்ன சத்திரமா? போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் தங்கி போகவா இதை கட்டி போட்டிருக்கிறோம்' என்று சாடினார். வழிபோக்கர் அமைதியாக, 'ஐயா இந்த பங்களாவை யார் கட்டியது?' என்று கேட்டார். 'என் தாத்தா கட்டினார். அதன்பின் என் அப்பா இதில் வாழ்ந்தார். இப்போது நான், எனக்கு பிறகு என் மகன் வாழ்வான்' என்று பெருமிதத்தோடு கூறினார். 'அப்படியானால் இது சத்திரம் தானே' என்று வழிபோக்கர் நாசுக்காக கூறினார்.

.

உலகம் ஒரு நாடக மேடை என்றார் ஒருவர். குறிப்பிட்ட காலம் வரை நமது கதாபாத்திரத்தை நடித்து விட்டு, செல்ல வேண்டியதுதான். இப்பூமியில் கோடி கோடியாய் செலவிட்டு, ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் கொஞ்ச காலம்தான் வாழமுடியும். இறந்த பிறகு ஆறடி நிலமும் தரமாட்டார்கள் பிள்ளைகள்! மகன் ஊதாரியோ, குடிகாரனோ, பெண்டாட்டிக்கு பின் திரிபவனோ யாராயிருந்தாலும் அவனுக்கு விட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும்.

.

இப்படிப்பட்ட நிலையற்ற உலகில் வாழும் நமக்கு இதன் பேரில் தான் எத்தனை பற்று! என் வீடு, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய வீடாக்கும்! என்று எத்தனை பெருமைகள்! ஒரு அடி அண்டைவீட்டுக்காரன் நமது நிலத்தில்; தவறி கட்டி விட்டான் என்றால் அப்பப்பா எத்தனை கோர்ட் ஏறி இறங்குகிறோம்! சரி நமது நிலம் தான். அதில் கட்ட அவனுக்கு உரிமை இல்லைதான். அதை நான் சொல்ல வரவில்லை. இந்த காரியங்கள் எதுவும் நிரந்தரமில்லை என்பதை தான் சொல்கிறேன். நமது ஆயுள் எத்தனை நாள் என்று நம்மில் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் நாம் ஒருவேளை வீட்டையே கட்டியிருக்க மாட்டோமாயிருக்கும்.

.

ஒரு சிலர் ஏதோ இந்த உலகம் தான் அவர்களுக்கு நிரந்தரம் என்பது போலவும், கையை கட்டி, வாயை கட்டி, சொத்து மேல் சொத்து சேர்த்து குவித்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பணம் சேருகிறதோ அவ்வளவு அதன் மேல் அவர்களுக்கு மயக்கமும், ஆசையும் ஏற்படுகிறது. பணம் அதிகதிகமாய் இருக்கிறவர்களை பாருங்கள், அவர்களுக்கு இன்னும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாஞ்சையே அதிகமாய் இருக்கும். 'பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே' - (பிரசங்கி 5:10) என்று வேதம் கூறுகிறது. திருப்தியடைய செய்யாத ஒன்றுக்காக அவன் இரவும் பகலும் போராடி கொண்டிருக்கிறான்.

.

ஆனால் கர்த்தருக்குள் வாழ்கிறவர்களுக்கு என்று இயேசுகிறிஸ்து ஒரு வீட்டை கட்டுவதற்கு சென்றிருக்கிறார். இந்த ஸ்தலத்தை அந்த வீட்டை ஆயத்தம் செய்த பிறகு நாம் அங்கு போய் என்றும் இருப்பதற்காக நம்மை அழைத்து செல்வார். அந்த வீடு மூட்டை பூச்சியோ, கரப்பானோ வந்து குடியிருக்காத இடம்! தண்ணீர் பஞ்சம் இல்லாத இடம், தூங்கும்போது வீட்டு கதவை தட்டி, விற்பவர்கள் தொல்லை இல்லாத இடம், வாடகை வீடென்றால், வீட்டில் தண்ணீர் ஒழுகுகிறது என்று எத்தனை முறை சொன்னாலும், வீட்டுக்காரன் சரிசெய்து தர மறுப்பது போல பாடுகள் இல்லாத இடம். நமக்கென்று இயேசுகிறிஸ்து கட்டியிருக்கிற இடம். அதை யாரும் கொள்ளை கொண்டு போக முடியாது. அந்த வீடு நிலையானது. யாராலும் அழிக்க முடியாதது. எந்த பூகம்பத்தாலும் அசையாதது, அதில் யுகயுகமாய் வாழ்வோம். அதையே நாம் நாடுவோமா?

.

அந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றால், நாம் கர்த்தருக்குள் வாழ வேண்டும். அங்கு செல்லும்படியான தகுதி நமக்கு இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, முழுக்கு ஞானஸ்நானம் எடுத்து, பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, பரிசுத்தமாய் வாழும்போது நாம் அந்த வீட்டுக்கு சொந்தம் கொள்ள முடியும். அப்படி வாழ்பவர்களையே, இயேசுகிறிஸ்து வரும்போது அழைத்து செல்வார். ஆமென் அல்லேலூயா!

.

பூமிக்குரியவையல்ல பூமிக்குரியவையல்ல

மேலானவைகளை என்றும் நாடிடுவோமே நாமும்

..

கொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லை

உண்ண உடுக்கவும் போதுமென்றே வாழ்வோம்

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, நாங்கள் இந்த பூமியில் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வீடுகளோ, எதுவும் எங்களுக்கு நிலையானது அல்ல தகப்பனே. ஆனால் பரலோக வாழ்வும், நித்திய ஜீவனும் எங்களுக்கு என்றும் நிலையானது. நாங்கள் பூமிக்குரியவைகளை அல்ல மேலானவைகளையே நாடும்படி, எங்களுக்கு உணர்த்தும். உலகத்துக்குரிய காரியங்களில் நாங்கள் ஈடுபட்டு, பரலோக காரியங்களை மறந்து போவோமானால் எத்தனை பரிதாபம் தகப்பனே! பரலோகத்துக்கடுத்த காரியங்களில் நாங்கள் வாஞ்சை வைத்து அதன்படி வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.