Friends Tamil Chat

வியாழன், 21 பிப்ரவரி, 2013

21st Feb 2013 - கவலைப்படாதீர்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
...
கவலைப்படாதீர்கள்
....

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25).


ஒரு கணவனும் மனைவியும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து பேசி கொண்டிருந்தார்கள். கணவர் 'ஐயோ இந்த காலத்தில் மற்ற பிள்ளைகள் படிக்கிறதையும் வாங்குகிற மார்க்குகளையும் பார்த்தால் நம்ம பிள்ளைகள் எங்கே போய் நிற்பார்களோ தெரியவில்லை! பிற்காலத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம் போலிருக்கிறது. ஒரு நல்ல வேலை கிடைக்காவிட்டால் இந்த பிள்ளைகள் என்ன செய்யும்?'என்று கவலைப்பட ஆரம்பித்தார். ஆனால் மனைவியோ, ' பாருங்கள் நம் பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்திருக்கிற அருமையான தாலந்துகளை! அவன் கிட்டாரை எடுத்து பாட ஆரம்பித்தால் எல்லாரும் நின்று கேட்டுவிட்டு தான் போவார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? கர்த்தருடைய கரத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதால் அவர் பார்த்து கொள்வார்' என்று கூறினார்கள். இருவரும் கர்த்தரின் மேல் அன்புள்ளவர்கள்தான், அவர்மேல் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால் கவலை என்று வரும்போது, கர்த்தரைவிட பிரச்சனைகளும் போராட்டங்களுமே பெரிதாக தெரிகிறது.

புதிய ஏற்பாட்டில் மாத்திரம் 25 தடவை கவலையை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. நாம் கவலைப்படும்போது, நம்முடைய எண்ணங்களும், நம்முடைய சிந்தனைகளும் கர்த்தரை நோக்கி பார்ப்பதை விட்டுவிட்டு, பிரச்சனைகளையே நோக்கி பார்க்க ஆரம்பிக்கிறது. பேதுரு கடலின் மேல் நடந்து கர்த்தரை நோக்கி பார்த்தபடியே நடக்க ஆரம்பித்த போது வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால் எப்போது கடலையும் அலைகளையும் பார்க்க ஆரம்பித்தாரோ கடலில் மூழ்க ஆரம்பித்தார்.

இயேசுகிறிஸ்து விதைக்கிறவனை குறித்த உவமையில் 'வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்' (மாற்கு 4:18-19) என்று கூறுகிறார். இந்த மக்கள் கர்த்தருடைய வசனத்தை கேட்டு ஏற்று கொள்கிறார்கள். ஆனால், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், இச்சைகளும் அவர்கள் கேட்ட வசனத்தை அவர்களிலிருந்து எடுத்து போட அவர்கள் யாருக்கும் பயனற்றவர்களாக, தாங்கள் கேட்ட வசனத்தை மறந்தவர்களாக, தங்கள் கவலைகளிலேயே தங்கள் காலத்தை கழிக்கிறவர்களாக வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள்.

'ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?' என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவர் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லும்போது நாம் கவலைப்பட்டால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமற் போகும் பாவத்திற்கு உள்ளாகிறோம் அல்லவா?

தேவன் மேல் நம் நம்பிக்கை பூரணமாக இருந்தால் நிச்சயமாக நாம் எதை குறித்தும் கவலைப்பட மாட்டோம். கர்த்தருடைய கரத்தை மீறி எதுவும் நிச்சயமாக நம் வாழ்க்கையில் நடப்பதில்லை, நடக்க போவதும் இல்லை. ஆகையால் எதற்கு கவலைப்பட வேண்டும்? 'அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' (1 பேதுரு 5:7) என்று வேதம் நமக்கு போதிக்கிறது. ஆகையால் நம்முடைய கவலைகளை அவர் மேல் வைத்துவிட்டு நம்மை விசாரிக்கிற தேவனிடத்தில் நம்மையும் நம் கவலைகளையும் வைத்துவிடுவோம். அவர் பார்த்து கொள்வார். ஏனெனில் அவரே நமது யெகோவாயீரே! எல்லாவற்றையும் பார்த்து கொள்கிற தேவன்! நம் தேவைகளை சந்திக்கிற தேவன்! நம் கவலைகளை அறிந்த தேவன்! நமக்காக அற்புதங்களை செய்கிறவர்! ஆமென் அல்லேலூயா!

உன்னை விசாரிக்கும் தேவனுண்டு - உன்

கவலையை அவர் மேல் வைத்துவிடு

கண்ணீர் கவலை துடைக்கும் தேவன்

உன்னைத் தேற்றிடுவார்

..

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு

அவர் உன்னை ஆதரிப்பார்

நீதிமான் கால்களை

தள்ளாடவே ஒட்டார்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்கள் கவலைகளை கர்த்தர் மேல் வைத்துவிட்டு, நீர் எங்களை விசாரிக்கிற தேவனாக இருக்கிறபடியால் உம்மையே சார்ந்து கொள்ள கிருபை செய்யும். எங்கள் கண்ணீரை துடைத்தருளும். எங்களை தேற்றுகிற தேற்றரவாளரே, எங்களை தேற்றி, தேவைகளை சந்திப்பீராக. வீணாக கவலைப்பட்டு, எங்களை வருத்தி கொள்ளாதபடி எல்லாவற்றையும் உம்முடைய பாதத்தில் வைத்து விடுகிறோம். நீர் அற்புதங்களை செய்து எங்களை காத்து கொள்ளப்போவதற்காக நன்றி! எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.