Friends Tamil Chat

செவ்வாய், 19 நவம்பர், 2013

20th Nov 2013 - தேவையான ஒன்று

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 20-ம் தேதி - புதன் கிழமை
தேவையான ஒன்று
....

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். - (லூக்கா 10:42).

.
வேதத்தில் மார்த்தாளுக்கு மரியாள் என்னும் சகோதரியும், லாசரு என்னும் சகோதரனும் இருந்ததை குறித்து வாசிக்கிறோம். மார்த்தாள் மூத்தவள். அவர்களுக்கு பெத்தானியா என்னுமிடத்தில் வீடு இருந்தது. அந்த பெத்தானியா எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரம் உடையது. அந்த மூவர் இருந்த குடும்பம் இயேசுகிறிஸ்துவை அதிகமாக நேசித்தது. இயேசுகிறிஸ்து அவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம்.

.

'பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள்' (லூக்கா 10:38) என்று பார்க்கிறோம். மூத்தவளான மார்த்தாள் இயேசுகிறிஸ்துவை அன்புடன் தன் வீட்டிற்கு வரவேற்கிறாள். அவரும் சீஷர்களும் அவளுடைய வீட்டிற்குள் வருகிறார்கள்.

.

'அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்' மரியாளை குறித்து மூன்று இடத்தில் சுவிசேஷங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த மூன்று முறையும் அவள் இயேசுவின் பாதத்தில் இருப்பதையே வெளிப்படுத்தியுள்ளது. மரியாள் எதை குறித்தும் கவலைப்படாதவளாக, இயேசுகிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து அவர் சொல்லும் வார்த்தைகளை கவனமாக கேட்டு கொண்டிருந்தாள்.

.

'மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்'. மார்த்தாள் விருந்தாளிகளை வீட்டிற்கு அழைத்ததால், மிகவும் பிஸியாக அவர்களுக்கு விருந்து படைக்கும்படியாக, சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். இயேசு கிறிஸ்து வந்திருக்கிறார். அவரை முன்னால் அறையில் உட்கார வைத்து விட்டு, வீட்டுக்காரர்கள் உள்ளே வேலையாக இருந்தால், என்ன நினைப்பார் என்றெல்லாம் கவலையில்லாமல், அவள் இயேசு கிறிஸ்துவிடம் வந்து, 'நான் தனியே எல்லா வேலையும் செய்கிறேன், இந்த மரியாள் பாருங்கள். உம் பாதத்தில் உட்கார்ந்து ஒரு வேலையும் செய்யாமல், இருக்கிறாள், உமக்கு அதை குறித்து கவலையில்லையா? போய் உன் அக்காளுக்கு உதவி செய் என்று அவளுக்கு சொல்லுங்கள்' என்று மார்த்தாள் இயேசு கிறிஸ்துவிடம் கூறுகிறாள். அவரையே குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறாள்.

.

மார்த்தாள் நல்ல பெண்மணிதான், ஆனால் எதை அவள் முக்கியப்படுத்த வேண்டும், எதை முதன்மை படுத்த வேண்டும் என்பதை அறியாதிருந்தாள். கர்த்தருக்கு உணவு ஒரு முக்கியமல்ல, அவளும் அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்தால், அவளுக்கும் சேர்த்து நல்ல உணவு கிடைத்திருக்க கூடும். கர்த்தருக்கு அவருடைய வார்த்தையை கேட்பதையும், அவருடைய பாதத்தில் அமர்ந்திருந்து அவர் சொல்வதை கேட்பதையும் தான் மற்ற எல்லா காரியங்களை காட்டிலும் அவர் முக்கியப்படுத்துகிறார்.

.

'இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்' ஆம், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவரின் சத்தத்தை கேட்பதே நம்மை விட்டு எடுபடாத நல்ல பங்காகும். மரியாள் அதையே தெரிந்து கொண்டாள். அதினால் கர்த்தரிடத்திலிருந்து அருமையான ஒரு பாராட்டை பெற்று கொண்டாள்.

.

நாமும் கூட அநேக முறை நம்முடைய வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்க தவறி விடுகிறோம். காலையில் எழுவதில் இருந்து, இரவு படுக்கும் வரை நான் ரொம்ப பிஸி என்று சொல்லி, கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்க மறந்து விடுகிறோம் அல்லது அவ்வளவு பிஸியாகி விடுகிறோம். இந்த நாட்களில் யாரையும் கேளுங்கள், ஓ, நான் ரொம்ப பிஸி என்று தான் சொல்வார்கள். அப்படி பிஸியாக இருப்பவர்கள் எப்படி கர்த்தரின் பாதத்தில் அமைதியாக அமர முடியும்?

.

நாம் அவருடைய பாதத்தில் அமராமல், தொடர்ந்து நம் வேலைகளை செய்வதில் மிகவும் பிஸியாக இருப்போமானால், என்ன நடக்கும்? பிரச்சனைகள் எழும்ப ஆரம்பிக்கும், சாத்தான் நம்மேல் வெற்றி கொள்ள ஆரம்பிப்பான்.

.

'மரியாள் தன் சகோதரன் லாசரு மரித்தபோது, இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்' (யோவான் 11:32) இந்த இடத்திலும் மரியாள் கர்த்தரின் பாதத்தில் விழுகிறதை காண்கிறோம்.

.

'அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டு வந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது' (யோவான் 12:3). மூன்றாவதாக மரியாள் விலையேறப்பெற்ற தைலத்தை இயேசுகிறிஸ்துவின் பாதத்தில் பூசுகிறாள். மரியாள் மிகவும் அன்பு கூர்ந்ததை தேவன் அறிந்து அதை மற்றவர்களிடம் சொல்லி பாராட்டினார். - (லூக்கா 7:47) .

.

கர்த்தரின் பாதத்தை பற்றி கொண்டவர்களுக்கு மற்றவை எதுவும் பெரியதாக தெரியாது. அவர் பாதமே தஞ்சம் என்று வந்தவர்களுக்கு அவர் கிருபை அளிக்கிறார். அவர் பாதத்தை பற்றி கொண்டவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை. அவரின் பாதத்தை பற்றி கொள்வோம். அவருடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோம்.

.

என்னை விட்டு எடுபடாத

நல்ல பங்கு இது எனக்கு

...

பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி

கதறி அழுதிடுவேன் நான்

...

இயேசு பாதம் எனக்கு போதும்

எந்த நாளும் ஆனந்தமே

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உம்முடைய பாதம் ஒன்றே எங்களுக்கு போதும் ஐயா. உம்முடைய பாதத்தில் அமர்ந்து, கர்த்தரின் சொல்லும் வார்த்தைகளை கேட்க எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை தாரும் தகப்பனே. எப்பொழுதும் பிஸி பிஸி என்று நாங்கள் மார்த்தாளை போல கவலைப்பட்டு கொண்டிராமல், மரியாளை போல இந்த அவசர உலகத்திலும் உம்முடைய பாதத்தில் பொறுமையாக அமர்ந்து நீர் சொல்வதை கேட்கும் கிருபைகளை தாரும் தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.