அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான். - (எண்ணாகமம் 13:30). . நேற்றைய தினத்தில் கானான் தேசத்தை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் பத்து பேர் அவிசுவாச வார்த்தைகளை பேசினதினால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த நாளில் காண்போம். . ஆனால் அந்த தேசத்தை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் இரண்டு பேர் மாத்திரம் கர்த்தர் சொன்ன வாக்குதத்தத்தை மறவாமல், அவர் நிச்சயமாக அவர்களை கானான் தேசத்தில் கொண்டு போய் சேர்ப்பார் என்று விசுவாசித்தவர்களாக, அவருடைய வாக்குதத்தத்தை உறுதியாக பற்றி கொண்டார்கள். 'தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள்' - (எண்ணாகமம் 14:6-9). . இந்த இரண்டு பேரும் அதே மோசேயின் கீழ் எகிப்து தேசத்திலிருந்து கர்த்தர் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டவர்கள். கர்த்தர் அவர்களை கானான் தேசத்திற்கு கொண்டு செல்வார் என்ற விசுவாசத்தோடு அந்த தேசத்தை சுற்றி பார்க்க சென்றவர்கள். அவர்களின் விசுவாசம் அற்புதமாய் இருந்தது. அவர்கள் மற்ற பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகளை கேட்டபோது, பதறி போய், நீங்கள் ஏன் இப்படி சொல்லி மற்றவர்களை அதைரியப்படுத்துகிறீர்கள்? அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை, நாம் அந்த தேசத்தில் காலடி வைத்த உடனே அவர்களை காத்த நிழல் அவர்களை விட்டு விலகி போயிற்று, நாம் பயப்பட வேண்டியதே இல்லை என்று அவர்கள் இஸ்ரவேல் மக்களை திடப்படுத்தி, உற்சாகப்படுத்தினாலும், அநேகராகிய பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகளே மக்களின் இருதயத்தில் கிரியை செய்தது. அவர்கள் யோசுவா, காலேபின் வார்த்தைகளை நம்பவில்லை. . நாம் பேசுகிற வார்த்தைகள் அவிசுவாச வார்த்தைகளாய் இருந்தால், அவை நமக்கு மட்டுமல்ல, நம்மோடு இருப்பவர்களின் விசுவாசத்தையும் கெடுக்கிறதாக இருக்கிறது. அநேகரை நாம் வழிவிலக செய்கிறவர்களாக காணப்படுவோம். 'என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்' (மாற்கு 9:42) என்று இயேசு கிறிஸ்து கடினமான வார்த்தைகளை மற்றவர்களை விசுவாசத்திலிருந்து விலக செய்யப்பண்ணுகிறவர்களை குறித்து எச்சரித்தார். பாருங்கள் ஒரு தலைமுறை ஜனத்தையே அந்த பத்து பேர் சொன்ன அவிசுவாச வார்த்தைகள் வாக்குதத்தம் செய்யப்பட்ட கானான் தேசத்திற்குள் செல்ல விடாமல் பண்ணிற்று! . பெற்றோரின் அவிசுவாசத்தால் கர்த்தரின் வாக்குதத்தத்தை விசுவாசியாத அவர்களின் பிள்ளைகள் நாற்பது நாள் கானான் தேசத்தை ஒற்றர்கள் சுற்றி வந்த நாட்களுக்கு ஒப்பாய் நாற்பது வருடங்கள் அந்த வனாந்தரத்தில் சுற்றி திரிந்து, அவிசுவாசிகளாய் இருந்த பெற்றோர் மரித்தப்பின் பிள்ளைகள் கானானுக்குள் பிரவேசித்தார்கள். அவிசுவாசத்தின் பலன் எத்தனை கொடியது பாருங்கள்! மட்டுமல்ல, 'அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்'. ஆம் அந்த பத்து பேரையும் கர்த்தர் வாதைகளினால் மரிக்க செய்தார். . தேவன் தம் ஜனத்திற்கு அவர்கள் சந்தோஷமாய் இருக்கவேண்டும் என்பதற்காக அநேக அருமையான வாக்குதத்தங்களை கொடுத்து, நாம் அதை விசுவாசித்து பெற்று கொள்ள வேண்டும் என்று கொடுத்திருக்க, நாம் அதை விசுவாசியாதபோது, தேவனிடத்திலிருந்து கோபத்தை கொண்டு வருகிறதாயிருக்கிறது. விசுவாசமாய் பேசின யோசுவா, காலேப் மாத்திரம் அந்த தலைமுறையினரில் கானானுக்குள் பிரவேசித்தார்கள். . விசுவாசித்த காலேபை குறித்து, 'என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்' என்று தேவன் ஆசீர்வதித்தார். இந்த காலேப் இஸ்ரவேல் கோத்திரத்தை சேர்ந்தவரல்ல, அவர் கேனாசியர்களில் ஒருவர். ஆனால் அவர் கர்த்தர் பேரில் வைத்திருந்த விசுவாசத்தால், அவர் யூதா கோத்திரத்தில் கானானை சுற்றி பார்க்க சென்ற பன்னிரண்டு பேரில் ஒருவரானார். அவருடைய விசுவாசமும் அவர் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றி வந்தபடியினாலும், (யோசுவா 14:14) அவர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டார். யோசுவாவையோ அவர்களை நடத்தி செல்லும் தலைவனாக ஏற்படுத்தி, அவரே அந்த தேசத்திற்குள் அவர்களை நடத்தி சென்றார். அல்லேலூயா! . இவை எல்லாம் மோசேயின் மூலமாய் கேட்டபோது, இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள். ஐயோ அநியாயமாய் அந்த பத்துபேர் சொன்ன வார்த்தைகளை நம்பி மோசம் போனோமே, என்று புலம்பினார்கள். ஆனால் அதினால் என்ன பயன்? அவர்கள் வாக்குதத்தம் செய்த கானானுக்குள் நுழைய முடியாமற்போனது போனதே! . ஒருவேளை அநேகர் சேர்ந்து முடியாது என்று சொல்லும்போது நம்முடைய இருதயம் அதை நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். உதாரணத்திற்கு அநேகர் இந்த வியாதி உன்னை விட்டு நீங்கவே முடியாது என்று கூறலாம், அல்லது இந்த வேலை உனக்கு கிடைக்க வழியே இல்லை என்று கூறலாம், அல்லது இப்பேற்பட்ட பாவியான உன்னை கர்த்தர் ஏற்று கொள்ளவே முடியாது என்ற கூறலாம், அல்லது உன்னால் இந்த காரியத்தை செய்யவே முடியாது என்று கூறலாம். ஆனால் உங்களை அழைத்த தேவன் மேல் நீங்கள் மாறாத விசுவாசம் வைத்திருப்பீர்களானால், யார் வந்து என்ன கூற்றை கூறினாலும், அதை உங்கள் மனம் ஏற்காது. ஏற்க விடக்கூடாது. அவிசுவாச வார்த்தைகளை நம்பாதிருங்கள். அதற்கு செவி கொடுத்து, தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்காதிருங்கள். அப்படி செய்யும் பட்சத்தில் தேவன் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கிற நன்மையான காரியங்களை நாம் பெற்று கொள்ள முடியாமற் போக நேரிடலாம். பின்னர் துக்கப்பட்டு பிரயோஜனம் ஒன்றுமிருக்காது! . கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் (சங்கீதம் 125:1) என்ற வசனத்தின்படி அவர்களின் இருதயம் கர்த்தரையே நம்பி இருப்பதால் என்ன அவிசுவாச வார்த்தைகளை கேட்க நேர்ந்தாலும் அசையாமல், என்றென்றும் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தை போல உறுதியாக கர்த்தர் மேல் தங்கள் விசுவாசத்தை வைத்தவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட அசைக்க முடியாத விசுவாசத்தை நாம் தேவன் பேரில் வைக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவரின் விசுவாசத்தையும் வர்த்திக்க செய்வாராக! ஆமென் அல்லேலூயா! . உமக்கு பிரியமானதை பேச எனக்கு கற்று தாரும் தெய்வமே நீரே என் தேவன் உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் செவ்வையான வழியிலே நடத்த வேண்டுமே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றும் தெய்வமே துணையாளரே . |