Friends Tamil Chat

வியாழன், 7 மே, 2015

07 மே 2015 - விசுவாச வார்த்தை - பாகம் ஒன்று

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 மே மாதம் 07-ம் தேதி - வியாழக்கிழமை
விசுவாச வார்த்தை - பாகம் ஒன்று
...............

அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக் கொள்ளலாம் என்றான். - (எண்ணாகமம் 13:30).

.

மோசே இஸ்ரவேல் ஜனங்கள் கானானை சுதந்தரிப்பதற்கு முன், 'தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள்' என்று சொல்லி, கோத்திரத்திற்கு ஒருவராக 12 பேரை கானான் தேசத்தை பார்த்து வரும்படி அனுப்புகிறார்.

.

அந்த பன்னிரண்டு பேரும் நாற்பது நாட்கள் அந்த தேசத்தை சுற்றி பார்த்து விட்டு, ஒரே குலையுள்ள திராட்ச கொடியை அறுத்து, அதை ஒரு தடியிலே கட்டி, மோசேயிடம் வந்து தங்கள் அறிக்கையை சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லா ஜனத்திற்கும் முன்பாக பத்து பேர் தங்கள் அறிக்கையை இவ்விதமாய் சொன்னார்கள், 'மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்'. அவர்கள் அந்த தேசத்தை பாலும் தேனும் ஓடுகிற நாடாக கண்டார்கள். தேவன் அவர்களுக்கு அந்த அருமையான தேசத்தை கொடுப்பேன் என்று வாக்குதத்தம் செய்தபடியே அந்த தேசம் மிகவும் அருமையாக இருப்பதை கண்டார்கள். அதினால் தான் அதன் ஒரு குலையுள்ள திராட்ச கொடியை அவர்கள் கைகளினால் தூக்கி வர முடியவில்லை. அதை ஒரு தடியில் கட்டி இரண்டு பேராக தூக்கி கொண்டு வந்தார்கள்.

.

ஆனால் அந்த பத்து பேருக்கும் தேவன் செய்த மற்ற அற்புதங்களும், தங்களை எவ்விதமாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட பண்ணினார் என்பதும் சீக்கிரம் மறந்து போய் விட்டது. அவர்களுடைய கண்களுக்கு முன் அந்த தேசத்தில் வாழும் மக்கள், அங்குள்ள பெரிய பெரிய கனிகளை சாப்பிட்டு, ராட்சதர்களை போலவே மாறிவிட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். ஆகவே தான், 'ஆனாலும், அந்த தேசத்தில் வாழுகிற ஜனங்கள் பலவான்கள், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம்' என்று அவிசுவாச வார்த்தைகளை எல்லா ஜனத்திற்கு முன்பும் சொல்ல ஆரம்பித்தார்கள். இவர்களுடைய பார்வைக்குத்தான் இவர்கள் வெட்டுக்கிளிகளை போல இருந்தார்கள், அந்த ஜனத்தின் பார்வைக்கும் அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள் என்று இவர்களுக்கு எப்படி தெரியும்? கதைகளை கட்டி, ஜனத்தின் மனதை துவள செய்தார்கள்.

.

அத்தனை காலம், நாம் அந்த தேசத்தை போய் சுதந்தரித்து, இந்த வனாந்திர வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்கலாம் என்று நினைத்திருந்த மக்கள், இந்த பத்து பேரின் அறிக்கையை கேட்டு, இரவு முழுவதும் அழுதார்கள். கர்த்தர் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் மறந்து, தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்து, நாங்கள் எகிப்திலேயே செத்து போயிருந்தால் நலமாயிருக்குமே என்று தங்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்தி கொண்டு, எகிப்துக்கு திரும்பி போவோம் என்று கூறி கொண்டார்கள். பிரச்சனைகளை பார்த்து, இத்தனை நாள் அதிசயமாய் நடத்தி வந்த கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்ததால் என்ன நடந்தது தெரியுமா? கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த வாக்குதத்தங்களை மறந்து, அல்லது அதை பெரியதாக நினைக்காமல், ஏதோ பத்து பேர் சொன்ன அறிக்கையை நம்பி, கர்த்தருக்கு விரோதமாக வார்த்தைகளை பேசி, நாங்கள் எகிப்திலேயே செத்தால் நலமாயிருக்கும் என்று சொல்லி தேவனை கோபப்படுத்தின அவர்களுக்கு விரோதமாக தேவ கோபம் எழும்பியது. 'கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்' அந்த இடத்தில் மோசே தேவனிடம், அவரையும், தேவனையும் குறை சொல்லிய மக்களுக்காக திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கிறார். ஒரு வேளை நாமாயிருந்தால், ஆம் ஆண்டவரே, இந்த ஜனம் எப்போதும் முறுமுறுக்கிற ஜனம், அழித்து போட்டு விடும், என்று அவரிடம் கூறியிருப்போம். ஆனால் மோசே அந்த இடத்தில் ஒரு அருமையான ஜெபத்தை, ஜனம் அழியாதபடிக்கு திறப்பில் நின்று, தன்னை குறைகூறின ஜனத்திற்காக, தேவனுடைய வழிநடத்துதலை மறந்த ஜனத்திற்காக தேவனிடம் மன்றாடினார். அந்த அழகான ஜெபத்தை எண்ணாகமம் 14: 13-19 வரை உள்ள வசனத்தில் காணலாம்.

.

ஆம், நமக்காக தேவனிடத்தில் பரிந்து பேசுகிற தகப்பனை போன்ற போதகர்கள் இருப்பதால்தான் நாம் குறைகளை சொல்லி, ஆலயத்தையும், போதகர்களையும், ஏன் சில சமயம் நம்மை இரட்சித்து, நம்மை அருமையாய் வழிநடத்தி வரும் கர்த்தரையும் குறை சொன்னாலும், தேவன் கிருபையாய் நம்மை அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தகப்பனை போன்ற தேவ மனிதர்களை நமக்கு போதகர்களாக கிடைக்கப்பெற்ற நாம் எத்தனை பாக்கியவான்கள்! அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.

.

கர்த்தர் மோசேயின் ஜெபத்தினால், 'உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்' என்று கூறி முறுமுறுத்த ஜனத்திற்கு தண்டனை கொடுத்து, ஆனால் அந்த ஜனத்தை அழிக்காமல் விட்டு விடுகிறார். அதன்படியே தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்த அவர்கள் ஒருவரும் கானான் தேசத்தை சுதந்தரிக்கவில்லை! எத்தனை பரிதாபம்! பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை குறித்து கேள்விப்பட்டார்களே ஒழிய, அவர்கள் அதில் கால் எடுத்து வைக்கவில்லை. அந்த தேசத்தின் கனியை புசிக்கவில்லை, அந்த தேசத்தின் நன்மையை அனுபவிக்கவில்லை. வனாந்திரத்திலேயே மரித்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

.

ஒருவேளை நாமும் கூட தேவன் நமக்கு கொடுத்த வாக்குதத்தங்களை மறந்தவர்களாக, நமக்கு ஒரு மோசமான சூழ்நிலை ஏற்படும்போது, அவர் மேல் நாம் நம்பிக்கை வைக்காமல், அவருக்கு விரோமாக முறுமுறுக்கும்போது, தேவன் நமக்கு செய்ய இருந்த, வாக்குதத்தம் செய்த காரியங்களை நாம் அனுபவிக்காமல் போய் விட நேரிடும். நாம் முறுமுறுக்கிறவை எத்தனை முறை என்று கூட தேவன் எண்ணுகிறவராயிருக்கிறார். பாருங்கள் இஸ்ரவேலர் என்னை பத்துமுறை பரிட்சை பார்த்தார்கள் என்று தேவன் கூறுவதை! தேவன் நம்மேல் கோபம் கொண்டு விடாதபடி, நம் வார்த்தைகள் இருக்கட்டும்! நாம் சொல்லும் வார்த்தைகளின்படியே நமக்கு தேவன் செய்யக்கூடும். ஆகவே நாம் கோபத்திலும், விரக்தியிலும், மனம் வெறுத்து பேசும் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையுள்ளவைகளாக இருக்க வேண்டும். தேவன் நமக்கு பாராட்டுகிற கிருபைகளை நாம் நினைத்தவர்களாக, இதுவரை நடத்தினவர் இன்னும் நடத்த வல்லவர் என்று அவர் மேல் நம் பாரத்தை வைத்து, எந்த காரியத்திலும் முறுமுறுக்காமல், அவரை கோபமூட்டும் வார்த்தைகளை பேசாமல், நம்மை காத்து கொள்வோம். கர்த்தர் நம்முடைய வார்த்தைகளை கொண்டே நம்மை நியாயம் தீர்த்துவிடாதபடி, ஜாக்கிரதையாக பேசுவோம். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்' (நீதிமொழிகள் 18:21) என்ற வார்த்தையின்படி, நாம் மரணத்தை தெரிந்து கொள்ளாதபடி ஜீவனை தெரிந்து கொள்ளத்தக்கதாக நம் வார்த்தைகள் இருக்கட்டும். ஆமென் அல்லேலூயா!

.

முறுமுறுக்காமல், வாதாடாமல்

அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம்

கோணலும் மாறுபாடுமான உலகத்தில்

குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்

.
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வாயின் வார்த்தைகளை குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க எங்களுக்கு உணர்த்தியருளும். எதை குறித்தும் முறுமுறுக்காதபடி, தேவன் எங்களுக்கு செய்த நன்மைகளை நினைத்து, உம்மையே சார்ந்து ஜீவிக்க கிருபை செய்யும். இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குதத்தம் செய்யப்பட்ட கானானுக்குள் செல்ல கூடாதபடி அவர்களின் வார்த்தைகள் தடை செய்தது போல நாங்கள் பரம கானான் செல்லக்கூடாதபடி எங்கள் வார்த்தைகள் தடை செய்யாதபடிக்கு எங்கள் வார்த்தைகளை காத்து கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
***********

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.